இது தெரியுமா?

இது தெரியுமா?

மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தவர் யார்?

மூக்கின் மேல் அணியும் கண்ணாடியை முதன்முதலில் கண்டுபிடித்தது சீனர்கள்தான். ரோமானிய சக்கரவர்த்தி சில வேளைகளில் கண்ணாடி அணிவதுண்டு என்று வரலாறு கூறுகிறது. பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் மூக்குக் கண்ணாடி பரவலாக விற்பனைக்குத் தயாராயிற்று. ஐரோப்பாவில் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மூக்குக் கண்ணாடிகள் பிரபலமாகிவிட்டன. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் பிளாரன்ஸைச் சேர்ந்த மத குருவான அலெக்சாண்டர் டிஸ்பினா என்பவரும் அதே ஊரைச் சேர்ந்த சால்விஜோ ஆர்மதி என்பவரும்தான்.

‘பஸ்’  என்றால் என்ன?

நாம் இப்போது பிரயாணம் செய்யும் பேருந்து வாகனத்தை ‘பஸ்’ என்கிறீர்களே, அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஒரு லத்தீன் வார்த்தையின் கடைசிப் பகுதிதான் இந்த பஸ்’. ஆம்னி பஸ் என்பது அந்த வார்த்தை. அதன் பொருள் ‘எல்லாவற்றுக்கும்’ (For-all) என்பதாகும். ‘பஸ்’ என்றால் எல்லாருக்குமான ஒரு வாகனம்.

உலகின் முதல் பஸ் ஓடியது எப்போது தெரியுமா? 1662ல் பாரிஸ் நகரில். குதிரைகளால் இழுக்கப்படும் பெரிய கோச்சுகளைப் பொதுமக்களின் வசதிக்காக இயக்குவதற்குப் பாஸ்சால் (Paschal) என்பவருக்குப் பதினாலாம் நூயி மன்னர் அனுமதி வழங்கினார். ஒவ்வொரு கோச்சிலும் ஆறு பிரயாணிகள் அமர்ந்து செல்லலாம். எத்தனை தூரமானாலும் ஒரே கட்டணம்தான். இங்கிலாந்தில் முதல் பஸ் சர்வீஸ் ஆரம்பமானது 1834-ல். இருபத்திரண்டு பேர் அமரக்கூடிய கோச்சுகள் ஆரம்பத்தில் பஸ்களைக் குதிரைகள்தான் இழுத்துச்சென்றன. பிறகுதான் மோட்டார் கார் தோன்றியது.

பிளிம்ஸோல் லைன் தெரியுமா?

நீங்கள் கப்பலைப் பார்த்திருக்கிறீர்களா? உங்களில் ரொம்பப் பேர் கடலையே பார்த்திருக்க மாட்டீர்களே. கப்பலை எப்படிப் பார்த்திருக்கப் போகிறீர்கள்? போகட்டும். கப்பல்களின் பக்கவாட்டில் ஓர் இடத்தில் ஒரு வட்டமும் அதன் குறுக்கே ஒரு படுக்கைக் கோடும் வரையப்பட்டிருக்கும். இதற்கு பிளிம்ஸோல் லைன்  (Plimsoll Line) என்று பெயர். எதற்காக இந்தக் குறி? அந்தக் கப்பல் கடலில் பத்திரமாக பிரயாணம் செய்ய அதில்  எவ்வளவு பளுவை ஏற்றலாம் என்பதைக் தெரிவிக்கிறது இந்தக் குறி. அளவுக்கதிமான சாமான்களை ஏற்றிக் சென்றதினால் நடுக்கடலில் பல கப்பல்கள் மூழ்கி மாலுமிகள் உயிரிழந்தனர்.

சாமுவேல் பிளிம்ஸோல் என்ற பிரிட்டிஷ் பார்லிமெண்ட் அங்கத்தினர், கப்பல்களின் பாதுகாப்புக்கு அது எவ்வளவு பளுவைத் தாங்கும் என்பதைக் கணக்கிட்டு இப்படியொரு குறியிட வேண்டும் என்று சட்டத்தையே கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்தக் குறிவரை கப்பலின் அடித்தளம் கடல் நீரினுள் மூழ்கும்படி பண்டங்களை அதில் ஏற்றிச் செல்லலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com