புண்ணியத்தால் முளைத்த இறக்கைகள்!

புண்ணியத்தால் முளைத்த இறக்கைகள்!

ரக்கன் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதா தேவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியுடன் அனுமன் தென் திசை நோக்கி வந்தான். அவனுடன் அங்கதன், ஜாம்பவான் போன்றவரும் வந்தனர். அவர்கள் ஒரு குகையில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். அப்போது தங்களது இயலாமையையும் ராவணன் சீதையை கடத்திச் சென்றபோது ஜடாயு அவனுடன் போரிட்டு உயிர் இழந்ததையும் வருத்தத்துடன் பேசிக்கொண்டனர்.

அதைக் கேட்டு இறக்கைகள் இல்லாத பெரிய கழுகு ஒன்று அழுதது. அனுமனும் மற்றவர்களும் அந்தக் கழுகின் அழுகைக்கான காரணத்தைக் கேட்டனர்.

அப்போது அந்த கழுகு, “என் பெயர் சம்பாதி. நான் ஜடாயுவின் அண்ணன். சிறு வயதில் எங்களுக்குள் ஒரு போட்டி யார் அதிக உயரம் பறப்பது என்று. ஜடாயு மிக உயரத்தில் பறந்து சூரியனின் வெப்பம் தாங்காமல் தவித்தான். நான் ஜடாயுவின் மேலே பறந்து எனது இறக்கைகளை விரித்து ஜடாயுவுக்கு நிழல் தந்து காத்தேன். அப்போது சூரிய வெப்பத்தால் எனது இறக்கைகள் எரிந்து விட்டன. அதனால் மண்ணில் விழுந்து நகர முடியாமல் இங்கேயே தங்கிவிட்டேன். ராவணனால் தாக்கப்பட்டு என் தம்பி ஜடாயு இறந்தான் என்ற செய்தியை உங்கள் மூலமாகக் கேட்டு அழுதேன்!” என்ற சம்பாதி, ‘ராவணன் சீதையை கடத்திச் சென்றதைப் பார்த்தேன்’ என்று கூறிவிட்டு, மலை உச்சிக்குச் சென்று இலங்காபுரியைத் தனது கூரிய கண்களால் ஊன்றி பார்த்தது.

பின்பு, ‘இலங்கை தீவில் ஒரு வனத்தில் சீதை இருக்கிறாள். அவளுக்கு காவலாக நான்கு அரக்கிகள் இருக்கின்றனர்!’ என்றும் கூறியது சம்பாதி. இப்படிக் கூறி முடித்ததும் சம்பாதியின் உடலில் புதிய இறக்கைகள் முளைக்கத் தொடங்கின. ஸ்ரீராமனுக்கான பணியில் சிறிதளவு உதவிய புண்ணியத்தால் சம்பாதி புதிய இறக்கைகளைப் பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com