ஒற்றைத் தலைமை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒற்றைத் தலைமை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Published on

ஆதித்யா

நீண்ட இழுபறிக்குப் பின்னர் டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க், தனது அடுத்த அதிரடியாக போர்டு உறுப்பினர்களை கூண்டோடு நீக்கி, அவர் மட்டுமே ஒற்றைத் தலைமையாக அறிவித்துள்ளார்.

பிரபல சமூக ஊடகமான டிவிட்டரை சமீபத்தில் வாங்கிய, உலகின் நம்பர்-1 பணக்காரரான எலான் மஸ்க், அடுத்தடுத்த அதிரடி சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார். டிவிட்டர் சிஇஓ.வாக இருந்த இந்திய வம்சாவளி பராக் அகர்வால் உள்ளிட்டவர்களின் வேலையை காலி செய்த மஸ்க், டிவிட்டரில் புளூடிக் கணக்கு வேண்டுமென்றால் மாதம் ரூ.1600 கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளார்.

பல அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் அவர்களின் சரிபார்க்கப்பட்ட உண்மையான கணக்கு என்பதற்கு அங்கீகாரமாக ‘புளூடிக்’ வழங்கப்படுகிறது. இதற்கு மாத கட்டணம் செலுத்த வேண்டுமென்ற மஸ்க்கின் திட்டம், உலக முழுவதும் டிவிட்டர் பயனர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அடுத்த அதிரடியாக, “டிவிட்டரின் ஒட்டுமொத்த போர்டு உறுப்பினர்களை கூண்டோடு நீக்கி விட்டு, அவர் மட்டுமே போர்டு உறுப்பினர்” என பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இந்த புதிய போர்டு தற்காலிகமானது எனவும் மஸ்க் தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடியது போர்டு உறுப்பினர்களே. அப்படியிருக்கையில், மஸ்க் மட்டுமே போர்டு உறுப்பினராக இருப்பதால் அவர் இஷ்டத்திற்கு எந்த முடிவையும் எடுக்கலாம்.

நானே ராஜா என்ற பாணியில் அறிவித்திருந்தாலும் தனக்கு மந்திரியாக ஒருவரை நியமித்துக் கொண்டிருக்கிறார். சென்னையை சேர்ந்த தற்போதைய அமெரிக்க குடிமகன் - திரு . ஸ்ரீராம் கிருஷ்ணன் - எலன் மஸ்க் டிவிட்டர் கம்பெனியை நிர்வகிப்பதில் உதவி செய்ய நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஶ்ரீராம் கிருஷ்ணன் தனது ட்விட்டரில் "தற்காலிகமாக" தொழில்நுட்ப பில்லியனருக்கு உதவுவதாக தெரிவித்திருக்கிறார்.

"நான் எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரில் தற்காலிகமாக வேறு சில சிறந்த நபர்களுடன் உதவுகிறேன். இது ஒரு மிக முக்கியமான நிறுவனம் என்றும், உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் நான் நம்புகிறேன் " என்று சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தின் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன்
ஸ்ரீராம் கிருஷ்ணன்

ஸ்ரீராம் கிருஷ்ணன் கிரிப்டோ மற்றும் வெப்3 ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யும் வென்ச்சர் கேபிடல் ஃபண்டான ஆன்ட்ரீசென் ஹோரோவிட்ஸ் (a16z) இல் ஒரு பொது பங்குதாரராக உள்ளார்.

இவர் Facebook மற்றும் Snap இன் முன்னாள் உயர் அதிகாரியாக இருந்தவர், செப்டம்பர் 2017 இல் அதன் மூத்த தயாரிப்பு இயக்குநராக Twitter ஆல் பணியமர்த்தப்பட்டார்.

“ஸ்னாப்சாட்டின்” என்ற நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஸ்னாப்பில் விளம்பர முயற்சிகளை வழிநடத்த கிருஷ்ணன் பிப்ரவரி 2016 இல் பேஸ்புக்கிலிருந்தும் விலகினார்.

வெப்3 மற்றும் ஸ்டார்ட்அப்களைத் தவிர, ஸ்ரீராம் கிருஷ்ணன் கிரிப்டோகரன்சியிலும் ஆர்வம் உள்ளவர். அது பற்றிய நுண்ணறிவுகளை தனது யூடியூப் சேனலில் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். அவர் மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் பாட்காஸ்ட்களையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்தியாவில் இருந்து செல்லும் எல்லோரும் வெறும் தொழில்நுட்ப விஷயங்களை மட்டும் சிறந்து இருக்கும் போது இந்த நபர் பணம் மற்றும் முதலீடு விஷயத்திலும் சிறப்பாக – உலகின் முதல் கோடீஸ்வரருக்கு உதவுது இந்தியர்களுக்கு பெருமையான விஷயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com