குழந்தைகளே, மும்பை நகரில் ஒரு மனேஜ்மென்ட் கல்லூரியில் நடந்த உண்மை சம்பவம் இது. விடாமுயற்சியின் பலனை விளக்குகிறது. படித்து நீங்களும் பயன் பெறுங்கள்!
அங்கு பல மாணவ, மாணவியர்கள் ஆங்கில வழி பள்ளியில் படித்து வந்தவர்கள். அந்த ப்ரொபாசர் கேட்கும் கேள்விகளுக்கு தங்களுக்கு சரியான விடைகள் தெரியவிட்டாலும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் கூறி வந்தனர். ப்ரொபசர் முதல் இரண்டு வகுப்புகளிலேயே கவனித்து விட்டார், ஒரு குறிப்பிட்ட மாணவன் மட்டும் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் இருந்தான்.
அந்த ப்ரொபசர் கேள்விகளை கேட்டு விட்டு, யார் வேண்டுமானாலும் விளக்கம் கூறலாம், பதில் அளிக்கலாம் என்று முதல் வகுப்பிலேயே கூறிவிட்டார். அவர் யாரையும் குறிப்பிட்டு பதில் அளிக்கும் படி கேட்கவில்லை. அந்த கோர்ஸ் வகுப்புகள் மாலையில் நடைப் பெற்றன. பலர் வேலை செய்பவர்கள். மேல் படிப்பிற்கு அந்த கல்லூரியில் சேர்ந்து பயின்றனர். சிலர் டிகிரி முடித்து விட்டு அங்கு வந்து சேர்ந்து விட்டு வேலைையயும் தேடிக் கொண்டு இருந்தனர்.
அந்த ப்ரொபசர் அவருடைய அனுபவத்தின் அடிப்படையில், அந்த குறிப்பிட்ட மாணவனுக்கு பிறரைப் போல் விடைகளை வகுப்பில் எழுந்து நின்று கூற வேண்டும் என்று ஆவல், ஆனால், தயக்கம் தடுக்கின்றது என்று கண்டு பிடித்து விட்டார்.
மூன்றாவது வகுப்பு துவக்கத்தில் ஒரு நிகழ்வு பற்றி விவரித்து விட்டு, மாணவ, மாணவியர்களின் கருத்துக்களை எழுதி படிக்க சொன்னார்.
சிறிது நேரமும் கொடுத்தார். சில மாணவ, மாணவியர்கள் கருத்துக்களை படித்தனர். எல்லோரும் ( ப்ரொபாசர் உட்பட ) கேட்டனர். அந்த வகுப்பிற்கான நேரம் முடிந்து விட்டதால் அடுத்த வகுப்பில் தொடரலாம் என்றார் ப்ரொபாசர். மாணவ, மாணவியர்கள் வெளியே சென்று விட்டனர்.
அந்த குறிப்பிட்ட மாணவன் தயங்கி வந்து நின்று மராத்தி மொழியில் புதிய கோணத்தில் விளக்கம் அளித்தான். ப்ரொபாசர் அசந்து விட்டார். அந்த மாணவனை பாராட்டினார். அந்த மாணவன் அவருக்கு நன்றி கூறிவிட்டு கூறினான்.
"சார்..! நான் அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். படித்தது மராத்தி மீடியத்தில். ஆங்கிலம் படிக்க, எழுத ஒரு அளவு தெரியும். பேச வாய்ப்பு இல்லாததால் சரளமாக, தப்பு இல்லாமல் பேச கூச்சமாகவும், தயக்கமாகவும் இருக்கின்றது. நீங்கள் நடத்தும் முறையும், மாணவ, மாணவிகளின் திறமைகள் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையும் என்னை உங்களிடம் உதவி கேட்க தூண்டியுள்ளது..!" என்று கூறி அவரை ஆவலுடன் பார்த்தான்.
" என்ன உதவி..?" என்றார், அந்த ப்ரொபசர்.
" சார் எனக்கு ஆங்கிலம் பேச கற்றுக் கொள்ள எளிய வழி ஏதாவது இருந்தால், கூறுங்களேன்..!" என்றான்.
அந்த ப்ரொபாசர் புன்னகைத்து விட்டு கூறினார். "பசி எடுப்பவன் சாப்பிட்டால் தான் அவனுக்கு பசி அடங்கும். அதற்கு உழைக்க வேண்டும். அது போல நீங்கள்
ஆங்கிலம் பேச, எழுத, படிக்க நீங்கள் தான் முழுவதும் விடாமல் தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டும்..!"
"தயக்கம் தடைக்கல். அதை நீக்கி தான் ஆக வேண்டும். நீங்கள் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள பள்ளிக்கு செல்லும் சிறிய மாணவர், மாணவிகளிடம் ஆங்கிலத்தில் மட்டும் பேசுவதை வழக்கப் படுத்திக் கொள்ளவும். நீங்கள் பேசும் போது தவறுகள் செய்தால் அவர்கள் தயங்காமல் சுட்டிக் காட்டுவார்கள். திருத்தி பேச வைப்பார்கள். ஆங்கில பத்திரிகை படிக்கவும். உங்களுக்கு விருப்பமான பகுதிகள் விளையாட்டு, நாட்டு நடப்பு போன்றவை சிறிது சிறிதாக தினமும் படிப்பதை கடமையாக பழகவும். ஏதாவது பதத்திற்கு அர்த்தம் புரியவிட்டால், டிக்க்ஷனரியில் பார்த்து தெரிந்துக் கொண்டு தனியாக ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளவும். குறிப்பாக அந்த ஆங்கில பதத்திற்கு என்ன அர்த்தம் மராத்தி மொழியில் என்று அறிந்து அதையும் குறித்து வைத்துக் கொள்ளவும். பத்து நாட்கள் கழித்து கற்றுக் கொண்ட புதிய பதங்கள் பற்றி நினைவில் இருக்கின்றதா என்று சுய பரிட்சை ( self examination ) செய்யவும். ஆங்கில தினப் பத்திரிகையில் வரும் 'Letters to the Editor' பகுதியில் வரும் கடிதங்களை படித்து எப்படி எழுதுகிறார்கள் என்று அறிந்தும், புரிந்தும் கொள்வதை வழக்கப் படுத்திக் கொள்ளவும்..!"
என்று கூறி அந்த மாணவனுக்கு தன்னம்பிக்கை ( self confidence) அளித்தார்.
அந்த மாணவனும் உண்மையான ஆர்வத்தோடும், ஈடுப்பாட்டுடனும் தனது உழைப்பை வெளிப்படுத்தினான். சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு மும்பையின் ஒரு மின்சார நிலையம் செல்லும் வழியில் அந்த மாணவன் தன் குடும்பத்தாருடன் வந்து கொண்டு இருந்த பொழுது சந்தித்த அந்த ப்ரொபசரை வணங்கினான். குடும்ப நபர்களை அறிமுகம் செய்து வைத்து, ஆங்கிலத்தில் சராளமாக பேசி அவரை அசத்தி , நன்றி கூறினான் அவர் அன்று காட்டிய வழிக்கு. ப்ரொபாசர் மனதார பாராட்டினார்.
உண்மையான இடைவிடா முயற்சி ( sincere continuous efforts) பலன் அளிக்கும் என்பதை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.