தலையங்கம்.கடந்த சில வாரங்களாக சில அரசு பள்ளிகளில் நடைப்பெற்ற மாணவர்களின் ஒழுங்கீனங்களைக் காட்டும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரவிக்கொண்டிருக்கிறது. ஆசிரியரை ஆபாசமாகத் திட்டுவது, வன்முறை செயல்களால் பயமுறுத்துவது போன்ற காட்சிகள் – பார்த்தவர்களைப் பதற வைக்கிறது. மாணவர்களை அடித்து வளர்த்தால் இம்மாதிரியான நிலைமை உருவாகாது. பெற்றோர்களுக்குப் பொறுப்பில்லை. ஆசிரியர்களுக்கு இவர்களைக் கையாள உளவியல் பயிற்சி கொடுக்க வேண்டும் போன்ற பலவிதமான கருத்துகள் பேசப்படுகின்றன..தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் லட்சக்கணக்கான குழந்தைகள் படிக்கிறார்கள். ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை ஊடகங்கள் பெரிது படுத்தி "எல்லா அரசுப் பள்ளிகளுமே இப்படித்தான் இருக்கிறது" என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன. ஆனால் ஒரு சில மாணவர்களின் செய்கை குடம் பாலில் கலந்த துளி விஷம் போலப் பரவக்கூடிய அபாயமிருப்பதையும் நாம் ஒதுக்கிவிடமுடியாது. இந்த நிலை ஏற்பட்டதற்கு யார் பொறுப்பு?.மாணவர்களைப் புரிந்துக்கொள்ள முடியாத ஆசிரியர்களா? குழந்தைகளின் நடவடிக்கைகளைச் சரியாகக் கவனிக்காத பெற்றோர்களா? இத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களா?.இதை ஆராயும் முன் கடந்த இரண்டாண்டுகளாக நம் சமூகம் கடந்துவந்த சூழலைக் கவனிப்போம்..இதன் பின்புலத்தில் முக்கியமாக இருப்பது, கொரோனா காலம். கொரோனா காரணமாக 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக் கூடங்கள் திடீரென மூடப்படுகின்றன. "கொரோனாவின் முதல் ஆறு மாதத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக் கூடாது" என்ற சூழல் உருவாக்கப்படுகிறது. இந்த சூழலில் இரண்டு வருடங்களாக வீட்டில் அடைபட்டுக் கொண்டிருந்த குழந்தைகளின் மனநிலை எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும். அதுவும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்களின் குடும்பப் பொருளாதார சூழ்நிலைமிக மோசமானதாகியிருந்தது..இந்தச் சூழலில் மாணவர்கள் இப்போது மீண்டும் பள்ளிக்குள் நுழைகின்றனர். அவர்களைப் பாடவைப்பது, ஆடவைப்பது, நல்ல உணவளிப்பது, விளையாட்டில் ஈடுபடுத்தி சிறிது சிறிதாக அவர்களைப் படிப்பின் பக்கம் வரவழைக்கும் முயற்சிகளை பள்ளிகள் செய்திருக்க வேண்டும். அதை அரசு முன்னெடுத்திருக்க வேண்டும். குழந்தைகளைச் சமநிலைக்கு கொண்டுவரவே ஒரு மாதம் தேவைப்பட்டிருக்கும்..ஆனால், இந்தச் சூழலில் "உடனடியாக ஆசிரியர்கள் எல்லா பாடத்தையும் முடிக்க வேண்டும்" என்ற பள்ளிக் கல்வி அதிகாரிகளின் அழுத்தத்தினால் இயந்திரங்களைப் பராமரிப்பதுபோல் மாணவர்கள் பராமரிக்கப்பட்டனர். தாக்குப்பிடிக்க முடியாத மாணவர்கள் தவறிழைக்கிறார்கள்..அப்படித்தவறிழைக்கும் மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? நிச்சயமாகத் தண்டிக்கப்படத்தான் வேண்டும். ஆசிரியர்களின் கெளரவம் காக்கப்பட வேண்டும். ஆனால் மாணவர்களின் பதின் பருவ காலத்தில்தான் இம்மாதிரியான தவறுகள் நடக்கும். இந்த வயதில்தான் அவர்கள் அன்புக்காக, அரவணைப்புக்காக, உறவுக்காக, புரிதலுக்காக ஏங்குவார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..இந்தப் புரிதலை ஏற்படுத்தும் பொறுப்பு நமது சமூகத்தின் அங்கமாக இருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது. இன்றைய பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இன்றைய மாணவர்கள் விரல் நுனியில் விரியும் உலகத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் வேறு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பல பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை..இதற்கு மாற்றுப் பள்ளிகளில்தான் மாணவர்கள் தேடமுடியும். ஆனால், அங்கு ஆசிரியர் – மாணவர்கள் உறவும் முற்றிலுமாக உடைந்துவிட்டது. பாடம் நடத்துவது, டெஸ்ட் வைப்பது, மார்க் போடுவது அவ்வளவுதான் தங்கள் வேலை என எண்ணும் ஆசிரியர்கள்தான் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்கள், மாணவர்களுடன் தங்களது நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்களுடன் அமர்ந்து கல்வி தவிர்த்துப் பல விஷயங்களைப் பேசவேண்டும். பிரச்னைக்குரிய மாணவர்களிடம் ஆசிரியர்கள் பேசுவதன் மூலம்தான் இதனைச் சரிசெய்ய முடியும். பாடமும் உரையாடலும் சேர்ந்ததுதான் இன்றைய கல்வி என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். "நம் ஆசிரியர் நிறைய அறிந்தவர். அவர் நம்மீது அன்பு கொண்டிருக்கிறார். நமக்கு உதவப்போகிறார்" என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும். "இதற்காக உளவியல் நிபுணர்களை கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்" என்ற அவசியம் இல்லை. தங்களது ஆசிரியர்கள் தங்களுக்கு எப்படிக் கற்பித்தார்கள் என்பதை ஆசிரியர்கள் நினைவு கொண்டாலே போதும்..குழந்தைகள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள், இதுபோன்ற வீடியோவை பகிர மாட்டார்கள். சட்டப்படி இது தவறானது. இளம் சிறார் நீதி சட்டத்தின்படி காவல்துறையினர் சிறார்களின் காணொளிகளைப் பரப்புபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கமுடியும். இனி இம்மாதிரியான வீடியோக்கள் வந்தால், அது தங்கள் குழந்தையாக இருந்தால் எப்படி பகிராமல் இருப்பார்களோ, அதுபோல் பகிராமலிருப்பதை சமூக கடமையாக கருதிப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்..நிகழ்ந்தவை மீண்டும் நிகழாமலிருக்கச் செய்யும் பொறுப்பு, பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் மட்டுமில்லை, இவர்கள் அல்லாத இந்த சமூகத்தின் அங்கமான அனைவருக்கும் இருக்கிறது.
தலையங்கம்.கடந்த சில வாரங்களாக சில அரசு பள்ளிகளில் நடைப்பெற்ற மாணவர்களின் ஒழுங்கீனங்களைக் காட்டும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரவிக்கொண்டிருக்கிறது. ஆசிரியரை ஆபாசமாகத் திட்டுவது, வன்முறை செயல்களால் பயமுறுத்துவது போன்ற காட்சிகள் – பார்த்தவர்களைப் பதற வைக்கிறது. மாணவர்களை அடித்து வளர்த்தால் இம்மாதிரியான நிலைமை உருவாகாது. பெற்றோர்களுக்குப் பொறுப்பில்லை. ஆசிரியர்களுக்கு இவர்களைக் கையாள உளவியல் பயிற்சி கொடுக்க வேண்டும் போன்ற பலவிதமான கருத்துகள் பேசப்படுகின்றன..தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் லட்சக்கணக்கான குழந்தைகள் படிக்கிறார்கள். ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை ஊடகங்கள் பெரிது படுத்தி "எல்லா அரசுப் பள்ளிகளுமே இப்படித்தான் இருக்கிறது" என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன. ஆனால் ஒரு சில மாணவர்களின் செய்கை குடம் பாலில் கலந்த துளி விஷம் போலப் பரவக்கூடிய அபாயமிருப்பதையும் நாம் ஒதுக்கிவிடமுடியாது. இந்த நிலை ஏற்பட்டதற்கு யார் பொறுப்பு?.மாணவர்களைப் புரிந்துக்கொள்ள முடியாத ஆசிரியர்களா? குழந்தைகளின் நடவடிக்கைகளைச் சரியாகக் கவனிக்காத பெற்றோர்களா? இத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களா?.இதை ஆராயும் முன் கடந்த இரண்டாண்டுகளாக நம் சமூகம் கடந்துவந்த சூழலைக் கவனிப்போம்..இதன் பின்புலத்தில் முக்கியமாக இருப்பது, கொரோனா காலம். கொரோனா காரணமாக 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக் கூடங்கள் திடீரென மூடப்படுகின்றன. "கொரோனாவின் முதல் ஆறு மாதத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக் கூடாது" என்ற சூழல் உருவாக்கப்படுகிறது. இந்த சூழலில் இரண்டு வருடங்களாக வீட்டில் அடைபட்டுக் கொண்டிருந்த குழந்தைகளின் மனநிலை எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும். அதுவும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்களின் குடும்பப் பொருளாதார சூழ்நிலைமிக மோசமானதாகியிருந்தது..இந்தச் சூழலில் மாணவர்கள் இப்போது மீண்டும் பள்ளிக்குள் நுழைகின்றனர். அவர்களைப் பாடவைப்பது, ஆடவைப்பது, நல்ல உணவளிப்பது, விளையாட்டில் ஈடுபடுத்தி சிறிது சிறிதாக அவர்களைப் படிப்பின் பக்கம் வரவழைக்கும் முயற்சிகளை பள்ளிகள் செய்திருக்க வேண்டும். அதை அரசு முன்னெடுத்திருக்க வேண்டும். குழந்தைகளைச் சமநிலைக்கு கொண்டுவரவே ஒரு மாதம் தேவைப்பட்டிருக்கும்..ஆனால், இந்தச் சூழலில் "உடனடியாக ஆசிரியர்கள் எல்லா பாடத்தையும் முடிக்க வேண்டும்" என்ற பள்ளிக் கல்வி அதிகாரிகளின் அழுத்தத்தினால் இயந்திரங்களைப் பராமரிப்பதுபோல் மாணவர்கள் பராமரிக்கப்பட்டனர். தாக்குப்பிடிக்க முடியாத மாணவர்கள் தவறிழைக்கிறார்கள்..அப்படித்தவறிழைக்கும் மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? நிச்சயமாகத் தண்டிக்கப்படத்தான் வேண்டும். ஆசிரியர்களின் கெளரவம் காக்கப்பட வேண்டும். ஆனால் மாணவர்களின் பதின் பருவ காலத்தில்தான் இம்மாதிரியான தவறுகள் நடக்கும். இந்த வயதில்தான் அவர்கள் அன்புக்காக, அரவணைப்புக்காக, உறவுக்காக, புரிதலுக்காக ஏங்குவார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..இந்தப் புரிதலை ஏற்படுத்தும் பொறுப்பு நமது சமூகத்தின் அங்கமாக இருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது. இன்றைய பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இன்றைய மாணவர்கள் விரல் நுனியில் விரியும் உலகத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் வேறு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பல பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை..இதற்கு மாற்றுப் பள்ளிகளில்தான் மாணவர்கள் தேடமுடியும். ஆனால், அங்கு ஆசிரியர் – மாணவர்கள் உறவும் முற்றிலுமாக உடைந்துவிட்டது. பாடம் நடத்துவது, டெஸ்ட் வைப்பது, மார்க் போடுவது அவ்வளவுதான் தங்கள் வேலை என எண்ணும் ஆசிரியர்கள்தான் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்கள், மாணவர்களுடன் தங்களது நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்களுடன் அமர்ந்து கல்வி தவிர்த்துப் பல விஷயங்களைப் பேசவேண்டும். பிரச்னைக்குரிய மாணவர்களிடம் ஆசிரியர்கள் பேசுவதன் மூலம்தான் இதனைச் சரிசெய்ய முடியும். பாடமும் உரையாடலும் சேர்ந்ததுதான் இன்றைய கல்வி என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். "நம் ஆசிரியர் நிறைய அறிந்தவர். அவர் நம்மீது அன்பு கொண்டிருக்கிறார். நமக்கு உதவப்போகிறார்" என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும். "இதற்காக உளவியல் நிபுணர்களை கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்" என்ற அவசியம் இல்லை. தங்களது ஆசிரியர்கள் தங்களுக்கு எப்படிக் கற்பித்தார்கள் என்பதை ஆசிரியர்கள் நினைவு கொண்டாலே போதும்..குழந்தைகள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள், இதுபோன்ற வீடியோவை பகிர மாட்டார்கள். சட்டப்படி இது தவறானது. இளம் சிறார் நீதி சட்டத்தின்படி காவல்துறையினர் சிறார்களின் காணொளிகளைப் பரப்புபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கமுடியும். இனி இம்மாதிரியான வீடியோக்கள் வந்தால், அது தங்கள் குழந்தையாக இருந்தால் எப்படி பகிராமல் இருப்பார்களோ, அதுபோல் பகிராமலிருப்பதை சமூக கடமையாக கருதிப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்..நிகழ்ந்தவை மீண்டும் நிகழாமலிருக்கச் செய்யும் பொறுப்பு, பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் மட்டுமில்லை, இவர்கள் அல்லாத இந்த சமூகத்தின் அங்கமான அனைவருக்கும் இருக்கிறது.