இன்னும் எத்தனை காலம் தான் ….

இன்னும் எத்தனை காலம் தான் ….
Published on

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

லைப்பை படிக்கும் போது 'ஏமாற்றுவார்' என்ற வார்த்தை உங்கள் மனதில் இந்நேரம் உதித்திருந்தால் தொடர்ந்து படிக்கலாம்.

சென்ற ஆண்டு 'ஹர்ஷிதா' என்ற பெண் பழைய சோபாவை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய விளம்பரம் கொடுக்கிறார். ஒருவர் 'எனக்கு வேண்டும்' என்று அவள் வங்கிக் கணக்கில் முன் பணம் அனுப்பி, பின்னர் அவளுக்கு ஒரு 'க்யூ ஆர் கோடு' (QR code) லிங்க் அனுப்பி "இதை ஸ்கேன் செய்தால மீதி பணம் டிரான்ஸ்பர் ஆகிவிடும்" என்று சொல்ல, ஸ்கேன் செய்தவுடன் பணம் வருவதற்கு பதில், அவள் கணக்கிலிருந்து 20 ஆயிரம் மற்றொரு கணக்கிற்கு சென்றது. அதிர்ச்சியுடன், விசாரிக்க "சாரி மேடம், தப்பான கோட் அனுப்பிவிட்டேன்" என்று இன்னொரு கோடை அனுப்பி,  ஸ்கேன் செய்த போது மேலும் 14 ஆயிரத்தை  இழந்தார்.

ஹர்ஷிதா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள். சென்ற வாரம் இதேபோல என் நண்பர் ஒருவர் 'கூகிள் பே' மூலம் ஏமாந்திருக்கிறார்.

"ரகசிய உறுப்புகள் புஷ்டி அடைய செய்வதிலிருந்து, உங்களுக்கு லாட்டரி அடித்திருக்கிறது, 10 ஆயிரம் கட்டினால் அடுத்த ஒரு வாரத்தில் நீங்கள் 2ஜி வாங்கும் அளவிற்கு பல கோடி அனுப்புகிறோம்" என்று டிசைன் டிசைனாக தினமும் ஏமாற்றுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் நெட்பிளிக்ஸில் 'ஜம்தாரா' (Jamtara) என்ற படத்தை பார்த்தேன். அதில் இந்த மாதிரி ஏமாற்றுவதற்கு வகுப்பறை வைத்து கோச்சிங் கொடுக்கிறார்கள்.

ஏமாறுவதற்கு இந்த நிமிடத்தில் பலர் தயாராக இருக்கிறார்கள். இதை எழுதும் நானே ஏமாந்திருக்கிறேன். (ஏமாந்துகொண்டே இருந்திருக்கிறேன் என்று எழுதியிருக்க வேண்டும்)

நான் ஏமாந்த கதையை ஒரு நாவலாக எழுதலாம் என்று இருக்கிறேன். அதை தண்ணீரில் நனைத்த காடா துணிபோல கடைசிப் பக்க வாசகர்களுக்கு சுருக்கமாக தருகிறேன்.

18 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர், அலுவலகம், செல்போன்  எல்லாம் புதிதாக இருந்த ஒரு காலை, குறும்பான செய்தி குறுஞ்செய்தியாக வந்தது.  "உங்களுக்குக் கல்யாணம் ஆகவில்லை, என்றால் நான் உங்களைக் கல்யாணம் செய்திருப்பேன்… சுதா"

"யாராக இருக்கும்" என்று யோசிக்கும் அந்த "போன எஸ்.எம்.எஸ்ஸுக்கு  வருந்துகிறேன். நான் கொஞ்சம் அதிகப்பிரசங்கி.  உங்கள் எழுத்தின் ரசிகை … அதனால் அவ்வாறு அனுப்பினேன்… விரைவில் உங்களுடன் பேச ஆசை… நீங்கள் 'ஆம்' என்று சொன்னால் மட்டுமே! – சுதா"

யோசிக்காமல் "ஆம்" என்று பதில் அனுப்பிய  சில நிமிடங்களில் தொலைப்பேசி அழைத்தது.

கதாநாயகிக்கு இனிமையான டப்பிங் வாய்ஸ் குரலில் கலந்திருந்தது. இப்படி விவரித்து எழுதினால் நாவல் ஆகிவிடும். அதனால் இதை எல்லாம் கடாசிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்.

பேசினாள். நான் எதை  எழுதினாலும் உடனே போன் செய்து பேசுவாள். என் நண்பர்கள் யார் என்று அவளுக்கு தெரிந்திருந்தது. அவர்களிடமும் சகஜமாக பேசினாள். எங்கள் நண்பர்கள் குருப்பில் அவளும் சேர்ந்துக்கொண்டாள்.

ஒரு நாள் என்னை அழைத்தாள்  "நான் மருத்துவமனையில் இருக்கிறேன். டாக்டருக்கு வெயிட்டிங். போர் அடிக்கிறது அதனால் இந்த போன்" என்று தனக்கு ஏற்பட்ட  பிரச்னை குறித்து பேச ஆரம்பித்தாள்.

பெண்கள் சம்பந்தப்பட்ட அந்தரங்க பிரச்னையை டாக்டர் போல விவரித்து கூற,  அப்போது புத்திசாலித்தனமான ஒரு காரியத்தை செய்தேன். அந்த தொலைப்பேசியை என் மனைவியிடம் கொடுத்து "ஏதோ பிரச்னையாம்.. அட்வைஸ் கொடு" என்று சொல்ல அவர்கள் உரையாடல் சில நிமிடங்களுக்குப் பின் "டாக்டர் கூப்பிடுகிறாள்" என்று துண்டிக்கப்பட்டது.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து அவள்  மீண்டும் என்னை அழைத்தாள்.  "உங்க மனைவி நல்லா பேசறா. நான் முதலில் அனுப்பிய எஸ்.எம்.எஸ் டெலிட் செய்துவிட்டீர்கள் இல்லையா?" என்று சிரித்தவள்,

"லைனில் இருங்க,  கார்ட் பேமெண்ட் செய்துகொண்டு இருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு சற்று நேர மௌனத்துக்கு  பிறகு "லைனில் இருக்கிறீர்களா ? பேமெண்ட் டிக்ளைன் ஆகிவிட்டது. எனக்கு ஐந்தாயிரம் குறையுது,  நீங்க உடனே எனக்கு அனுப்ப முடியுமா? வீட்டுக்குச் சென்றவுடன் திரும்ப உங்களுக்கு அனுப்பி விடுகிறேன். இட்ஸ் வெரி எம்பர்ராசிங்" என்று அவள் கேட்ட உடனே அனுப்பினேன்.

பணம் அனுப்பிய உடன் "நன்றி!"க்கு பிறகு அவள் தொர்பு எல்லைக்கு அப்பால் சென்றாள். பிறகு தொலைப்பேசி, மெயில் என்று அந்த  ஐந்தாயிரத்தை வாங்குவதற்குள் என் டங்குவார் கழன்றுவிட்டது.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் பல விதங்களில் ஏமாற்றப்பட்டார்கள். அதில் என் அமெரிக்க நண்பர் இவளைக் கல்யாணம் செய்துகொள்ள அமெரிக்காவிலிருந்து பறந்து வந்து,  அவள் வீட்டு கதவைத் தட்டிய போது…

என்ன நடந்தது என்று இங்கே சொல்லாமல், நான் எழுதும் நாவலில் சொல்லுகிறேன்.

முடிவை சொல்லாமல் ஏமாற்றியதற்கு வாசகர்கள் மன்னிப்பார்களாக.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com