
திருப்பதி தினசரியை மேய்ந்துக் கொண்டு இருந்தார்.
வயது கட்டையில் போக வேண்டிய வயது. மெலிந்த எக்ஸ்ரே காப்பி போல் இருந்தார். உடம்பில் உள்ள எலும்புகளை எண்ணி விடலாம். சிரித்தால் பொக்கை வாய் விட்டாலாச்சார்யா குகைப் போல் இருந்தது. யாரும் 'நாக்கு மேல் பல்லு போட்டு பேசாதே!'ன்னு சொல்ல முடியாது… அதேபோல் 'பல்லைக் காட்டாதே!னும் திருப்பதியிடம் கேட்க முடியாது. ஒரு பல்லும் இப்பவோ அப்பவோன்னு இருந்தது.
மாடு தவிட்டு தண்ணியை உறிஞ்சுவது போல் காபியை உறிஞ்சினார். அந்த செய்தி கண்ணை உறுத்தியது.
நான்காவது முறை படித்துக் கொண்டு இருந்தபோது பழனி பாட்டி வந்துவிட்டாள்.
"என்ன பலமான ஓசனை..?"நக்கலாக கேட்க, தினசரியிலிருந்து பார்வையை வெளிக் கொணர்ந்தார்.
"இது பாரு…" தினசரியை நீட்டினார்.
பழனி பாட்டி "சீ…இந்த வயசிலா?"
வெட்கப்பட்டாள் .
வெட்கப் படறமாதிரி எந்த செய்தியும் நாம சொல்லலையே என டீ ஷர்டில் காபியை நனைத்த மாதிரி எட்டிப் பார்த்தார்.
அவருடைய டீ ஷர்ட்'காபி ஷர்ட்'ஆகியிருந்தது.
ஒரு சின்ன வயது பெண் உள்ளாடையுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
"அசடு… அசடு… இதையா பார்க்க சொன்னேன்…"சலிப்புடன் சொல்லி விட்டு,"இவளோட பெரிய 'பிரா'ப்ளமா போச்சே!"
முணுமுணுத்துக் கொண்டார்.
விரல்களை நீட்டி அந்தச் செய்தியைக் காட்டினார்.
"ம்… இதெல்லாம் திறமை இருக்கறவங்க செய்யறது. நீங்க திறமை எந்த கடையில விக்குதுன்னு கேட்கறவர். உங்களுக்கு சரிபட்டு வராது!உருப்படியா ஏதாவது வேலையை பாருங்க!"என்று சொல்லி திருப்பதி முகத்தில் இடித்தாள் பழனி பாட்டி.
விக்கினார் திருப்பதி.
"பார்த்து பார்த்து … எந்த ஆஸ்பத்திரியிலும் இடமில்லை.."
"என் கடைசி ஆசை.."திருப்பதி விக்கலை நிறுத்த எச்சில் விழுங்கியவாறு சொன்னார்.
கணவனை கரிசனத்தோடு பார்த்தாள் பழனி பாட்டி.
திருப்பதியை பார்க்க பாவமாக இருந்தது.
'பாவம் கிழம் ஏதோ ஆசைப்படுது'
சம்மதம் சொல்லி விட்டாள் பழனி பாட்டி.
"பேரப் பிள்ளைகள வைச்சு ஏதாவது செய்யுங்க.."
மனைவியின் அனுமதி கிடைத்ததில் திருப்பதி குதிக்க, இடுப்பு வேட்டி நழுவ,"என்ன இது கருமாந்திரம்?"
பாட்டி கத்த, கீழே குனிந்து பார்த்தார்.
பேத்தியின் லெக்கின் போட்டிருந்தார்.
"உம்ம பேத்தி நேத்தெல்லாம் அவளோட லெக்கின்ஸ் காணோம்னு தேடிட்டு இருந்தா… அதை எடுத்து .…
இன்னும் என்னென்ன கூத்து நடக்க போகுதோ இந்த வீட்டில?" முணுமுணுத்துக் கொண்டே காலியாக இருந்த காபி டம்பளர் எடுத்துக் கொண்டு கிச்சன் நோக்கிப் போனாள் பழனி பாட்டி.
பக்கத்து அறையிலிருந்து பலமான சத்தம்…
ஓடினார் திருப்பதி.
டெல்லி தரையில் வயிற்றைச் பிடித்துக் கொண்டு உருண்டான்.
அப்புறம் பாம்பு நெளிவது போல் நெளிந்தான்.
கண்களில் நீர். ஆனால், சிரிக்கிறான். பயந்து போனார் திருப்பதி.
'அட! ஜெனிட்டிக்ஸ்ஸா… நானும் அடிக்கடி வித்தியாசமா ஏதாவது செய்வேன். இவனும் என் மாதிரி…'
நினைத்தவாறே கட்டிலைப் பார்த்தார்.
குப்புறக்கிடந்தது அந்த புத்தகம்.
எடுத்தார்.
நகைச்சுவை மன்னன் நந்துசுந்து அவர்கள் எழுதிய 'மாட்டி யோசி' நாவல் அது.
காரணம் புரிந்தது திருப்பதிக்கு.
"டேய் டெல்லி எழுந்திருடா! டெல்லி எருமை மாதிரி…"காளைப் போல் கனைத்தார்.
"என்ன தாத்?"
"அது என்னடா 'தாத்'?"
"ம்… தாத்தாவ தான் செல்லமா சுருக்கி 'தாத்'ன்னு கூப்பிட்டேன்!"
"ஓகே டா . என்னோட கடைசி ஆசையை நீதான் முடிச்சி வைக்கணும்!"
"என்ன கொள்ளி போடணுமா?"
"சீ…உன் நாரை வாயை மூடு!சானிடைசர் போட்டு கழுவு!"
" நான் என்ன வாயில் மீனையா பிடிச்சு வைச்சு இருக்கேன்?"
"டேய் … நான் சொன்னது நாத்தம் பிடிச்ச வாயை சொன்னேன்.."
"சரி விஷயத்துக்கு வாங்க தாத்!"
"ம்.. வர்றேன்…"கட்டிலில் அவன் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு தினசரியை புரட்டி, அந்த செய்தியைக் காட்டினார்.
வாசித்தான்.
"நான் என்ன செய்யணும்.."
"அந்த பையன்… ஒரு பொடியன். அவன் போட்ட வீடியோ மில்லியன் லைக் விழுந்திருக்கு…அதுபோல நான் ஒரு வீடியோ போடணும்!"
"எப்படி?"
சரியாக அறையில் நுழைந்தாள் பேத்தி பவானியும் இளைய பேரன் மதுரையும்.
தாத்தின் ஆசையை நக்கல் நையாண்டியுடன் சொல்லி முடித்தான் டெல்லி.
பவானி சொன்னாள்.
"இது விபரீத ஆசையா இருக்கே?"
அவள் சொன்னதை மதுரை ஆமோதித்தான்.
"ஏதாவது உருப்படியா தாத்க்கு ஐடியா கொடுங்க… இல்லைன்னா வாயை திறக்காதீங்க!"டெல்லி கத்தினான்.
"நீ ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணு! அரைமணி நேரம் ஓடறமாதிரி இருக்கணும்!" திருப்பதி கெஞ்சினார்.
"யார் ஓடறமாதிரி தாத்…" பவானி கேட்க,
"அய்யோ! வீடியோவ சொன்னேன்…"என்றார் திருப்பதி.
"எதைப்பத்தி தாத்?" மதுரை சந்தேகம் கேட்டாள்.
"அதைத்தான் இப்ப யோசிக்கணும்..!" திருப்பதி சொன்னார்.
"சரி யோசிக்கலாம்!"டெல்லி சொன்னான்.
ஆளுக்கு ஒரு மூலை விட்டத்தைப் பார்க்க தொடங்கினர்.
நேரம் ஓடியது.
பழனி பாட்டி ரூமை வெளியிலிருந்தவாறே எட்டிப் பார்த்தாள்.
நாலா திசையில் உட்கார்ந்து இருந்த அவர்களைப் பார்த்து, "என்ன நாலு பக்கம் உட்கார்ந்து இருக்கீங்க?"
"ம்… அஞ்சு பக்கம் இல்லை. அதான் நாலு பக்கம் பார்த்து உட்கார்ந்து இருக்கோம்…"
மதுரை சொன்னான்.
"பாட்! "
பவானி அழைத்தாள்.
"என்னது 'பாட்'? நான் என்ன பானை மாதிரியா வயிறு வைச்சிருக்கேன்..?"
கோபித்துக் கொண்டாள் பழனி பாட்டி.
" 'பாட்' ன்னா பாட்டியோட சுருக்கம்."
"சரி புரிஞ்சுது பவ்!"
"பவ் வா?"
"ம்… பவானியோட சுருக்கம்…"
பாட்டி சொன்னாள்.
"எனக்கு ஒரு ஜோக் ஞாபகம் வருது…"மதுரை முப்பத்தி ரெண்டு பல் தெரிய, இளித்தவாறு சொன்னான்.
"சொல்லி தொலைடா!"பவானி கத்தவே செய்தாள்.
அவன் சொல்லாமல் விடமாட்டான் என்பது பவானிக்கு மட்டுமில்லை, மற்றவர்களுக்கும் நன்றாக தெரியும்.
மதுரை எப்பொழுதும் அப்படிதான்… சின்ன வயசிலிருந்தே ஜோக்ன்னு சொல்லி விட்டு அவனே சிரித்துக் கொள்வான்.
"ஒரு பையன் ஒரு ரூம்ல ரொம்ப நேரம் தனியா நாலு மூலையைப் பார்த்திட்டு இருந்தான், ஏன்?"
மதுரை கேட்க அனைவரும் அமைதி காத்தனர்.
அவன் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லிவிட்டால் அடுத்தடுத்த கேள்விகளை கொடுப்பான். அது இந்த நேரத்தில் தேவையில்லை என்பதால் அனைவரும் அமைதியாக அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்தனர்.
"ம்… பதில் சொல்லு எங்களுக்கு தெரியலை!"டெல்லி கேட்டான்.
"அவன் … நாலட்ஜ் கெயின் பண்றானாம்!"மதுரை மட்டும் வாய்விட்டு சிரிக்க, மற்றவர்கள் அவனை எரித்து விடுவது போல பார்த்தனர்.
"தாத்… இப்படி எல்லாம் யோசிச்சா எந்த ஐடியாவும் வராது… சினிமா கதை விவாதம் மாதிரி லாட்ஜ்ல ஒரு ரூமைப் போட்டு யோசனை பண்ணலாம்…" பவானி சொல்ல,
"பவ்.. சொல்றது சரிதான்!"டெல்லி சொன்னான்.
"டேய்… சினிமாகாரங்க ரூம் போட்டு யோசிக்கறாங்கன்னா அதுக்கு பல காரணங்கள் இருக்கு. பல மொழி படம் பார்த்து அதுல இருந்து காப்பி அடித்து கதை பண்ணுவாங்க. அது நமக்கு சரிப்படாது ! செலவும் ஆகும்.."
மறுத்தார் திருப்பதி.
"செலவெல்லாம் பண்ணாம எப்படி தாத் மில்லியன் லைக் வர்ற மாதிரி வீடியோ ஷுட் பண்ண முடியும்?"டெல்லி கேட்க,
"அப்ப நாங்க உங்களுக்கு உதவறத்தா இல்லை.." பவானி சொன்னாள்.
திருப்பதி சிறிது நேரம் யோசித்தார். அரைக்குறை மனதுடன் சம்மதம் சொன்னார்.
"சரி… ஹோட்டல்ல போய் டிஸ்கஷன் பண்ணுவோம்! ஆனா ஒரு கண்டிஷன் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் ரூம் போடுவேன்"திருப்பதி திருப்தியுடன் சொன்னார்.
அடுத்த அரை மணி நேரத்தில் கால் டாக்சி வரவழைத்து, ஜாகை லாட்ஜிற்கு மாறியது.
"தாத்… வீட்டிலிருந்து கிளம்பி வந்தது டயர்டாயிடுச்சி… கொஞ்சம் ரெஸ்ட்…"பவானி சொன்னாள்.
கடுப்பாகப் பார்த்தார் திருப்பதி.
பத்து நிமிடம் ஓய்வு முடிந்தது.
மதுரை சொல்லாமல் கொள்ளாமல் அறையை விட்டு வெளியேறினான்.
கால் மணி நேரம் கழித்து அறைக்குள் ஸ்னாக்ஸ் பாக்கெட் சரங்களை மாலையாக போட்டவாறு சல சல என்ற பிளாஸ்டிக் சத்தத்துடன் வந்து அமர்ந்தான் மதுரை. எல்லோருக்கும் ஸ்னாக்ஸ் பாக்கெட் பிரித்துக் கொடுத்தான்.
ஆளாளுக்கு வேறு வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டு என்ன கதை செய்வது என்பதைத் தவிர வேறு பல விஷயங்களை யோசித்தவாறு காரம் இனிப்பு கலந்து சிப்ஸ்களை பொறுக்கி, நொறுக்கி கொண்டு இருந்தனர். அரைமணி நேரம் ஓடியிருந்தது.
திருப்பதி பொக்கை வாயில் குர்குரேவை ஊறவைத்து விழுங்கிக் கொண்டே மற்றவர்களை நோட்டமிட்டார்.
பவானி சோஃபாவில் கண்மூடி படுத்து தூங்கிவிட்டிருந்தாள். அவளிடமிருந்து மெல்லிய குறட்டை சத்தம் ஏசி ரீங்காரத்தை மீறிக் கேட்டது.
மதுரை கட்டிலில் வவ்வால் போல் உடம்பை பாதி கட்டிலிலும் மீதிப் பாதி தரையிலும் கிடத்தி யோசித்துக் கொண்டிருந்தான்.
டெல்லி தனக்குத் தானே பேசிக்கொண்டு நோட்டில் ஏதோ குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.
பவானியை மட்டும் எழுப்பி, "இதுக்குத்தான் வந்தியா? வீட்ல உங்க அம்மா வேலைப்பாங்கன்னு இங்க வந்து நிம்மதியா தூங்கறீயா?"என்று கேட்டு முறைத்தார் திருப்பதி.
"தாத்…நிறைய யோசனை பண்றேன்…கம்முனு இருமுங்க…சீ…சீ…இருங்க.." தெத்துப் பல் தெரிய கத்தினாள்.
திருப்பதி இருமினார்.
மேலும் அரைமணி நேரம் ஓடிப்போயிருந்தது.
மீண்டும் ஒவ்வொருவரையும்
நோட்டமிட்டார் திருப்பதி திருப்தியில்லாமல்.
மிக சீரியஸாக பவானி முகவாயில் கை வைத்து யோசித்துக் கொண்டு இருந்தாள்.
"என்னம்மா ஐடியா கிடைச்சிடுச்சா?"
"ம்…கிடைச்சிடுச்சி… எல்லோரும் கிட்ட வாங்க.."
ஆர்வமாக எல்லோரும் தரையில் உட்கார்ந்து கொண்டனர்.
"ஒரு நாள் காட்டில் கிழம்…என்ற டைட்டில்ல தாத்தை நடுக்காட்டில் விட்டு விட்டு வந்திடுவோம்… அவர் அங்கிருந்து எப்படி வெளிவருகிறார்ன்னு ஷுட் பண்ணுவோம்…திரில்லிங்கா.
செமயா இருக்கும் எப்படி என் ஐடியா…"சொல்லி விட்டு சிரித்தாள்.
"ஆகாது ஆகாது.. எனக்கு இது கொஞ்சம் கூட செட் ஆகாது.. எனக்கு சிங்கம், புலின்னா பயம்.."உதறியவாறு சொன்னார்.