
முதலில் முகம் தெரியாதவர்களுக்கு உதவுதல் கூடாது . எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் என்பதை கடைசிப் பக்கத்தில் படித்து வாசகர்களாகிய நாங்கள் உஷாராக இருந்துக் கொள்கிறோம்.
– மதுரை குழந்தைவேலு, சென்னை – 600 129
'வியாபார மொழி' கதை காமெடியாக இருந்தாலும் "மொழி"முக்கியம் என்ற கருத்தை உணர்த்தியது.
– ஜானகி பரந்தாமன், சென்னை
கல்கி குழும பத்திரிகைகள் மின்னிதழ் வடிவிலேயே பிச்சி உதறுகின்றன. அதுவும் ஆண்ட்ராய்டு ஃபோனில் படிக்க சவுகரியமாக இருக்கிறது.
இருந்தாலும் அச்சு வடிவில் வர சந்தர்ப்பம் உள்ளதா….
– வி.கே.லஷ்மி நாராயணன், திருச்சி
பேரத்தில் தர்மம் பார்க்கக்கூடாது, தர்மத்தில் பேரம் பார்க்க க்கூடாது என்பதை அழகாய் சுட்டிக்காட்டியது "பேரம்" சிறு(சிறந்த) கதை .
'ஒரு தீர்ப்பும் இரண்டு கருத்துக்களும்' கட்டுரை நடுநிலையோடு அறவழியில் எழுதப்பட்டுள்ளது. விடுதலையான குற்றவாளியை ஹீரோவாக கருதுவதும், பல தலைவர்களுக்கு மனு கொடுத்தார் என்பதற்காக அவரது தாயாரை 'தியாகத் தாயாக' போற்றுவதும் வரும் தலைமுறைக்கு தவறான செய்தியை கொண்டு செல்லும் என்று ரமணன் அழுத்தமாக பதிவு செய்துள்ளது , இதுவரை யாரும் சொல்லாதது. பேரறிவாளனுக்கும் அது நல்லதல்ல என்று ரமணன் எழுதியுள்ளது தேசத்தின் குரல்.
'தண்டனை போதும் ' என்று நீதிமன்றம் வெளியே விட்டிருக்கும் அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகள் கூறுவதும், ஆரத்தழுவதும் பெரும் அதிர்ச்சி தரும் எதிர்மறையான செயல் என்பதை ஆணித்தரமாக கட்டுரையில் வெளிப்படுத்திருக்கும் ரமணனை ராஜீவ் காந்தியோடு உயிரிழந்த அத்தனை ஆன்மாவும் உற்று நோக்குகின்றன.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்
"நெஞ்சுக்கு நீதி" – நம்பிப் பார்க்கலாம் என முடிந்திருந்தது "நறுக்"திரை விமர்சனம்.
– ஸ்ரீகாந்த், திருச்சி -621 216.
எஸ்.ராமன் எழுதிய, ' நினைவு நல்லது வேண்டும் ' சிறுகதையைப் படித்து முடித்ததும், சிலிர்ப்பும் சந்தோஷமும் பொங்கியது .மகாகவி பாரதியாரைப் போற்றும் விதமாக படைக்கப்பட்டிருந்தது சிறப்பு. பண்பட்ட இரு மனித உள்ளங்களை படம் பிடித்துக் காட்டியிருந்தது, இன்றைய இளைய தலைமுறைக்கு சரியான பாடம் என்று சொன்னால் மிகையாகாது.
சுஜாதா தேசிகனின் கடைசி பக்கக் கட்டுரை சுவாரஸ்யத்தில் மட்டுமல்ல, விழிப்புணர்விலும் உச்சம்.
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர் – 9791667528
ஒரு தீர்ப்பும் இரண்டு கருத்துக்களும் என்ற பக்கங்களைப் படித்து வந்ததும் பார்வையில் கண்ணீர் வர நெஞ்சம் வலித்தது. ஒரு நாட்டின் பிரதமருக்கு தமிழகத்தில் மிகச் சரியான பாதுகாப்பு கொடுக்காமல் அவர் கொலை செய்யப்பட்டது எவ்வளவு சாபம் என்பதை சொன்னதுடன் கொலைகாரனை பாராட்டுவது எவ்வளவு தவறானது என்பதை படித்ததும் இதுதான் அரசியல் என்று எண்ண வைத்தது.
– ராதிகா, மதுரை
"நாய் ஜென்மமா… மனித ஜென்மமா?" என்ற ஸ்ரீ சிங்கேரி சங்கராச்சார்யா அவர்களின் அருள்வாக்கு மிகவும் அருமை. நல்ல காரியங்களைச் செய்து மனிதனாக வாழ்வதுதான் சிறந்ததே தவிர, உங்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு இருந்தால் பணக்கார வீட்டு நாய் போல தான் நம் வாழ்க்கை அமையும் என்று அருமையான தத்துவத்தை சொன்னது பாராட்டுக்குரியது.
– உஷாமுத்துராமன், கோவை
"இன்னும் எத்தனை காலம்தான்…" என்ற கடைசி பக்க சுஜாதா தேசிகன் அவர்களின் அனுபவம் ஒருபுறம் நகைச்சுவையாக இருந்தாலும் மறுபுறம் அவருக்கு என்ன ஆயிற்றோ என்ற எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. இதற்காகவே அவர் சீக்கிரம் நாவல் எழுத வேண்டும் என்று கடவுளிடம் வேண்ட வைத்தது. ரசித்து படிக்க வைத்த கடைசிப்பக்கம்.
– கிருஷ்ணன், மதுரை -6
ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட 'தேசத்துரோக' சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது தலையத்தில் சொல்லியிருப்பது போல . . மத்திய அரசே சட்ட நீக்கத்திற்காக முனைப்புகளை மேற்கொள்ளவேண்டும்.
– சந்தோஷ் குமாரி, மும்பை