ப்ளாகிங்

ப்ளாகிங்
Published on
சுஜாதா தேசிகன்                                               

முதலில் கொஞ்சம் குப்பைகளைக் கிளறிவிட்டு 'ப்ளாகிங்' என்ற வார்த்தையைப் பார்க்கலாம்.

முதல் முறையாக அமெரிக்கா செல்பவர்களுக்கு 'பண்பாட்டு அதிர்ச்சி' (cultural shock) ஏற்படுவது வழக்கம்.  பச்சை அட்டை  நிரந்தரவாசம் செய்யும் நண்பர்களின் முதல் அறிவுரை 'குப்பை போட்டால் சொத்தை எழுதிவைக்க வேண்டும்'  என்பது. அபராதத்துக்குப் பயந்து  குப்பையை ஜோபியில் வைத்துக்கொண்டு குப்பைத் தொட்டியைத் தேட ஆரம்பிப்போம்.

1943ல் ஏ.கே.செட்டியார் எழுதிய பயணக் கட்டுரைகளைச் சமீபத்தில் படிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருக்கிறார்,

அமெரிக்காவின் தென்பகுதி நாடுகளில் உள்ள அமெரிக்கர்களில் சிலர், கண்ட இடங்களிலெல்லாம் எச்சில் துப்பும் பழக்கமுடையவர்கள். அப்பகுதியில் ஒரு சிற்றுண்டிச்சாலையில், "நீங்கள் வீட்டில் எச்சில் துப்பும் பழக்கமுடையவர்களாயிருந்தால், இந்த இடத்திலும் எச்சில் துப்பலாம். வீட்டிலிருப்பதாகவே நீங்கள் எண்ண வேண்டுமென்பது எங்கள் ஆசை" என்ற பலகை மாட்டியிருந்தது. பலகையை மட்டும் நான் பார்க்கவில்லை; பலகையில் கண்டபடி, ஆனந்தமாக எச்சில் துப்பிக் கொண்டிருந்த நாகரிக மனிதர்களையும் அங்கு கண்டேன்!

இன்று அமெரிக்கா அலம்பிவிட்ட மாதிரி சுத்தமாக இருப்பதற்குக் காரணம் அவர்களுடைய சட்டம் மட்டுமே காரணம் இல்லை, நல்ல சுகாதாரக் கலாசாரத்தை வளர்ப்பதும் இன்றியமையாதது என்று தெரிகிறது. அமெரிக்கர்கள் இதை எப்படிச் சாத்தியப்படுத்தினார்கள்? நம்மால் ஏன் முடியாது?

நூறு ஆண்டுகளுக்கு முன் சென்னையின் கருப்பு வெள்ளை படங்களைப் பார்த்தால் எங்குமே குப்பைகள் இல்லாமல், கூவத்தில் படகுகள் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைய சிங்காரச் சென்னை?

சென்ற வாரம் மெரினாவில் நடையின் போது கடற்கரை மணலில் பரவியிருந்த குப்பைகளை நவீன ராட்சச இயந்திரம் சுத்தம் செய்துக்கொண்டிருந்தது. தி.நகரிலிருந்து அண்ணாசாலை வரை நடந்தபோது, சத்தியமூர்த்தி உயர்நிலைப் பள்ளியின் நடைபாதை கழிப்பறையாக மாறியிருந்தது ஒரு நகை முரண். சந்தேகம் இருந்தால் நாளை முகக்கவசமுடன் சென்று பார்க்கலாம்.

என் நண்பர் திரு ஸ்ரீநி சாமிநாதன் 'மாரத்தான்' ஓட்ட வீரர். இந்தியாவில் பல இடங்களில் ஓடியிருக்கிறார். ஓடும்போது இவரை உடனே கண்டுபிடித்துவிடலாம். அவர் தோளில் நீல நிறப் பை ஒன்று இருக்கும். ஓடும் வீரர்கள் கீழே போடும் தண்ணீர் பாட்டில், கப், பிளாஸ்டிக் பை என்று சகல குப்பைகளையும் பொறுக்கி பையில் போட்டுக்கொண்டே, மாரத்தானில் ஓடுவார். இப்படி ஓடும்போது குப்பைகளைச் சேகரிப்பதற்குப் பெயர் 'ப்ளாகிங்' (Plogging)

சில வருடங்களுக்கு முன் அவர் லடாக்கில் ஓடினார். அங்கேயும் அவர் ப்ளாகிங் பையை நிரப்பிக்கொண்டே மூன்றாவதாக வந்தார். இது மட்டும் அல்லாமல், வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் எவை எல்லாம் மறு பயன்பாட்டு முறையில் மீண்டும் உபயோகிக்கலாம்(recycle) என்று பரிசோதித்து வாங்குவது இவர் வழக்கம்.  சமீபத்தில் மறுசுழற்சி குறித்து இரண்டு புத்தகங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

உடனே, "இவரைப் போல ப்ளாகிங் செய்தால் அமெரிக்கா போன்ற குப்பை இல்லாத இந்தியாவைப் பார்க்க முடியும்" என்று எண்ண வேண்டாம். ப்ளாகிங்கிற்கு தேவையே இல்லாமல் இருப்பதுதான் உத்தமம்.

சில வருடங்கள் முன் காஞ்சிபுரத்தில் திரு சுந்தரராஜன் அவர்களின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். மாடிப்படி மேல் காஞ்சிபுரம் தேவபெருமாளும், தாயாரும் காட்சி அளித்தார்கள். என் பக்திக்கு "பெருமாள் தாயாருடன் காட்சி தரும் நிலையில் இல்லையே" என்று படிமேல் ஏறிப் பார்த்தபோது ஆச்சரியங்கள் காத்துக்கொண்டு இருந்தது.

"தாயார் முகம் பழைய தண்ணீர் குவளை, பழைய பிளாஸ்டிக் கூடை பெருமாள் கீரிடம், கைகள் பழைய பைப்.  கண்களுக்கு ப.மூடிகள், துணிகள், துணி உலர்த்தும் கம்பி, அட்டைப் பெட்டி என்று ஒரு மினி காயிலான் கடையே  இருந்தது. இன்னொரு அறையில் சீதையுடன் ராமர், லக்ஷ்மணர்.  அருகில் காஞ்சி பிரம்மோற்சவ விழா வாகனம்" என்று பிரமிப்புகளுடன் கிளம்பியபோது வெளியே ஓர் உடைந்த கல் தூணில் ஆஞ்சநேயர். வழக்கம் போல மக்கள் வெண்ணெய் தடவி பிசுக்காகியிருந்தார்கள்.

"இது…?"

"ஓ. அதுவா.. பழைய சோழ காலத்துத் தூண். கோயில் புனர்நிர்மாணம் செய்யும்போது அதை அகற்றி, வீதியோரத்தில் கிடந்தது, மக்கள் அதன் மீது வெற்றிலையைத் துப்பிக்கொண்டிருந்தார்கள். கல்லை ஒருநாள்  திருப்பிப் பார்த்தேன். ஆஞ்சநேயர் தெரிந்தார். சுத்தம் செய்து வீட்டு முன் நிற்க வைத்தேன். இன்று போவோர் வருவோர் எல்லாம் அதைச் சேவித்துவிட்டுப் போகிறார்கள்.  தேங்காய் கூட உடைக்கிறார்கள்.

ஒரு சின்ன அகல் விளக்கு காற்றிலும் எறிந்துகொண்டு இருந்தது.

இதை எல்லாம் செய்யும் திரு சுந்தரராஜனின் வயது வெறும் 89.

இதுபோன்ற விழிப்புணர்வுகளை நாம் 'டிரெண்டிங்' செய்வதில்லை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com