சோகத்திலும் தானம்!

எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர்.
Published on

ரு நடிகராக இருந்து, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் மனிதர் நமது எம்.ஜி.ஆர். தன் இறுதி காலம் வரை  பதவியில் தொடர்ந்தவர். அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை, சத்துணவு திட்டமாக்கியவர். பெண்களுக்கு ஸ்பெஷல் பஸ், சினிமா டெக்னீஷியன் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கொடுத்தவர்.

எம்.ஜி.ஆர். படங்கள் நிறையப் பார்த்துள்ளேன். எனது பதிமூன்றாம் வயதில்  'மன்னாதி மன்னன்' படம் பார்த்தேன். அதில், அவர் பத்மினியுடன் இணைந்து, ஒரு போட்டி நடனம் ஆடி, ஜெயித்திருப்பது மிக அருமையான காட்சி. பரத நாட்டியத்தை முறையாய்ப்  பயின்று, அதில் அசாத்திய திறமை பெற்றுள்ள நடிகையுடன் ஆட அவர் சம்மதித்து ஆடியது அவரின் தன்னம்பிக்கைக்குச் சான்று.

ஒருமுறை ஸ்டூடியோவுக்குச் சென்று ஷூட்டிங் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் 'ரகசிய போலீஸ் 115' என்ற படத்துக்காக நடித்துக்கொண்டிருந்தனர். இடைவேளையின்போது, அருகில் வந்து சகஜமாக பேசினார். உதவியாளருடன் எங்களை உணவுக்கூடத்துக்கு அனுப்பி டிபன் சாப்பிட வைத்தார். அவரின் எளிமையும், பிறரை உபசரித்து அனுப்ப வேண்டும் என்ற பெருந்தன்மையான பண்பும், நிஜ வாழ்விலும் அவர் ஹீரோதான் என்பதை உணர்த்தியது.

படம் பிள்ளை
படம் பிள்ளை

எம்.ஜி.ஆர். கஷ்டப்படுவோருக்கு உதவுவதில் வள்ளல் என்று அனைவரும் அறிவோம். அதை நேரில் காணும் சந்தர்ப்பமும் ஒருமுறை அமைந்தது. 1977ல் இயக்குனர் ஏ.பி. நாகராஜன் இறந்தபோது அவரின் பக்கத்து வீட்டில் நாங்கள் குடியிருந்தோம்.

அன்று காலையில் இருந்தே சிவகுமார், மனோரமா என சினிமா பிரபலங்கள் பலரும் வந்தவண்ணம் இருந்தனர். அன்று மாலை  உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வாகனத்தின் பின்னாடி நடந்து செல்ல ஆரம்பித்தனர். அப்போ ஒரு வயதான பெண்மணி எம்.ஜி.ஆர். அருகில் சென்று ஏதோ பேசினார். உடனே, எம்.ஜி.ஆர். தன் சட்டைக் கை மடிப்பிலிருந்து பணத்தை எடுத்து அந்தப் பெண்ணின் கையில் கொடுத்து விட்டு, மீண்டும் நடக்கலானார். இதைத்தான், 'வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது' என்பார்களோ என்றெண்ணி, சற்று தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த நாங்கள் வியந்து போனோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com