நம் திறமைகள் அனைத்தும் நம் கண்முன்னே தோற்கும்போது காலத்தின் கையில் நாம் ஒரு பொம்மை என்பதை உணர்ந்தால்,
வாழ்க்கையின் முக்கியமான பாடம் கற்றல் என்பதும், நம் மனநிலை ஒன்றைக் கற்கும்போது நாம் குழந்தையாவே மாறிட வேண்டும்.
தினசரி நம்மை சுற்றி ஏதாவத ஒரு விஷயம் நடப்பதும், அதனை நாம் கண்கூடாகவும், கேள்விப்பட்டும் காண்கிறோம். நமக்கான வாழ்க்கையின் பாடம் ஆயிரம் அறிவுரைகளை விட, ஆயிரம் அறிஞர்களை விட, அனுபவம் கற்று தரும் பாடம் நம்மை உயர்த்தும். நல்ல அனுபவங்களை பெற நிதானம் அவசியம்.
வீர சிவாஜி ஒருமுறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறுவேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார். ரொம்ப பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டுக்கு சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டார்.
அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி, சமைத்து முடித்தபின் வெளியில் வந்து "வாப்பா, என அழைத்து சுடச் சுட சோறு பரிமாறினாள்.
சிவாஜி பசி தாளாமல் வேக வேகமாக சுடு சோற்றின் நடுவே கை வைத்து சாப்பிட்டார். அதிக சூட்டினால் சாப்பிட முடியாாமல் தவித்தார்.
உடனே, குறுக்கிட்ட பாட்டி.... ஏம்ப்பா....நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே? என்றாள்.
ஏன் பாட்டி ? எனக் கேட்டார் சிவாஜி.
முதல்ல சுற்றி இருக்கும் சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்து விட்டு, அப்புறமா பெரிய கோட்டைய பிடிக்கணும்.... எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்திற்கு ஆசைப்படக்கூடாது.
அது போல நீ ஓரத்துல இருக்கும் சோற்றை முதலில் சாப்பிடு. அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும். பின் அதை சாப்பிடலாம்.
சிவாஜிக்கு தூக்கி வாரிப் போட்டது. இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தைப் புரிந்து கொண்டவர் போர் நுணுக்கத்தை தனக்கு சொல்லிக் கொடுத்த பாட்டிக்கு உணவளித்தற்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தார்.
அதன்பின் போர் நுணுக்கங்களை அறிந்து வெற்றி வாகை சூடினார்.
யாரையும் கீழ்தரமாக நினைக்க கூடாது. யாரையும் துச்சமாக நினைக்காமல் எல்லோரிடமும் எதைக் கற்று கொள்ள முடியுமோ அதை அனுபவ பாடமாகவும், நம் உயர்வுக்கு நல்ல வழியாகவும், நல்ல அறிவுரையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நல்ல அனுபவங்கள் நம்மை உயர்த்தும்.