என்னிடம் சரணடைகிறவன் சிறந்த பக்தன்

என்னிடம் சரணடைகிறவன் சிறந்த பக்தன்
Published on

டி.வி. ராதாகிருஷ்ணன்

டுத்து உத்தவர் கிருஷ்ணனைக் கேட்டார்…

"கண்ணா…பக்தன் என்பவன் யார்? நீங்கள் எப்படிப்பட்ட பக்தனை விரும்புகிறீர்கள்? எப்படிப்பட்ட பக்தி சிறந்தது?

உங்களை சரணடைந்த எனக்கு விளக்கிச் சொல்லுங்கள். தாங்கள் இந்தப் பிரபஞ்சத்தையும்  படைத்து, சர்வ  ஜீவராசிகளையும் உண்டாக்கிக் காத்து நிற்பவர், மற்றும் அதனின்று தனித்து நிற்பவர்… எனக்கு அருள் புரிவீர்களாக.

கிருஷ்ணன் சொல்ல ஆரம்பித்தார்.

எனது பக்தன் என்பவன் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், இரக்கமும்  உடையவனாகவும், எந்த உயிர்களிடமும் பகைமை பாராட்டாமலும்… பொறுமையுடன் வாழ்பவன்.

அவனது மனது ஆசைகளால் அலைகழிக்கப்படாமல், தனது இந்திரியங்களை அடக்கி, எந்தவிதப் பொருளையும் தனக்கெனச் சேர்க்காமல் வெளிவேலைகளில் ஈடுபடாமல் அளவாக உயிர்வாழ மட்டும் சாப்பிட்டு, தன் மனத்தை நிலைநிறுத்தி, என்னை நினைத்து யோகம் செய்ய வேண்டும்.

எப்பொழுதும் விழிப்புடனும், பொறுமையுடனும், பசி, தாகம், காமம், சோகம், தேய்தல், மரணம் ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டவனாகவும், தனக்கென ஒரு புகழ் என்று அலையாமலும், மற்ற உயிர்களிடம் இரக்கம்,  தயை உடையவனாகவும் இருந்து கர்மங்களில் நன்மை, தீமையை உணர்ந்து கர்மங்களில் ஈடுபடாது என்னை ஆராதிக்க வேண்டும்.

நான் காலத்துக்குக் கட்டுப்படாதவன். இந்த பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டவன், எல்லாவற்றுக்கும் மூல காரணமானவன் என்பதை உணராமல், அப்படியிருந்தும் என்னிடம் சரணடைகிறவன் சிறந்த பக்தன். அப்படிப்பட்டவன் அறியாமைக்கும் அப்பாற்பட்ட பக்தியுடையவன்.

என்னைப் பார்த்தும், தொட்டும், ஆராதனை செய்தும், சேவை செய்தும், புகழ் பாடியும், உருவத்தை வணங்கியும், அதுபோல என் பக்தர்களை வணங்கியும்,எனது புகழையும் செயல்களையும் பாடி, என் மீது நம்பிக்கை வைத்தும், எனது கதைகளைக் கேட்டும், என்னை நினைத்து தியானம் செய்தும், எல்லாப் பொருள்களையும் எனக்கு அர்ப்பணித்து என்னை சரணாகதி அடைந்தும், எனது வாழ்க்கை நிகழ்ச்சிகள் பற்றிக் கேட்டும், எனது கோயில்களில் புனித நாட்களில் விழாக்கள் கொண்டாடியும், பாட்டுப்பாடி, நடனம் ஆடி, வாத்திய இசைகள் வாசித்தும்,  வேதங்கள் ஓதியும், ஊர்வலங்கள் வந்தும், வருடத்தின் புனித நாட்களில் பூஜைகள் செய்தும், எனது உருவங்களை கோயில்களில் சுயமுயற்சியால் நிறுவியும், கட்டப்பட்ட என் கோயில்களை எவ்விதக் குறையுமில்லாமல் நிர்வாகம் செய்தும், சுத்தமாக வைத்திருந்தும், வெறும் புகழுக்கு ஆசைப்படாமலும், யாரிடமும் கடினமான வார்த்தைகள் கூறாமலும், தன்னைப் புகழ்ச்சி செய்யாமலும், எனக்கு விற்கப்பட்ட பொருள்களைத் தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தாமலும், உலகில் எல்லோரும் ஆசைப்படும் பொருளை எனக்கு அர்ப்பணித்தும், தான் ஆசைப்படும் பொருள்களை எனக்கு அர்ப்பணித்தலும் ஆகியவற்றை செய்தால் பல நன்மைகள் உண்டாகும்.

கிருஷ்ணனை வழிபடும் முறை

சூரியன், நெருப்பு, அந்தணன், பசு, பக்தன், ஆகாயம், காற்று, நீர், பூமி, பக்தனின் உடம்பு மற்றும் எல்லா உயிர்களிலும் என்னை நினைத்து வழிபட்டால்… அந்த வழிபாடு என்னை ஆராதிப்பதாகும்.

சூரியனை வேதம் ஓதுதலாலும், நெருப்பை நெய்யால் ஆகுதி செய்தலாலும், அந்தணர்களை  உணவளித்து உபசரிப்பதாலும், பசுக்களுக்குப் புல் கொடுப்பதாலும், ஆகாயத்தைத் தியானம் செய்தலாலும், காற்றை பிராணாயாமம் செய்வதாலும், நீரை… அர்க்கியம் கொடுப்பதாலும்… பூமியை உயர்ந்த இடத்தில் மந்திரங்களைச் சொல்லி சுத்திகரிப்பதாலும், உடலிலுள்ள ஆன்மாவை, இறைவனுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தை உணவாக அளிப்பதாலும்… உலகிலுள்ள எல்லாவற்றிலும் நான்…கலந்திருப்பவனென நினைத்துச் சம மனநிலையோடு பூஜிக்கலாம்.

என்னை எல்லாவற்றிலும், நான்கு கைகள், சங்கு… சக்கரம், கதை, தாமரைகள் கொண்ட உருவத்தோடு மனதில் தியானிக்க வேண்டும்.

தீயில் ஆகுதியாகும் உணவுப் பொருட்களைப் படைத்தல், மற்றும் கோயில் கட்டுதல், எனது பக்தர்களைக் காப்பாற்றுதல் போன்ற செயல்களைச் செய்பவர்கள் தீவிர பக்தியால் என்னை அடைவார்கள்.

இதைத்தவிர, என்னை அடைய பக்தி மார்க்கத்தில் வேறு வழி கிடையாது.

இனி உனக்கு ரகசியமானதைச் சொல்ல விரும்புகிறேன். காரணம், நீ என்னுடைய உதவியாளனும், நண்பனுமாவாய் என்று  உத்தவரிடம் கிருஷ்ணன் மேலும் சொல்ல ஆரம்பித்தார்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com