கவிதை - கோடைக்காலக்காற்றே!

Kavithai image
Kavithai imageImage credit - pixabay.com
Updated on

கோடைக் கால அனல் காற்றே!

கார் முகிலை அழைத்து வந்திடு.

உழைப்போரின் வாட்டம்

தன்னைப் போக்கிட 

உவகை பொங்க மழைக்காற்றோடு வா.

மண்மகளின் பசும்புல்

மேலாடைக் காய்ந்தே 

மஞ்சள் வண்ணத்தோடு

வறண்டு போகுதே.

ஆறோடும் பாதையில்

ஆறின்றி பிளவு.

ஆற்றாமையால் மக்கள் நாளும் தவிப்பு.

மாலைநேரக் காற்றுக்காய்

மயக்கத்தோடு 

ஏழை மக்கள்.

உடலைக் குளிர்விக்க

மரநிழலில் அடைக்கலம்.

இயற்கையை விடுத்து

செயற்கை காற்று தேடல்.

உன் வருகையால்

உன்மத்தமான மாம்பூக்கள்!

உவந்து ஆடியே

உலர்ந்து வீழ்ந்திட

வேம்பூவின் மணம்

விரைந்து பரவுதே.

விரையும் தேனீக்கள்

நறவினைத் தேடுதே.

மகரந்தத்தூளில் ஆடுதே

மகிழ்ந்து அவை.

கோடைக்காலக்காற்றே

கொண்டாட்டம் தருவாய்

சிறார்கட்கே!

உன்னால் நாங்கள்

உயிர்ப்புடன் வாழ்கிறோம்!

நன்றி நவில்கிறோம்

நாளும் உனக்கே!

logo
Kalki Online
kalkionline.com