வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்கச் செய்யும் வழிகள்!

வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்கச் செய்யும் வழிகள்!

Published on

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க அதிகரிக்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்னைகளும், தடைகளும் விலகிச் செல்லும் என்பது நம்பிக்கை. அப்படி வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்கச் செய்யவும், தெய்வீக சக்தி அதிகரிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் தெரியுமா உங்களுக்கு?

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து தெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலன்களைக் கொடுக்கும். உதாரணத்துக்கு, குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வந்தால் வீட்டில் சுப காரியங்கள் அல்லது நன்மைகள் நடப்பதைப் பார்த்திருப்போம். அதுபோல குடும்பமாக சேர்ந்து இறை வழிபாடு செய்யும்பொழுது அங்கு தெய்வ சக்தி அதிகரிக்கிறது என்பது ஐதீகம். எனவே, குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் அழைத்து பூஜையில் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை, அதாவது காலை, மாலை இரு வேளையிலும் நீங்கள் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்பொழுது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மெல்ல மெல்ல மறைவதை நீங்கள் காணலாம். வீடு எப்பொழுதும் நறுமணமாக இருக்க வேண்டும். வீட்டுக்குள் நுழைந்தாலே நல்ல ஒரு நறுமணம் வீசினால் அங்கு தெய்வ சக்தி அதிகரிக்கத் துவங்குமாம். எனவே, பூஜை அறை மட்டுமல்லாமல் வீடு முழுவதும் சாம்பிராணி போடுவது, தூபம் காண்பிப்பது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்து வாருங்கள். இதனால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் விலகும், வீடு நறுமணமாக தெய்வ சக்தி அதிகரித்துக் காணப்படும்.

மந்திர ஒலிகள் கோயிலில் ஒலிக்கப்படுவதால்தான் அங்கு சென்றதும் ஒரு மனநிறைவு கிடைக்கிறது. புதிய நம்பிக்கை வளர்கிறது. அதுபோல வீட்டிலும் மந்திர ஒலிகள் ஒலிக்கப்பட்டால் அதன் மூலம் எழக்கூடிய அதிர்வலைகள் தெய்வ சக்தியை அதிகரிக்குமாம். எனவே, உங்களுக்குத் தெரிந்த மந்திரங்களை சத்தமாக உச்சரித்து பூஜை செய்ய வேண்டும். சிலர் மனதுக்குள்ளேயே முணங்கிக்கொண்டே பூஜை செய்வதை பார்த்திருப்போம். அப்படிச் செய்யக்கூடாது.

நீங்கள் வீட்டில் பூஜை செய்யும்பொழுது சத்தமாக மந்திரங்களைச் சொல்லி உச்சரிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அதிர்வலைகள் தெய்வீக சக்தியை உங்கள் வீட்டில் அதிகரிக்கச் செய்யும். உங்களுக்கு அப்படி மந்திரங்கள், பாடல்கள் பாட முடியவில்லை என்றால் நீங்கள் வேறு வகைகளில் ஒலிக்கச் செய்யலாம். இப்படி செய்யும்பொழுது மந்திரங்களின் அதிர்வலைகள் உங்கள் வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்கும்.

வீட்டில் எப்பொழுதும் பூஜை அறையில் கண்ணாடி ஒன்றை வைத்திருங்கள். கண்ணாடிக்கு தெய்வீக சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆற்றல் உண்டு. குறிப்பாக, குலதெய்வம் அதில் வந்து இறங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் பூஜை அறையில் சிறிய கண்ணாடி ஒன்றை வைக்குமாறு சொல்லப்படுகிறது. மங்கலப் பொருட்களில் ஒன்றாக கண்ணாடி இருப்பதால் சுமங்கலிப் பெண்கள் வீட்டுக்கு வரும்பொழுது மஞ்சள், குங்குமத்துடன் சிறு கண்ணாடி, வெற்றிலை, பாக்கு சேர்த்து கொடுத்து வழி அனுப்பலாம். இதனால் கொடுப்பவர்களுக்கும் அதனை பெறுபவர்களுக்கும் தெய்வீக சக்தி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

logo
Kalki Online
kalkionline.com