

ஒரு நாள் இரண்டு கற்கள் பேசிக் கொண்டன.
ஒரு கல் கேட்டது: "நாம் இருவரும் ஒரே கல்லில் இருந்து தான் வந்தோம். ஆனால் நான் மட்டும் இப்படி படிக்கலாக இருக்கிறேனே? ஆனால் நீ கருவறையில் கற்சிலையாக இருக்கிறாய். இது எப்படி சாத்தியம்?"
அதற்கு மற்றொரு கல் சொன்னது: "என்னை சிற்பி செதுக்கும் போது அவருக்கு நான் வளைந்து, நெளிந்து ஈடு கொடுத்ததால் தான், இன்று என்னை ஒரு சிற்பமாக கருவறையில் வைத்து பலவகையான உணவுப் பொருள்களாலும், ஆடை அணிகலன்களாலும் அலங்கரிக்கவும், அபிஷேகமும் செய்கிறார்கள். நீ எதற்கும் வளைந்து, நெளிந்து கொடுக்காமல் இருந்ததால் தான், உடைபட்டு போய் இன்று படிக்கல்லாக இருக்கிறாய். உன்னை வைத்து எல்லா மக்களும் உன் மேல் ஏறி மிதித்து நடந்து போகிறார்கள்."
வாழ்க்கைக்குப் பொருத்தம்:
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களே! (Student life) இந்த கதையை நீங்கள் ஒரு அறிவுரையாக எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தான் சிற்பிகள் நீங்கள் ஒவ்வொருவரும் வைரக் கற்கள்.
உங்களை ஆசிரியர்கள் கல்வி என்னும் ஆயுதத்தால் செதுக்கும் போது நீங்கள் அவர்களுக்கு வளைந்து, நெளிந்து கொடுத்து அவர்கள் சொற்படி கேட்டு நடந்தால் மட்டுமே, நீங்களும் இந்தச் சமூகத்தில் ஒரு நல்ல ஆளுமையாக வர முடியும்.
அவ்வாறு இல்லாமல் ஆசிரியர்களுக்கு அடிபணியாமல் இருந்தால் நீங்கள் இந்த சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருப்பீர்கள்.
நீங்கள் எந்த கல்லாக இருக்க வேண்டும் என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.