

-லட்சுமி.பி.ஆர்
கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் அம்மாவின் Class ஐடியா... Mass எஸ்கேப்! பற்றிய அனுபவத்தை கேட்டிருந்தோம். அதில் தேர்வான ஐந்து சுவாரஸ்யமான கட்டுரைகளில் முதல் கட்டுரை இதோ…
நாங்க பள்ளியில் 1981இல் படிக்கும்போது தோழிகளுக்குள் ஒரு போட்டி வைப்போம். யார் அதிகமாக பரிசு வாங்குகிறார்கள் என கணக்கு வைத்துக்கொள்வோம்.
எனக்கு பாட்டு சுமார்தான். பாட்டு டீச்சர் மாறியிருந்தாங்க மேற்கு மாம்பலம் அஞ்சுகம் மேல்நிலைப்பள்ளியில்தான் நான் படிச்சது. திடீர்னு டீச்சர் நீ மறுநாள் பாட்டு தேர்வுக்கு பாடியே ஆகணும்னு சொல்லிட்டாங்க. எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. பேச்சு போட்டி என்றால் அம்மா பாரதியிடம் சொல்வேன். பாலில் மஞ்சள்தூள் கலந்து தருவார்கள். நல்லெண்ணெயில் சின்னவெங்காயம் வாரம் 5 நாள் சீரகம் சேர்த்து வதக்கி தருவார்கள். இப்ப இதற்கு நான் என்ன செய்வது?
பள்ளியில் பேச்சு போட்டி என்றால் தப்பித்து விடுவேன். தேர்வு என்றால் தப்பிக்க முடியாது. பாட்டு போட்டிக்கு மதிப்பெண் உண்டு என்பதால் பாட மதிப்பெண்களுடன் சேர்த்துக்கொள்வார்கள். நான் தூக்கம் வராமல் புரள்வதைப் பார்த்ததும் எனது தந்தை ராமச்சந்திரனும், தாய் பாரதியும் என்னை எழுப்பி அமரவைத்து சூடாக பால் கொடுத்தனர்.
எனதருகில் அமர்ந்து என்னுடைய பிரச்னை என்னவென கேட்டனர். ஆறாம் வகுப்புதானே என எனது அம்மா முருகன் பாட்டு- திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாட்டையும், அலைபாயுதே கண்ணா... பாட்டையும் மறுநாள் காலையில் யாருமில்லாத வேளையில் கற்றுக்கொடுத்தார்.
மதியம்தான் பள்ளி இயங்கும். கூட்டுக்குடும்பத்தில் எனது தாய் நன்றாகப்பாடுவார்கள் என்றே யாருக்கும் தெரியாத அந்த நேரத்தில் அவர் பாடி நான் மதிப்பெண் பெற்றது இன்றுவரை மறக்க இயலாத பசுமை. காற்றினிலே வரும் கீதம் பாட்டையும் எனது தாய் கற்றுக்கொடுத்து பாட்டு டீச்சரிடம் பாராட்டு பெற வைத்திருக்கிறார்.
அன்னையர் தினத்தில் அம்மாவிடம் ஆசி பெற்று அந்த பாட்டை காளி கோவில் விஜயதசமி திருநாளில் வீணையில் வாசித்து காட்டிவிடவேண்டும் என பலமுறை முயற்சி செய்தேன். அதற்குள் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னையர் தினத்தில் நான் எனது தாயை நினைத்துப் பார்த்தபடி இன்னமும் பழைய நினைவுகளுடன்... எழுத வாய்ப்பளித்த கல்கி இதழுக்கு நன்றி!