டிஜிட்டல் மோசடிகள்

டிஜிட்டல் மோசடிகள்
Published on

வினோத்

 இந்தியாவைப் பொறுத்தவரையில் இதுவரை நடந்த குற்றங்களின் அடிப்படையில்  ரிசர் வங்கி  20 வகை மோசடிகளைப் பட்டியிலிடுகிறது.  இதில் வங்கி சார்ந்தவை 14, வங்கி சாராத நிதி மோசடி 6 என்கிறது.

ஃபிஷிங் இணைப்புகள்

இந்த முறையில், நிதி மோசடியில், போலியான மூன்றாம் தரப்பு வலைதளத்தை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப்படும் வலைத் தளம் பிரபலமான ஒரு வங்கி அல்லது பிரபலமான மின் வணிக நிறுவனங்களின் வலைதளத்தின் சாயலாக இருக்கக்கூடும். ஒரு எழுத்து மாரியிருக்கும். அவசரத்தில் படிக்கும்போது அவை அந்த பிரபல வங்கியுடையது போலவே தோன்றும்.

அப்படி உருவாக்கப்படும் வலைதளத்தின் இணைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது சமூக வலைதளங்கள் மூலம் அனுப்பி, வங்கிகள் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட தகவல்களை கணக்கு எண், பாஸ்வேர்ட்,  பின் நம்பர் போன்றவற்றை  வாடிக்கையாளரிடம் பெறுவார்கள்.

இப்படி நடக்கும் மோசடிகளிலிருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது?

  • முன் அறிமுகமில்லாத, சரிபார்க்கப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • எஸ்எம்எஸ் (SMS) அல்லது மின்னஞ்சல் மூலமாக, முன்அறிமுகமில்லாத வலைதள இணைப்புகளைப் பெறும் பட்சத்தில் அதை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும்.
  • வாடிக்கையாளர் தாங்கள் வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்கிறார்களா? என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்
  • இதனால் இப்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் வங்கித்தளத்துக்குச் செல்லும் போது உங்களுக்கு அது எஸ்.எம்.எஸில் உறுதி செய்யப்படுகிறது.

திரைப் பகிர்வு செயலி / தொலைநிலை தொழில்நுட்பம் மோசடிகள் (Frauds using screen sharing app / Remote access)

நிதி மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளரை ஏமாற்றி, போலியான வலைதள இணைப்புகள் கொண்டு, திரைப் பகிர்வு செயலியை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ய தூண்டுவார்கள். பிறகு திரைப் பகிர்வு செயலி மூலம் வாடிக்கையாளர்களின் கைப்பேசி அல்லது மடிக்கணினி திரை பகிர்வு செய்யப்பட்டு, அதில் பகிரப்படும் நிதி பரிவர்த்தனை தகவல்கள் திருடப்படும் .

இந்த  நிதி மோசடியிலிருத்து எப்படி தப்புவது?

வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் சாதனங்களில் ஏதேனும் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொள்ள, திரைப் பகிர்வு செயலியை பதிவிறக்கம் செய்ய கேட்டுக்கொள்ளப்படும் பட்சத்தில், இணையதள வங்கி பரிவர்த்தனை தகவலை, சாதனங்களில் உள்ள மற்ற பரிவர்த்தனை செயலிகளிலிருந்து முதலில் நீக்க வேண்டும்.

  • திரை பகிர்வு பயன்பாடு சம்பந்தமான செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இலவச எண்களை தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட திரை பகிர்வு செயலி பாதுகாப்பானதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • திரை பகிர்வு பயன்பாடு தொடர்பான செயலியைப் பயன்படுத்திய பிறகு, சாதனங்களில் இருந்து அதை நீக்கிட வேண்டும்.
  • எல்லாவற்றையும் விட புத்திசாலித்தனமானது எவராகயிருந்தாலும் உங்கள் ஸ்கிரீனை ஷேர் செய்யாதீர்கள்.

ஏடிஎம் கார்டு ஸ்கிம்மிங் (ATM card skimming)

நிதி மோசடி செய்பவர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மிங் (skimming) சாதனங்கள் மூலம், வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டின் தகவல்களை திருடுவர். அப்படி திருடப்படும் தகவல்கள் மூலம், போலியான ஏடிஎம் கார்டுகள் கொண்டு நிதி மோசடி நடக்கும், அல்லது வாடிக்கையாளர் பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் இயந்திரங்களின் அருகே மற்றொரு வாடிக்கையாளர்கள் போல் நின்று மோசடியாளர்கள், ஏடிஎம் கடவுச்சொற்களை கண்காணித்து பிறகு நிதி மோசடியில் ஈடுபடுவார்கள்.

இதிலிருந்து காத்துக்கொள்ள

வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு முன்பு குறிப்பிட்ட ஏடிஎம் இயந்திரத்தில் கூடுதலாக ஏதேனும் இயந்திரம் அதில் பயன்படுத்தப்பட்டு உள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். கார்டு சொருகுமிடத்தில் வேறு எதுவுமில்லை என்பதை கையால் தடவியே உறுதி செய்ய முடியும். எதேனும் மாறுதலாக உணர்ந்தால் அந்த எடிஎம் மை பயன் படுத்தாதீர்கள்.

  • வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏடிஎம் கடவுச்சொற்களை போடும் போது மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் அதை மறைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் அருகாமையில் தெரியாத நபர்கள் இருக்கும்பட்சத்தில் கடவுச்சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  •  எடி எம்மில் பணம் வாரவிட்டால் உங்கள் பின் எண்ணை மற்றவருக்கு சொல்லி உதவக் கேட்காதீர்கள். வங்கி ஊழியர்களை நாடுங்கள்
  • கடவு சொற்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருங்கள்
  • கடவு சொல்லை ஏ டி எம் கார்ட் இருக்கும் கவரின் மீது எழுதி வைக்காதீர்கள்

QR குறியீடு ஸ்கேன் மூலம் நிதி மோசடி (Scam through QR code scan)

நிதி மோசடி ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களை ஏதோ ஒரு வகைகளில் QR குறியீடு ஸ்கேனை பயன்படுத்த நிர்ப்பந்தம் செய்வார்கள். அதன் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பரிவர்த்தனை செய்வதற்கான அனுமதியை பெறுவார்கள்.

தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்:

  • QR குறியீடு ஸ்கேனை பயன்படுத்தும் பரிவர்த்தனை செய்யும் செயலிகள் மீது கவனமாக இருக்கவும்.
  • பணத்தை நேரடியாகப்  பெறுவதற்காக எந்த QR குறியீட்டையும் ஸ்கேன் செய்ய வேண்டாம். அப்படியான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை.

எல்லாவற்றையும் விட முக்கியமானது.  உங்கள் ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்ட்களில் ஏதேனும் மோசடி நடந்துவிட்டால் உடனே வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள். இதற்காக இப்போது 24X7 இணைப்புகள் இணைய தள தொடர்புகள் வங்கிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சைபர் கிரைம் போலிஸில் புகார் கொடுங்கள். இப்போது இதை இணையம் வழியாகவே பதிவு செய்யலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com