
இந்தியாவின் கடற்படை வரலாற்றில் இதுவரை கட்டப்பட்டதில் மிகப் பெரியதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலுமான ''INS விக்ராந்த்" கப்பலை பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அதிநவீன ஆட்டோமேஷன் அம்சங்களுடன் கூடிய போர்க் கப்பலின் செயல்பாடுகளை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க் கப்பல் ஐ.என்.எஸ் விக்ராந்த்.
சமஸ்கிருதத்தில் 'விக்ராந்த்' என்றால் 'துணிச்சலானவர்' என பொருள். 'விக்ராந்த்' என்ற பெயர், சில பத்தாண்டுகளுக்கு முன்பே நம்மில் பலருக்கு அறிமுகமானது. இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்தப் பெயரில்தான் அழைக்கப்பட்டது. கடற்படை சேவையில் இணைய தயார் நிலையில் விக்ராந்த் போர் கப்பல் பிரிட்டிஷ் கடற்படையிடம் இருந்து 1961இல் இந்திய கடற்படை சேவையில் சேர்க்கப்பட்டபோது, அந்தக் கப்பல் ''ஐ.என்.எஸ். விக்ராந்த்" என அழைக்கப்பட்டது. 1997இல் அந்த கப்பல் அதன் சேவையை நிறைவு செய்தது.
அதைத்தொடர்ந்து, இன்றைய விக்ராந்த் கப்பல் சுமார் 1,700 வீரர், வீராங்கனைகளின் பணி வாழ்விடமாக விளங்கப் போகிறது. இதுநாள் வரை இந்தக் கப்பல் அதன் கட்டுமான பணிக்காக 2,000 ஊழியர்களுக்கு வேலை கொடுத்து வந்திருக்கிறது.
விக்ராந்த் கப்பலுக்குள் வெவ்வேறு பகுதிகள் உள்ளன. உள்ளே 2,300க்கும் மேற்பட்டோர் இப்போது வேலை செய்கிறார்கள். கப்பலுக்கு உள்ளே நுழைந்த மறுகணமே இது ஒரு கப்பல் என்பதை நீங்கள் எளிதாக மறந்து விடுவீர்கள். ஆம் அது ஒரு குட்டி நகரம்.
262 மீட்டர் நீளம், கிட்டத்தட்ட 60 மீட்டர் உயரம் இருக்கும் இந்தக் கப்பல் நடுக்கடலில் பயணம் செய்யும்போது, எவ்வளவு உயர அலைகள் வந்தாலும் அதன் தாக்கம் உள்ளே தெரியாது. அதுவே துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தால், கப்பலுக்குள் எந்த சலனமும் இருக்காது. விசாலமான பாதைகளும் ஏணிகளும் கப்பலை கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் இணைக்கின்றன. அதனால் எளிதாக இதனுள் நடமாடலாம்.
இது வெறும் போர் கப்பல் மட்டுமின்றி, இதில் 30 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் வசதியைப் பெற்றுள்ளது.
விமான தளத்தின் அளவு கிட்டத்தட்ட 12,500 சதுர மீட்டர், கிட்டத்தட்ட இரண்டரை ஹாக்கி மைதானங்களின் அளவைக் கொண்டது. ஒரே நேரத்தில் 12 போர் விமானங்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்களை இங்கிருந்து இயக்க முடியும். இது நமது முந்தைய விமானம் தாங்கி கப்பல்களைவிட பெரியது. ஆனால், உலகில் விமானந்தாங்கி கப்பல்களில் இதற்கு அண்ணன்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
பிரிட்டன் ராயல் கடற்படைக்கு சொந்தமான 'அரசி எலிசபெத்' என்ற பெயரிலான போர்க்கப்பல், சுமார் 40 விமானங்களைத் தாங்கியிருக்கிறது.
அமெரிக்க கடற்படையின் 'நிமிட்ஸ் கிளாஸ்' கப்பல் 60 விமானங்களைத் தாங்கிச் செல்லும் ஆற்றல் கொண்டுள்ளது.
விக்ராந்தின் ஹாங்கரில் இரண்டு ரஷ்ய தயாரிப்பு விமானங்களான மிக் 29K போர் விமானம் மற்றும் கேமோஃப் 31 ரக முன்னெச்சரிக்கை ஹெலிகாப்டர் பின் முனையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மற்ற போர்க் கப்பலைப் போல இல்லாமல், ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் வழங்கும் நன்மை, பயணத்தின் தேவைக்கேற்ப ஒரு முழு விமான நிலையத்தையும் இயக்கும் ஆற்றலைக் கொண்டதாக இறுக்கும்.
விக்ராந்தின் சேர்க்கையுடன், இந்தியா இப்போது இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்களை கொண்டுள்ளது. ஆனால், இந்திய கடற்படையோ இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து மேலும் ஒரு போர்க்கப்பல் தேவை என்கிறது.