

அறுபது வருடங்களுக்கு முன்பு பத்து ரூபாய் (ten rupees) எவ்வளவு ஆற்றல் மிக்கதாக இருந்தது என்பதை இந்தக் கட்டுரை வரலாறு, பொருளாதாரம், பணவீக்கம் ஆகிய கோணங்களில் விளக்குகிறது. பண்ட மாற்று முறையிலிருந்து உலோக நாணயம், காகிதப் பணம் வரை வந்த மாற்றங்களையும், பணத்தின் மதிப்பு குறைவதால் இன்றைய மனிதன் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் ஒப்பிட்டு, நேர்மையான உழைப்பின் அருமையை நினைவூட்டுகிறது.
அறுபது வருடங்கள் முன்பு அரசோச்சிய பத்து ரூபாய்!
‘பணம் பாதாளம் மட்டும் பாயும்!’ என்பது முதுமொழி.
‘பணம் என்னடா பணம் பணம்..
குணந்தானடா நிரந்தரம்!’
என்று சொன்னவர்கள்தான்,
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே-இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவர் மனிதரில்லே!’
என்றும் சொல்லி வைத்தார்கள்.
‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்!’
என்ற வள்ளுவர்தான்,
‘ஊழையும் உப்பக்கங் காண்பர் உழைவின்றித்
தாழாது உஞற்று பவர்’
என்று கூறிச் சென்றுள்ளார்.
எல்லாச் செயல்களுமே சூழ்நிலையையும், சந்தர்ப்பத்தையும் கொண்டு அமைபவை என்பதே அனுபவ உண்மை!
கலிகாலத்தில் அதர்மம் தழைத்தோங்கி, ஆசைகள் பெருகும் என்றும் சொல்லிவைத்தார்கள் நம் அறிவு சார்ந்த பெரியோர்கள்!நாம் காணும் அன்றாட நிகழ்ச்சிகள் அவற்றை நிரூபிப்பதாகவே உள்ளன.
உண்மையாக உழைத்துச் சம்பாதிக்கவும், அதனை உரிய வழியில் செலவிடவும் ஒரு சாரார் உள்ள இவ்வுலகில், குறுக்கு வழியில் குபேரர்களாகிக் குதூகல வாழ்க்கை வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்ட மற்றொரு சாராரும் உள்ளனர். இதில் வருத்தம் என்னவென்றால், முன் சாராரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வர, பின் சாராரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதுதான்.
பணம் என்ற ஒன்று கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னால், பண்ட மாற்று முறையே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. எள்ளைக் கொடுத்து நெல்லை வாங்கிக் கொள்வதும், பழங்களைக் கொடுத்து உணவு தானியங்களை வாங்கிக் கொள்வதுமாக அக்காலமுறை இருந்திருக்கிறது.
அவரவர் உற்பத்தி செய்வதை, அவர்கள் தேவைக்கு வைத்துக் கொண்டது போக, மீதியைக் கொடுத்து விட்டுத் தேவையானவற்றைப் பிறரிடமிருந்து பெற்று வந்துள்ளார்கள். அதன் பிறகு கால் நடைகள் செல்வங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. விலங்குகளின் தோல்களும், சங்கு மற்றும் சிப்பிகளும்கூட பணமாகப் பயன்படுத்தப்பட்டனவாம்.
உலோக மற்றும் காகிதப் பணம்:
கி.மு.600 ல் லிடியா நாட்டு (தற்போதைய துருக்கி) மன்னர் அலியாட்ஸ் (Alyattes) அதிகார பூர்வ உலோக நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தங்கம் மற்றும் வெள்ளி கலந்த எலக்ட்ரம் (Electrum) என்ற உலோகத்தால் நாணயங்கள் வெளியிடப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் பகர்கின்றன.
முதல் காகிதப் பணத்தை நமது அண்டை நாடான சீனாவில், ஜென்சாங் மன்னர் (கி.பி 977-1022) தன் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தினாராம். அதிக வெயிட்டான செம்புக் காசுகளை வணிகர்கள் தூக்கிச் சுமப்பதைத் தடுப்பதற்காக, ஜியாவோசி (Jiavozi) என்ற காகிதப் பணத்தை, சிச்சுவான் (Sichuan) மாகாண வணிகர்கள் புழக்கத்திற்குக் கொண்டு வந்தார்களாம்.
நமது இந்திய நாட்டில்,1861 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் அதிகாரபூர்வமாக காகிதப் பணம் புழக்கத்தில் விடப்பட்டதாம். சுதந்திர இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு முதல், ரிசர்வ் வங்கி ரூபாய்த் தாள்களை வெளியிட்டு வருகிறது.
பணத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும்போது, குறைந்த பணத்தைக் கொண்டு அதிகப் பொருட்களை வாங்கலாம். பணத்தின் மதிப்பு குறைந்தாலோ நிறையப் பணத்தைக் கொடுத்துக் குறைவான பொருட்களையே வாங்க முடியும்.
(Too much of money chasing too few goods) பையில் பணத்தைக் கொண்டு சென்று கொட்டி விட்டுக் கையில் பொருட்களை வாங்கி வரும் நிலை இது! இதைத்தான் பணவீக்கம் (Inflation) என்கிறோம். இது ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. உள்நாட்டுப் பொருளாதாரம் அன்றிப் பன்னாட்டுப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இதனைப் பாதிக்கின்றன.
ஒரு நாட்டின் அனைத்துத் தேவைகளையும் அந்நாடே முயன்று பூர்த்தி செய்து கொள்ளுமாயின் அது நல்லதே. ஆனால் இயற்கையின் கோட்பாடு அதற்கு இடந்தருவதில்லை. அதனால்தான் இன்று பன்னாட்டு வணிகம் உச்ச நிலையை எய்தி வருகிறது. கொடுத்து, வாங்கிக் கொள்வதின் மூலம் குவலயம் அமைதியும், நிம்மதியும் பெறும்; அனைத்தும் முறையாகச் செய்யப்பட்டால்.
காலத்தின் கோலம், இன்று மாதம் லட்சக் கணக்கில் சம்பாதிப்பவர்கள் கூட நிம்மதியாக இல்லை. ஐம்பது, அறுபது வருடங்கள் முன்னால் மாதச் சம்பளமாக ரூ 50/- 100/- வாங்கியவர்கள் கூடச் சந்தோஷமாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
எப்படி என்கிறீர்களா?
1960ல், சுமார் 66 ஆண்டுகள் முன்பு, 10 ரூபாயே எப்படி அரசாட்சி செலுத்தியிருக்கிறது என்பதைக் கீழுள்ள அட்டவணையே விளக்கும்!
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference