கவிதை: கண்ணாமூச்சி ஆட்டம்!

Fenchal storm!
Kavithai
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

கண்ணாமூச்சி ஆட்டம்!

சின்ன வயதில்…

சிறுவர்கள் நாங்கள்…

கண்ணாமூச்சி விளையாடி

களித்திருந்தது உண்டு!


உனக்கும் அதிலே 

விருப்பம் வந்து…

எங்களுடன் சற்று

விளையாடி மகிழ்ந்தாயோ?! 


விரைந்தேநீ வருவதாக 

விளம்பிய பலரும்

விக்கித்து நிற்க…

பம்மிவிட்டாய் கடலுக்குள்ளே!


ஃபெங்கல் என்ற 

பேரும் உனக்குப் 

பிடிக்காது போனதால்

கடலுக்குள் திரும்பினாயோ?


தற்காலிகம் நிரந்தரமென்று

ஏதேதோ சொன்னார்கள்!

இனியதில் உரமில்லையென்று 

சொன்னதும் நீ வெகுண்டேயெழுந்து

கரையை நோக்கிக் 

கடிதாய் விரைந்தாய்!


அதிர்ந்த அவர்கள்

ஃபெஞ்சல் என்று பெயரை மாற்றி

அவசரமாய்ச் சிலவற்றை 

அறிவித்த பிறகே…

நீயும் வந்தாய்

நிலத்தைத் தேடி!


இருந்தாலும்    நீ

இரக்கம் உள்ளவன்!

சென்னைநகரைச் சிரமப்படுத்தாமல்

தாம்பரத்தோடே நின்றுவிட்டாய்!

மேக வெடிப்பாய்

தொடர்ந்து கொட்டாமல்…

இடைவெளி விட்டே

இனிதாய்ப் பொழிந்தாய்!

ஃபெஞ்சல் புயலே!

மறக்கவேமாட்டோம் உன்னை!

logo
Kalki Online
kalkionline.com