திருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் “கல்கி எனும் எழுத்தாளுமை” என்கிற தலைப்பில், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள். .அமரர் கல்கி என்றாலே உலகம் முழுவதும் இப்போது என்றல்ல... எப்போதுமே “பொன்னியின் செல்வன்” தான் எல்லோர்க்கும் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட வரலாற்று நவீனம் அது. பொன்னியின் செல்வனை நான் பலமுறை படித்துள்ளேன். என்னுடைய வாசிப்பு எல்லாம் ‘சிந்துபாத்‘, ‘அம்புலிமாமா‘ தொடங்கி வேறு எங்கெங்கோ வாசிப்பில் பயணித்து ‘பெர்ட்ரான்ட் ரசல்‘ வரை இன்னமும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு நூலகத்துக்குள் ஒரு இளைஞனையோ ஒரு பெண்ணையோ நீங்கள் அழைத்துச் சென்றால், முதலில் அந்த அடுக்குகளில் உள்ள புத்தகங்களைத் தொட்டுப் பார்க்கச் சொல்லுங்கள். அடுத்து புத்தகம் எடுப்பார்கள். அதனைப் பிரித்துப் படிக்கத் தொடங்குவார்கள். படிக்கப் படிக்க அவர்களுக்குள்ளே இன்னொரு உலகம் விரியும். அதிலும் அவர்கள் கல்கியின் பொன்னியின் செல்வனைப் படிக்கத் தொடங்கி விட்டால் அவரவர் மன இயல்புக்கேற்ப அந்தந்த கதாபாத்திரங்கள் மனதுக்குள் வந்து தங்கிவிடும். தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் கிடைத்த மாபெரும் கொடை அமரர் கல்கி. பேரறிஞர் அண்ணாவை “தென்னாட்டு பெர்னாட்ஷா” என்று வர்ணிக்கும் அளவுக்கு திறந்த மனதும் பெருந்தன்மையும் கல்கியிடம் இருந்தது. தமிழ்நாட்டில் “அண்ணாவைப் போல பேச வேண்டும் எனமுயற்சித்தவர்கள், கலைஞரைப் போல எழுத வேண்டும் என நினைத்தவர்கள், பாரதியார் போல கவிதைகள் புனைய எத்தனித்தவர்கள், பாரதிதாசன் போல புரட்சிகர எண்ணங்களை புதுக்கவிதை வடிவில் உருவாக்கிட முயன்றவர்கள்“ என்று பல்வேறு தளங்களைப் போலவே “கல்கி போன்று எழுத வேண்டும்” என்று எண்ணியவர்கள் ஏராளம். எல்லோரையும் வாசிக்க வைத்தார். பலரையும் எழுத வைத்தார் கல்கி எனும் எழுத்தாளுமை. .ஒரு துறையில் புகழ் பெற்றவர்களுக்கு முன்பாக, முந்தைய காலக்கட்டங்களில் அதிலே பலரும் இருந்திருப்பார்கள். அதுபோல வரலாற்று நாவல்கள் எழுதுவதிலும் கல்கி அவர்களின் காலத்துக்கு முன்பாக பலரும் தமிழில் வரலாற்று நாவல்கள் எழுதி இருந்துள்ளனர். சரவண முத்துப் பிள்ளை என்பவரும் வரலாற்று நாவல்கள் எழுதியுள்ளார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826 – 1889) அவர்கள் 1879ல் எழுதிய “பிரதாப முதலியார் சரித்திரம்” எனும் புதினம் தான் தமிழின் முதல் நாவல் என்று இன்று வரை நம் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. பி.ஆர். ராஜம்மய்யர் (1872 – 1898) அவர்கள் 1893ல் தன்னுடைய இருபத்தியோராம் வயதில் எழுதியது தான் “கமலாம்பாள் சரித்திரம்”. அ. மாதவையா (1872 – 1925) அவர்கள் 1898, 1899 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எழுதியதுதான் “பத்மாவதி சரித்திரம்”. இவர்களுக்குப் பின்னர் வந்தவர் கல்கி. ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதைவிட... “எப்படி வாழ்ந்தார்” என்பதுதான் சிறப்பு. 1899 – 1954 என 55 வயது வரை வாழ்ந்திருந்த கல்கி அவர்கள், தன்னுடைய வாழ்வின் இறுதிப் பகுதி வரை எழுதி எழுதி தமிழுக்குப் பெரும் கொடையாகத் தந்து விட்டுச் சென்றிருக்கும் “பொன்னியின் செல்வன்” வரலாற்று நாவல் மூலமாக நம் மனங்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வரலாற்று நாவல்களில் தனிப்பெரும் தொடக்கப் புள்ளியாக அமைந்தவர் அமரர் கல்கி. எழுத்துலகில் தன்னைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சக எழுத்தாளர்கள் மீது கூட எவ்வித வன்மமும் காட்டாதவர் கல்கி. தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் புதுமைப்பித்தன். அவர் கல்கியின் படைப்புகளை “வேற்று மொழிப் படைப்புகளின் அப்பட்டமான தழுவல்” என்று சற்று காட்டமாகவே விமர்சித்து வந்தார். அதற்கு கல்கியும் பதில் தந்தார்.“நான் எதையும் மறைக்கவில்லை. ஆங்கில மொழித் தழுவல் படைப்புகள் உண்டுதான். கதையின் தளம் பொதுவானது. கதாபாத்திரங்கள் அப்போது வாழ்ந்தவர்கள். ஒரு எழுத்துப் படைப்பின் சுவை மெருகேற வேண்டி சில கற்பனை பாத்திரங்களையும் சேர்த்துக் கொள்வது உண்டு. என் கற்பனை வளம் தான் எனது எழுத்துகளில் நிறைந்து இருக்கும்” என்றார் கல்கி. புதுமைப்பித்தன் இயற்கை எய்தி விடுகிறார். அவரது குடும்பம் பொருளாதாரச் சிரமங்களை அனுபவிக்கிறது. அப்போது கல்கி தான் பலரிடமும் நிதியுதவி பெற்று, அந்த நிதியினைப் புதுமைப்பித்தன் குடும்பத்துக்குக் கொண்டு சேர்த்தார். திருச்சியில் இருந்து சேலத்துக்குப் பயணம். அதில் சேலத்துக்கு முன்பாக மலைக் குன்றுகள் இரண்டு புறமும் சரிந்திருக்கும். அந்தப் பயணத்தின் போது ஒரு மலைக்குன்றின் உச்சியினைச் சில வினாடிகள்தான் உன்னிப்பாகப் பார்க்கிறார் கல்கி. என்ன விந்தை தெரியுமா? ஒரு நிமிடம் அந்த குன்றின் உச்சியினைப் பார்க்கும் போது, ஒரு மான் நிற்கிற மாதிரி தோற்றம் கண்களுக்குத் தெரிகிறது. ஒரு விநாடி நகர்ந்து சென்றால் மான் தெரியாது. மான் மறைந்திருக்கும். மீண்டும் திரும்பி நடந்து வந்து நின்று பார்த்தால் அந்த மான் நின்று கொண்டிருக்கும். கல்கி எனும் எழுத்தாளுமைக்கு இது போதாதா என்ன? அதனை மையமாக வைத்து பின்னர் கல்கி, “பொய்மான் கரடு” எனும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதுகிறார். “கீழே தரையில் நின்று அந்தக் கரடு முகப்பின் உச்சியில் நான் பார்த்துக் கொண்டிருந்த மான் ஆனது, அப்போதே என் தலைக்குள் வந்து புகுந்து கொண்டது. “பொய்மான் கரடு” எனும் சிறுகதையினை நான் எழுதி முடித்த பின்னரே, அந்த மான் என் தலைக்குள் இருந்து இறங்கி ஓடி விட்டது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார் கல்கி. என் மகள் 2௦௦5ல் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்காக காத்திருந்த நேரம். சேர்க்கை தாமதமானது. என் மகளுக்கு மனம் தாளவில்லை. கொஞ்சம் பதட்டமாகவே இருந்தாள். நான் என் மகளிடம் சொன்னேன்... “பொன்னியின் செல்வன் படி. அதனால் உன் மனப் பதட்டம் தணியும். படிக்கப் படிக்க நீ வேறு உலகத்தில் நீந்தத் தொடங்குவாய்” என்றேன். பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களையும் அவள் முன்னே கொண்டு வந்து வைத்தேன். “இத்தனை பாகங்களா... இத்தனைப் பக்கங்களா” என்று மிரண்டு போனாள். மிரளாதே... முதல் பாகத்தைப் படிக்கக் தொடங்கு என்றேன். முதல் பாகம் படிக்கத் தொடங்கினாள். அதை முடித்து விட்டு இரண்டாம் பாகம் எடுத்துப் படிக்கத் தொடங்கியபோது என்னிடம் பேசுவது கூட கொஞ்சம் குறைந்து போனது. மூன்றாம் பாகம்... நான்காம் பாகம்... படித்து முடித்தாள். மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்கு அனுமதி வந்து விட்டது. ஒருநாள்தான் இடைவெளி. “ஐந்தாம் பாகம் படித்து முடிக்காமல் என்னால் பயணத்தைத் தொடர முடியாது போலிருக்கு அப்பா... என்ன செய்வது” எனக் கேட்டாள். இன்றைய ஒரு நாள் இரவு இருக்கு. ஐந்தாம் பாகம் எடுத்துப் படி. உனக்குத் துணையாக நானும் ஏதோவொரு புத்தகம் எடுத்து உன்னுடன் படிக்கிறேன் என்று சொன்னேன். மகள் ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினோம். நள்ளிரவுக்கு மேல் எனக்குத் தூக்கம் வரவும் நான் படுத்து விட்டேன். அப்போதும் என் மகள் பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் படித்துக் கொண்டிருந்தாள். நேரம் கடந்து போனது. விடியற்காலையில் கண் விழித்து எழுந்து பார்த்தேன். என் படுக்கைக்குக் கீழே தரையில் சுருண்டு படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் என் மகள். அவள் எப்போது படுத்தாள் என்று எனக்குத் தெரியாது. எனது தலையணைக்குக் கீழே ஒரு வெள்ளைக் காகிதம் படபடத்துக் கொண்டிருந்தது. அதை எடுத்துப் பிரித்து பார்த்தேன். அதில் என் மகள் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தாள்... “அப்பா... எனக்கு மிகவும் நல்ல ஒரு செயல் செய்துள்ளீர்கள். பொன்னியின் செல்வன் படித்து முடித்துள்ளதால் என்னை ஒரு “தமிழ்ப் பெண்ணாக” எனக்கே அடையாளம் காட்டியுள்ளீர்கள். நான் ஒரு தமிழ்ப் பெண்ணாக என்னை நானே உணர வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி அப்பா...” என்று எழுதியிருந்தாள். ஒரு வரலாற்று நாவலைப் படிக்கின்ற வாசகியை வாசகனை இதைவிட வேறு என்ன செய்துவிட வேண்டும்?
திருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் “கல்கி எனும் எழுத்தாளுமை” என்கிற தலைப்பில், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள். .அமரர் கல்கி என்றாலே உலகம் முழுவதும் இப்போது என்றல்ல... எப்போதுமே “பொன்னியின் செல்வன்” தான் எல்லோர்க்கும் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட வரலாற்று நவீனம் அது. பொன்னியின் செல்வனை நான் பலமுறை படித்துள்ளேன். என்னுடைய வாசிப்பு எல்லாம் ‘சிந்துபாத்‘, ‘அம்புலிமாமா‘ தொடங்கி வேறு எங்கெங்கோ வாசிப்பில் பயணித்து ‘பெர்ட்ரான்ட் ரசல்‘ வரை இன்னமும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு நூலகத்துக்குள் ஒரு இளைஞனையோ ஒரு பெண்ணையோ நீங்கள் அழைத்துச் சென்றால், முதலில் அந்த அடுக்குகளில் உள்ள புத்தகங்களைத் தொட்டுப் பார்க்கச் சொல்லுங்கள். அடுத்து புத்தகம் எடுப்பார்கள். அதனைப் பிரித்துப் படிக்கத் தொடங்குவார்கள். படிக்கப் படிக்க அவர்களுக்குள்ளே இன்னொரு உலகம் விரியும். அதிலும் அவர்கள் கல்கியின் பொன்னியின் செல்வனைப் படிக்கத் தொடங்கி விட்டால் அவரவர் மன இயல்புக்கேற்ப அந்தந்த கதாபாத்திரங்கள் மனதுக்குள் வந்து தங்கிவிடும். தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் கிடைத்த மாபெரும் கொடை அமரர் கல்கி. பேரறிஞர் அண்ணாவை “தென்னாட்டு பெர்னாட்ஷா” என்று வர்ணிக்கும் அளவுக்கு திறந்த மனதும் பெருந்தன்மையும் கல்கியிடம் இருந்தது. தமிழ்நாட்டில் “அண்ணாவைப் போல பேச வேண்டும் எனமுயற்சித்தவர்கள், கலைஞரைப் போல எழுத வேண்டும் என நினைத்தவர்கள், பாரதியார் போல கவிதைகள் புனைய எத்தனித்தவர்கள், பாரதிதாசன் போல புரட்சிகர எண்ணங்களை புதுக்கவிதை வடிவில் உருவாக்கிட முயன்றவர்கள்“ என்று பல்வேறு தளங்களைப் போலவே “கல்கி போன்று எழுத வேண்டும்” என்று எண்ணியவர்கள் ஏராளம். எல்லோரையும் வாசிக்க வைத்தார். பலரையும் எழுத வைத்தார் கல்கி எனும் எழுத்தாளுமை. .ஒரு துறையில் புகழ் பெற்றவர்களுக்கு முன்பாக, முந்தைய காலக்கட்டங்களில் அதிலே பலரும் இருந்திருப்பார்கள். அதுபோல வரலாற்று நாவல்கள் எழுதுவதிலும் கல்கி அவர்களின் காலத்துக்கு முன்பாக பலரும் தமிழில் வரலாற்று நாவல்கள் எழுதி இருந்துள்ளனர். சரவண முத்துப் பிள்ளை என்பவரும் வரலாற்று நாவல்கள் எழுதியுள்ளார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826 – 1889) அவர்கள் 1879ல் எழுதிய “பிரதாப முதலியார் சரித்திரம்” எனும் புதினம் தான் தமிழின் முதல் நாவல் என்று இன்று வரை நம் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. பி.ஆர். ராஜம்மய்யர் (1872 – 1898) அவர்கள் 1893ல் தன்னுடைய இருபத்தியோராம் வயதில் எழுதியது தான் “கமலாம்பாள் சரித்திரம்”. அ. மாதவையா (1872 – 1925) அவர்கள் 1898, 1899 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எழுதியதுதான் “பத்மாவதி சரித்திரம்”. இவர்களுக்குப் பின்னர் வந்தவர் கல்கி. ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதைவிட... “எப்படி வாழ்ந்தார்” என்பதுதான் சிறப்பு. 1899 – 1954 என 55 வயது வரை வாழ்ந்திருந்த கல்கி அவர்கள், தன்னுடைய வாழ்வின் இறுதிப் பகுதி வரை எழுதி எழுதி தமிழுக்குப் பெரும் கொடையாகத் தந்து விட்டுச் சென்றிருக்கும் “பொன்னியின் செல்வன்” வரலாற்று நாவல் மூலமாக நம் மனங்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வரலாற்று நாவல்களில் தனிப்பெரும் தொடக்கப் புள்ளியாக அமைந்தவர் அமரர் கல்கி. எழுத்துலகில் தன்னைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சக எழுத்தாளர்கள் மீது கூட எவ்வித வன்மமும் காட்டாதவர் கல்கி. தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் புதுமைப்பித்தன். அவர் கல்கியின் படைப்புகளை “வேற்று மொழிப் படைப்புகளின் அப்பட்டமான தழுவல்” என்று சற்று காட்டமாகவே விமர்சித்து வந்தார். அதற்கு கல்கியும் பதில் தந்தார்.“நான் எதையும் மறைக்கவில்லை. ஆங்கில மொழித் தழுவல் படைப்புகள் உண்டுதான். கதையின் தளம் பொதுவானது. கதாபாத்திரங்கள் அப்போது வாழ்ந்தவர்கள். ஒரு எழுத்துப் படைப்பின் சுவை மெருகேற வேண்டி சில கற்பனை பாத்திரங்களையும் சேர்த்துக் கொள்வது உண்டு. என் கற்பனை வளம் தான் எனது எழுத்துகளில் நிறைந்து இருக்கும்” என்றார் கல்கி. புதுமைப்பித்தன் இயற்கை எய்தி விடுகிறார். அவரது குடும்பம் பொருளாதாரச் சிரமங்களை அனுபவிக்கிறது. அப்போது கல்கி தான் பலரிடமும் நிதியுதவி பெற்று, அந்த நிதியினைப் புதுமைப்பித்தன் குடும்பத்துக்குக் கொண்டு சேர்த்தார். திருச்சியில் இருந்து சேலத்துக்குப் பயணம். அதில் சேலத்துக்கு முன்பாக மலைக் குன்றுகள் இரண்டு புறமும் சரிந்திருக்கும். அந்தப் பயணத்தின் போது ஒரு மலைக்குன்றின் உச்சியினைச் சில வினாடிகள்தான் உன்னிப்பாகப் பார்க்கிறார் கல்கி. என்ன விந்தை தெரியுமா? ஒரு நிமிடம் அந்த குன்றின் உச்சியினைப் பார்க்கும் போது, ஒரு மான் நிற்கிற மாதிரி தோற்றம் கண்களுக்குத் தெரிகிறது. ஒரு விநாடி நகர்ந்து சென்றால் மான் தெரியாது. மான் மறைந்திருக்கும். மீண்டும் திரும்பி நடந்து வந்து நின்று பார்த்தால் அந்த மான் நின்று கொண்டிருக்கும். கல்கி எனும் எழுத்தாளுமைக்கு இது போதாதா என்ன? அதனை மையமாக வைத்து பின்னர் கல்கி, “பொய்மான் கரடு” எனும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதுகிறார். “கீழே தரையில் நின்று அந்தக் கரடு முகப்பின் உச்சியில் நான் பார்த்துக் கொண்டிருந்த மான் ஆனது, அப்போதே என் தலைக்குள் வந்து புகுந்து கொண்டது. “பொய்மான் கரடு” எனும் சிறுகதையினை நான் எழுதி முடித்த பின்னரே, அந்த மான் என் தலைக்குள் இருந்து இறங்கி ஓடி விட்டது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார் கல்கி. என் மகள் 2௦௦5ல் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்காக காத்திருந்த நேரம். சேர்க்கை தாமதமானது. என் மகளுக்கு மனம் தாளவில்லை. கொஞ்சம் பதட்டமாகவே இருந்தாள். நான் என் மகளிடம் சொன்னேன்... “பொன்னியின் செல்வன் படி. அதனால் உன் மனப் பதட்டம் தணியும். படிக்கப் படிக்க நீ வேறு உலகத்தில் நீந்தத் தொடங்குவாய்” என்றேன். பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களையும் அவள் முன்னே கொண்டு வந்து வைத்தேன். “இத்தனை பாகங்களா... இத்தனைப் பக்கங்களா” என்று மிரண்டு போனாள். மிரளாதே... முதல் பாகத்தைப் படிக்கக் தொடங்கு என்றேன். முதல் பாகம் படிக்கத் தொடங்கினாள். அதை முடித்து விட்டு இரண்டாம் பாகம் எடுத்துப் படிக்கத் தொடங்கியபோது என்னிடம் பேசுவது கூட கொஞ்சம் குறைந்து போனது. மூன்றாம் பாகம்... நான்காம் பாகம்... படித்து முடித்தாள். மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்கு அனுமதி வந்து விட்டது. ஒருநாள்தான் இடைவெளி. “ஐந்தாம் பாகம் படித்து முடிக்காமல் என்னால் பயணத்தைத் தொடர முடியாது போலிருக்கு அப்பா... என்ன செய்வது” எனக் கேட்டாள். இன்றைய ஒரு நாள் இரவு இருக்கு. ஐந்தாம் பாகம் எடுத்துப் படி. உனக்குத் துணையாக நானும் ஏதோவொரு புத்தகம் எடுத்து உன்னுடன் படிக்கிறேன் என்று சொன்னேன். மகள் ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினோம். நள்ளிரவுக்கு மேல் எனக்குத் தூக்கம் வரவும் நான் படுத்து விட்டேன். அப்போதும் என் மகள் பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் படித்துக் கொண்டிருந்தாள். நேரம் கடந்து போனது. விடியற்காலையில் கண் விழித்து எழுந்து பார்த்தேன். என் படுக்கைக்குக் கீழே தரையில் சுருண்டு படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் என் மகள். அவள் எப்போது படுத்தாள் என்று எனக்குத் தெரியாது. எனது தலையணைக்குக் கீழே ஒரு வெள்ளைக் காகிதம் படபடத்துக் கொண்டிருந்தது. அதை எடுத்துப் பிரித்து பார்த்தேன். அதில் என் மகள் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தாள்... “அப்பா... எனக்கு மிகவும் நல்ல ஒரு செயல் செய்துள்ளீர்கள். பொன்னியின் செல்வன் படித்து முடித்துள்ளதால் என்னை ஒரு “தமிழ்ப் பெண்ணாக” எனக்கே அடையாளம் காட்டியுள்ளீர்கள். நான் ஒரு தமிழ்ப் பெண்ணாக என்னை நானே உணர வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி அப்பா...” என்று எழுதியிருந்தாள். ஒரு வரலாற்று நாவலைப் படிக்கின்ற வாசகியை வாசகனை இதைவிட வேறு என்ன செய்துவிட வேண்டும்?