

-சரண்யா
கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் அம்மாவின் Class ஐடியா… Mass எஸ்கேப்! பற்றிய அனுபவத்தை கேட்டிருந்தோம். அதில் தேர்வான ஐந்து சுவாரஸ்யமான கட்டுரைகளில் மூன்றாவது கட்டுரை இதோ…
சில வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்தோடு கும்பகோணம் மற்றும் வைத்திஸ்வரன் கோவில் என ஆன்மீகப் பயணம் மேற்கொண்டோம். இரண்டு மூன்று நாட்களுக்கு திட்டமிட்டு, வைத்திஸ்வரன் கோவிலுக்கு சற்று தொலைவில் ரூம் போட்டு இருந்தோம்.
திருச்சியில் இருந்து கிளம்பும்போது அன்றைய காலை வேளைக்கும் மதியத்திற்கும் மட்டும் சாப்பாடு எடுத்துச் சென்றோம். இரவு ஹோட்டலில் சாப்பிடலாம் என்று இருந்தோம். கும்பகோணத்தில் சாமி கும்பிட்டுவிட்டு கிளம்பினோம்.
பாதி வழியில் பஸ் பஞ்சர் ஆகி நின்றுவிட்டது. மழை வேறு அடித்து பெய்தது. கும்மிருட்டு. என் மகனுக்கும், அக்கா மகள் இருவருக்கும் நல்ல பசி. பஸ் பஞ்சர் சரி செய்து ரூமிற்கு செல்லும்போது இரவு பதினொன்று கங்கு மேல் ஆகிவிட்டது. ஹோட்டலில் சாப்பிட ஒன்றும் இல்லை.
குழந்தைகள் ஐயோ பசிக்குது என்று சொல்ல… கொண்டு வந்த சாப்பாடும் தீர்ந்த நிலையில் என்ன செய்வது என்று நாங்கள் தவித்தோம். கையில் இருந்த கொஞ்ச ஸ்நாக்ஸ் எப்படி போதும் நினைத்தபோது என் அம்மா தன்னுடைய பையில் இருந்து ஒரு கவரை எடுத்தார். அதில் அவல் நிறைய இருந்தது. டக்கென்று ப்ளாஸ்கில் இருந்த வெந்நீரை சேர்த்து அதனுடன் வதக்கிய தேங்காய் துருவலை சேர்ந்தார். முதலில் குழந்தைகளுக்கு கொடுத்து அதன் பிறகு நாங்களும் சாப்பிட்டோம்.
ஏது அவல் என அம்மாவிடம் கேட்டபோது, அபய சமயத்திற்கு உதவும் என கொண்டு வந்ததாக சொன்னார். எங்களுக்கு அவர் கொண்டு வந்ததே தெரியாது. எப்போதும் நாம் கையில் ஏதாவது திண்பண்டம் வைத்து இருக்க வேண்டும் அறிவுறுத்தினார். அன்றைக்கு class ஐடியா பண்ணி Mass ஆக பசியில் இருந்து எஸ்கேப் ஆக வைத்தார். அம்மா என்றால் நமது பசி அறிந்து ஊட்டுபவள் ஆயிற்றே. அம்மா அன்னபூரணியாக தெரிந்தாள்.