வரும் ஜனவரி 22ஆம் தேதி, இராமபிரானின் பாலபருவ விக்ரஹம், கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இராமர் கோயிலுக்கான தலைமை கட்டடக் கலைஞர், அகமதாபாத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் பாய் சோம்புரா. இவருடைய தாத்தா பிரபாகர்ஜி சோம்ப்ரா குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலை வடிவமைத்தவர். சோம்நாத் கோயில் உட்பட, 15 தலைமுறைகளாக, உலகில் 100க்கும் மேற்பட்ட கோயில்களை சோம்புரா குடும்பத்தினர் வடிவமைத்துள்ளார்கள். 1988ஆம் வருடம் திட்டமிடப்பட்ட கோயில் வடிவத்தில், வாஸ்து மற்றும் சில்ப சாஸ்திரங்களின்படி, 2020ஆம் வருடம் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அயோத்தியில், கர்சேவபுரத்தில்,
பொதுமக்கள் பார்வைக்கு, கோயிலின் மாதிரி வடிவம் வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோயில், நாகாரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டப்பட்டுள்ள கோயில்களில், உயரமான கோபுரங்கள், சிகரங்கள், அற்புதமான சிற்பங்கள் இருக்கும். கிழக்கில் உள்ள நுழைவாயில், தென்னிந்திய பாணி கோபுர வாயில்.
இராமர் கோயில் 71ஏக்கர் பரப்பளவில், மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. நீளம் 380 அடிகள், அகலம் 250 அடிகள், உயரம் 161 அடிகள். ஒவ்வொரு தளமும் 20 அடிகள் உயரம். கோயிலில், தெய்வங்களின் சிற்பங்கள் மற்றும் நடனப்பதுமைகள் செதுக்கப்பட்ட 392 தூண்கள், மற்றும் கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட 44 கதவுகள் உள்ளன. பிரதான கருவறையில் 31 அங்குலம் உயரம் உள்ள 5 வயது பாலகன் இராமனின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதனை வடிவமைத்தவர் மைசூரைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் யோகிராஜ் அவர்கள். 15 உறுப்பினர் கொண்ட ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் 11 உறுப்பினர்கள் இந்தச் சிலையை வைப்பதற்கு வாக்களித்தனர். ஸ்ரீராமனின் பட்டாபிஷேக மண்டபம் முதல் தளத்தில். கருவறை எண்கோண வடிவில் அமைய, கட்டமைப்பு சுற்றளவு வட்டமாக அமையும்.
கிழக்கு திசையிலிருந்து கோயிலினுள் செல்வதற்கு 32 படிக்கட்டுகள் (உயரம் 16.5அடி). மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக லிஃப்ட் மற்றும் சரிவுப் பாதை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தின் நான்கு பக்கங்களிலும் 732 மீட்டர் நீளமுள்ள சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் உள்ளே நாட்டிய மண்டபம், ரங்க மண்டபம், தரிசன மண்டபம், ப்ரார்த்தனா மண்டபம், கீர்த்தனை மண்டபம் என்று ஐந்து மண்டபங்கள்.
கோயில் வளாகத்தின் நான்கு மூலைகளிலும் விநாயகர், சிவபெருமான், பகவதி அம்மன் மற்றும் சூரிய பகவானுக்கு கோயில்களும், வடக்குப் பகுதியில் அன்னபூரணி ஆலயம் மற்றும் தெற்கில் அனுமன் ஆலயம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பகுதியிலிருந்த சிவபெருமானின் பழங்கால கோயில் மீட்டெடுக்கப்பட்டு, புனர் பிரதிஷ்டை மற்றும் ஜடாயு சிலைகள் வைக்கப்படுகிறது. கோயில் வளாகத்தின் வெளியே மகரிஷி வால்மீகி, வசிஷ்டர், விசுவாமித்திரர், அகஸ்தியர், குகன், மாதா சபரி, மற்றும் அகல்யா தேவி ஆகியோருக்கு ஆலயங்கள் அமைக்கப்படும்.
முழுவதும் இந்திய தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்தக் கோயில் கட்டமைப் பிற்குத் தேவையான வடிவமைப்பு, அதற்குண்டான வரைபடங்கள் சென்னை ஐஐடியில் தயாரிக்கப்பட்டு, அதனை லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் டாடா கன்சல்டிங்க் ஆகியவர்களால் சோதிக்கப்படுகின்றன. இந்தக் கோயில் 1000 ஆண்டுகள் நிற்க வேண்டும் என்ற குறிக்கோளில், இதன் ஸ்திரத்தன்மை சோதனை, மத்திய ஆராய்ச்சி கட்டட நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இராமர் கோயிலில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. செயற்கை பாறை போன்ற தோற்றமளிக்கும் வகையில் அடித்தளம் 14 மீட்டர் தடிமனான ரோலர்-காம்பாக்ட் செய்யப்பட்ட கான்க்ரீட்டால் அமைக்கப்படுள்ளது.
கோயில் நிலத்தடியை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க, 21 அடி உயர கிரானைட் பீடம் கட்டப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தின் மின்சாரத் தேவைக்குத் தனியாக மின்சார நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, தீயிலிருந்து பாதுகாக்க நீர் வழங்க ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
25,000 யாத்திரிகர்கள் தங்குவதற்கான இடங்கள், உடைமைகளை வைத்துக்கொள்ள லாக்கர் வசதிகள், மருத்துவ வசதிகள் அமைக்கப்படுகின்றன.
தற்போது நாள்தோறும் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் கோயில் வளாகத்திற்கு வந்து செல்வதாகக் கூறுகின்றனர். இராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் தரிசனத்திற்கு திறந்துவிட்ட பின்னால், தினசரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இராமர்கோயில் தரிசன நேரம்: காலை 7 முதல் 11:30 வரை, பிற்பகல் 2 முதல் 7:30 வரை.