

லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக (FRS) தேர்ந்தெடுக்கப்படுவது, அறிவியலில் வழங்கப்படும் மிக உயர்ந்த உலகளாவிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பிரிட்டிஷ் அரசுக்கான அறிவியல் ஆலோசகராகச் செயல்படுகிறது. லண்டன் ராயல் சொசைட்டி (London Royal Society) என்பது இங்கிலாந்து நாட்டின் (ஐக்கிய இராச்சியத்தின் ) தேசிய அறிவியல் அகாடமியாகும். இது நவம்பர் 28, 1660 அன்று லண்டனில் தொடங்கப்பட்டது . இதுவே உலகின் மிகப்பழமையான, தொடர்ந்து இயங்கிவரும் அறிவியல் அமைப்பாகும். அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதும், இயற்கை அறிவை மேம்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
சர் ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இதன் உறுப்பினர்களாக (Fellows) இருந்துள்ளனர். சி.வி. இராமன், ஸ்ரீனிவாச ராமானுஜம் போன்ற பல இந்திய அறிஞர்கள் இதில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இதன் அதிகாரப்பூர்வ குறிக்கோள் "Nullius in verba" ஆகும். இதற்கு "யாரது வார்த்தையையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்; நடைமுறை ஆதாரங்களை நம்புங்கள்" என்பது பொருளாகும்.
தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் சௌமியா சுவாமிநாதன்(Soumya Swaminathan), ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சௌமியா சுவாமிநாதன், இந்திய பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் ஆவார்.
இந்தியாவில் 'பசுமைப் புரட்சியின் தந்தை' என்று போற்றப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் (M. S. Swaminathan), புகழ்பெற்ற லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக (Fellow of the Royal Society - FRS) 1973-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிவியல் உலகத்தின் மிக உயரிய கௌரவமான இந்த அமைப்பில்(indian father-daughter-london-royal-society) இணைந்த மிகச் சில இந்தியர்களில் இவரும் ஒருவர் தாவர மரபியல் மற்றும் விவசாயத்தில் இவர் செய்த புரட்சிகரமான ஆய்வுகளுக்காக ராயல் சொசைட்டி இவரை உறுப்பினராக ஏற்றுக்கொண்டது.
சௌமியா சுவாமிநாதன் குழந்தை நல மருத்துவர் மற்றும் மருத்துவ விஞ்ஞானி ஆவார். செளமியா சுவாமிநாதன் புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றவர். அவர் புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) குழந்தை மருத்துவத்தில் MD பட்டம் பெற்றவர். சௌமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
ராயல் சொசைட்டியின் 365 ஆண்டு கால வரலாற்றில், உறுப்பினராகும் முதல் தமிழ்நாட்டு பெண் விஞ்ஞானி என்ற பெருமையை சௌமியா சுவாமிநாதன் பெற்றுள்ளார்.
டாக்டர் சௌமியா சுவாமிநாதனும், அவரது தந்தையும் 'பாரத ரத்னா' விருது பெற்றவருமான பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனும், இந்தியாவிலிருந்து 'ராயல் சொசைட்டி'யின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தந்தை-மகள் என்ற பெருமையைப் பெற்றுள்ளதன் மூலம், இந்தச் சாதனை இந்திய அறிவியல் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் ஒரு பொது சுகாதார நிபுணரான டாக்டர் செளமியா சுவாமிநாதன், காசநோய், எச்.ஐ.வி மற்றும் கரோனா -19 பெருந்தொற்று உள்ளிட்ட முக்கிய சுகாதார நெருக்கடிகளைக் கையாள்வதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக, அறிவியல், சுகாதாரக் கொள்கை மற்றும் உலகளாவிய நெருக்கடி மேலாண்மை ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பில் அவர் ஆற்றிய பணிகளின் மூலம், பொது சுகாதாரத் துறையில் மிகவும் நம்பகமானவர்களில் ஒருவராக அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ராயல் சொசைட்டிக்கு சௌமியா சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இந்திய அறிவியலுக்கும், உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் சுகாதாரத் தலைமைத்துவத்தில் இந்தியாவின் பங்களிப்பிற்கும் கிடைத்த ஒரு பெருமையாக பார்க்கப்படுகிறது.