

கேரளா மட்டுமன்றி, அதை ஒட்டி உள்ள தமிழக எல்லை மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் (Bird flu) சம்பந்தப்பட்டச் செய்திகளை அதிகம் கேட்டிருப்போம். இப்போது தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நிகழ்ந்த காகங்களின் இறப்பு சற்று அதை தொடர்புடைய சந்தேகத்தைத் தந்துள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.
காகங்களின் இறப்பு:
சமீபத்தில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 1,000 – 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென இறந்தன. ஆய்வகச் சோதனைகள் இதற்குக் காரணம் H5N1 avian influenza வைரஸ் (பறவைக்காய்ச்சல்) என்பதை உறுதிப்படுத்தின. இது முதன்மையாக பறவைகளைப் பாதிக்கும் ஒரு நோய்க்கிருமி வைரஸ் ஆகும். இதனால் மனித நோய்த்தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும் இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் கோழியினங்களில் பரவுவதைத் தடுக்கவும், பொது பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநிலம் தழுவிய கண்காணிப்பைத் தூண்டியுள்ளது.
பறவைகளுக்கு என்ன தரக்கூடாது?
வீட்டில் பறவைகளுக்கு உணவளிப்பவர்கள் எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிந்துக் கொள்வது மிகவும் முக்கியம். பறவைகளுக்குப் பதப்படுத்தப்பட்ட (processed) அல்லது உப்பு நிறைந்த உணவுகள், வறுத்த பொருட்கள், சாக்லேட்டுகள் அல்லது காஃபின்(caffeine) கொண்ட உணவுகளை ஒருபோதும் கொடுக்கக்கூடாது.
மசாலா, எண்ணெய் அல்லது அதனுடன் இருந்த மீதமுள்ள சமைத்த உணவுகள் அவற்றின் செரிமான அமைப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கும். அதற்குப் பதிலாக சாதாரண தானியங்கள், விதைகள், பழங்கள் மற்றும் சுத்தமான நீர் ஆகியவை பறவைகளுக்குப் பாதுகாப்பான உணவுகளாகும். இப்படிப் பறவைகளுக்குப் பொறுப்புடன் உணவளிப்பது நோயைத் தடுக்க உதவுகிறது மற்றும் தொற்று பரவும் அபாயத்தையும் குறைக்கிறது.
இந்தப் பறவை நோய்வாய்ப்பட்டுள்ளதா? எப்படி கணிக்கலாம்?
நோய்வாய்ப்பட்ட பறவையை கண்டறிவது சவாலானது. ஆனால், சில கவனிக்க வேண்டிய அறிகுறிகள் உள்ளன. நோயால் பாதிக்கப்பட்ட பறவைகள் வழக்கத்திற்கு மாறாக சோம்பலாக தோன்றலாம். இறகுகள் சுருள, பறக்கச் சிரமப்படலாம் அல்லது அசாதாரணமாக(Unusual) செயல்படலாம். இதோடு சில பறவைகள் கூட்டத்தில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம், உணவை உண்ண மறுக்கலாம்.
இதுபோன்ற அறிகுறிகள் காணப்பட்டால் பறவையை நேரடியாக கையாளாமல் இருப்பதுதான் நமக்கும், பறவைக்கும் நல்லது. அதற்குப் பதிலாக நோய் பரவலைப் பாதுகாப்பாக நிர்வகிக்க பயிற்சி பெற்ற உள்ளூர் கால்நடை பராமரிப்பு அதிகாரிகள்(animal husbandry authorities) அல்லது கால்நடை சேவைகளுக்குத்(veterinary services) தெரிவிக்கவும்.
மனிதர்களுக்கு இதன் பாதிப்பு எப்படி ஆரம்பமாகும்?
பறவைக் காய்ச்சல் ஒரு மனிதனைப் பாதித்தால் அது காய்ச்சல், இருமல் மற்றும் சில நேரங்களில் கடுமையான சுவாச நோயை ஏற்படுத்தும். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இறந்த பறவையை நேரடியாகத் தொடுவது, வைரஸ் தொற்றும் அபாயத்தை மனிதர்களுக்கு அதிகரிக்கிறது.
இதனால்தான் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளுடன் தொடர்பைத் தவிர்க்க சுகாதார நிபுணர்கள் கடுமையாக அறிவுறுத்துகிறார்கள். வழக்கத்திற்கு மாறான பறவை இறப்புகளைக் கண்டால், உள்ளூர் கால்நடை அல்லது கால்நடை பராமரிப்பு அதிகாரிகளிடம் புகாரளிக்க வேண்டும். எனவே, சுகாதாரத்தை கடைபிடிப்பது மற்றும் அதிகாரப்பூர்வ ஆலோசனைகளைப் பின்பற்றுதல் ஆகியவைதான் இந்நேரங்களில் மனிதர்களையும் பறவைகளையும் பாதுகாக்க உதவும்.