“கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும்”

படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?
“கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும்”
Published on

பகுதி – 7

-பெ.மாடசாமி

சிந்தனையைத் தட்டி எழுப்பும் மகத்துவம் கொண்டது எழுத்துகள். “இவன் பெரிய எழுத்தாளனாக ஆவான்” என்று சிலர் கூறும் அளவிற்கு, குழந்தைப் பருவத்திலேயே சிலரிடம் எழுத்தாற்றலை, கற்பனைத் திறனை அறிய முடியும்.

சக மாணவ மாணவியரின் நகைப்புக்கும் “இவரு பெரிய கவிஞரு” என்று மட்டம் தட்டுகிற ஆசான்களுக்கும் மத்தியில், சில உதடுகளும் காதுகளுமே அவனுடைய ஆற்றலுக்கு ஆதரவும் ஆலோசனையும் வழங்குவது உண்டு.

சில்லரைக் காசில் (பாக்கட்மணி) குச்சி ஐஸ்சும், கொய்யாப்பழமும் வாங்க ஆசைப்பட்டவர்கள் மத்தியில் எழுதியதைத் தபாலில் அனுப்பிவிட்டு, காத்திருக்க “தங்களின் கதை, கவிதைத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்ற கடுதாசியைப் பெற்றவர்களே அதிகம்.

முதன் முதலாக தன் படைப்பு பத்திரிகையில் வந்துவி்ட்டால் அதற்கு முன்பு ‘சாகித்திய அகாடமி’ விருதோ, ‘புக்கர்’ பரிசோ ஏன் ‘நோபல்’ பரிசெல்லாம் பெரிதே அல்ல. அதற்காக பெறப்பட்ட சன்மானமான ரூ.15/-ஐ பிரேம் போட்டு தொங்க விட்டிருப்பவர்களும் உண்டு.

பெ.மாடசாமி
பெ.மாடசாமி

இவர்களின் உலகமே தனிதான். எழுதத் தெரிந்தவனுக்குக் கண்ணில் காண்பவை மட்டுமல்ல, காணாத கற்பனைகளும் காண்கிற கனவுகளும் அவன் வரிகளே!

சற்றே பக்குவமான நிலையை எட்ட, தன் ஆரம்ப கால வரிகளை வாசிக்க அவனுக்குள்ளே ஒரு புன்சிரிப்பு.

அந்தப் பருவத்தில் அழகு, இயற்கை, பெண், காதல் பற்றிய கருத்துகளை அதிகமாகக் காணலாம். சிலர் வாசிப்பாலும், சூழ்நிலை பாதிப்பாலும் சமுதாயத்தைப் பற்றி பதிவு செய்வதுண்டு. ஆசிரியர்களின் அரவணைப்பில் இலக்கியச் சிந்தனையைக் கலப்பதுண்டு.

சிலர் தாக்கத்தோடும் ஏக்கத்தோடும் சிலர் தனிமனித னாகவும் குடும்பத்தோடும் சிலர் கலையோடும் சிலை சிற்பிகளோடும் சிலர் வரலாற்றோடும் வாலிப சிந்தனை யோடும் சிலர் வெறுப்போடும் கருத்துக்களின் மறுப் போடும் சிலர் ஆன்மிகத்தோடும் தார்மீக பொறுப் போடும் சிலர் அரசியலோடும் அதன் அவலத்தோடும் சிலர் அறிவியலோடும் ஆராய்ச்சியோடும் சிலர் வனத்தோடும் மனக்கனத்தோடும் சிலர் விலங்கோடும் ஒரு சிலரின் கைவிலங்கோடும் சிலர்.

கி.ரா.வின் அருகே காத்திருந்த எமதர்மன் கணவதியை கைபிடித்தப் பின்பு காணாமல் போனார் என்று சொல்ல வேண்டும்.

கணவதி
கணவதி

வீட்டு வேலையோ வயல் வேலைகளோ தெரியாத கணவதி, சமையல் செய்ய கற்றுக்கொண்டு, இடுப்பில் பிள்ளையோடு இரவிலும் வயல்வெளிக்குச் சென்ற காரணத்தினால் எந்த கஷ்டமும் தெரியாது கி.ரா.வால் எழுத்தில் அதிகக் கவனம் செலுத்த முடிந்தது.

வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது “அவர் எழுதிக் கொண்டிருக்கும் அறையை மட்டும் விட்டுவிடுங்கள்” என காரல்மார்க்ஸின் மனைவி சென்னி கேட்டதாலயே ‘மூலதனம்’ இந்த உலகிற்கு மூலதனமானது. அந்த வகையில் ஒரு ‘கதைச் சொல்லி” கிடைப்பதற்கு ‘செவல் கண்ட ஜென்னி’யான கணவதிதான் காரணம்.

ஆணாதிக்கத்தை அவ்வளவு எளிதாக தள்ளி வைத்திட முடியாத சமூகத்தில் குடும்பத்தில் அதிகமாக விட்டுக் கொடுத்தது கணவதிதான் என்பதை ஒத்துக்கொள்கிறார் பண்பாளர் கி.ரா.

கி.ரா. தனக்கு வந்த வாசகர் கடிதத்தை வாசிக்கச் சொன்னது மட்டுமல்லாது கணவதிக்கு வாசித்தும் காட்டியுள்ளார்.

வீட்டு வேலை, வயல் வேலை தெரியும் என்பது மட்டுமல்ல தாகூர், டால்ஸ்டாய், செகாவ் கதைகளைப் படித்திருக்கிறேன் என்று கணவதி சொல்கிறபோது திகைப்பும் மிகைப்பும் ஏற்படலாம். இலக்கிய வாழ்க்கைப் பாதையிலும் தன்னை உடன் அழைத்துச் சென்றார் கி.ரா. என்பதை கணவதி பெருமையாக எடுத்துரைக்கிறார்.

கி.ரா.வைக் காண எழுத்தாளர்கள் வாஸந்தி, சிவசங்கரி, பொன்னீலன், அம்பை, சு.சமுத்திரம், செயப்பிரகாசம், ரவிக்குமார், வல்லிக்கண்ணன், இலங்கை எழுத்தாளர் நூஹ்மான், ஜப்பான் எழுத்தாளர் நொரிஹிகோ உச்சிடா போன்றவர்கள் கி.ரா. வீட்டிற்கு வந்ததோடு, சிலர் குடும்பத்தோடு வந்தார்கள் என்றால் கி.ரா.வின் எழுத்து மட்டுமல்ல; கணவதியின் விருந்தோம்பலும்தான் அவர்களை ஈர்த்தது என்று சொல்கிற அளவிற்கு அவர்களை உபசரித்திருக்கிறார்.

கணவதியின் “கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும்” மிகுந்த சுவை கொண்டது மட்டுமல்ல எழுத்தாளர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பிரபலமானதும்கூட. தனி மனுஷியாக சமைத்துப் பரிமாறியிருக்கிறார். அந்த குழம்புக்கு உள்ள ருசி அவரின் கள்ளங்கபடமில்லா மனம், இனிய உபசரிப்பு, பரிமாறும் விதம் அத்தனையையும் கொண்டது.

கி.ரா.வின் ஆனந்தவிகடன் முத்திரைக் கதை சன்மானமான  100 ரூபாயில் காஞ்சிப் பட்டுப்புடைவை வாங்கிக் கொடுத்ததையும் திருமணம் நடந்த புதிதில், தன்னை சினிமாவுக்கு அழைத்துச் சென்றதையும் பெருமையாகச் சொல்கிற உயர்ந்த குணம் படைத்தவராக கணவதியை காண முடிகிறது.

இத்தகைய குணநலன்கள் கணவதிக்கு இருந்த காரணத்தால்தான் தன்னுடைய வாழ்க்கை இரண்டு வருடமோ மூன்று வருடமோ என்று சொல்லிக் கொண்டிருந்த கி.ரா., திருமணமாகி 65 ஆண்டகளைத் தாண்டி ஆரோக்கியமாக பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

காய்கறி வாங்கி வரும்போது கணவரின் தபால்களை அனுப்பிவிட்டு, தபால் தலைகளை வாங்கி வந்த “தபால் பெண்மணி”யை மட்டுமல்ல, கணவர் உருவாக்கிய இலக்கியப் பாதையில் உறவினர்களையும் அழைத்துச் சென்ற கணவதியை மறந்திட முடியாது.

“அய்யா சின்ன வயசிலேயிருந்து சேகரிச்ச புத்தகங்களை எல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்துக்குக் கொடுத்திட்டீங்களே, ஏன்?” என்று கணவதியிடம் கேட்டபோது, படிச்சதை அய்யா கையாலேய கொடுத்தது அவர்களுக்கும் ஒரு நிறைவு. நூலகத்தில் இருந்தா பலபேர் வந்து படிப்பாங்க இல்லியா?” என்ற பதில் சொன்ன அம்மையாரிடம் எவ்வளவு பெரிய இலக்கிய முதிர்ச்சியைக் காணமுடிகிறது. இன்றைக்கு இலக்கிய தம்பதியினர் இருவரையும் இழந்து நிற்கிறது இலக்கிய கிராமம் அல்ல இலக்கிய உலகம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com