

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய NRI, PIO, OCI மாணவர்கள் இந்தியாவில் உயர் கல்வி தொடர பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. மருத்துவம், பொறியியல், கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட், திரைப்படம், கலை, இளங்கலை படிப்புகளில் தனித்த நுழைவுத் திட்டங்கள், கூடுதல் கட்டணங்கள், அரசு வழிகாட்டி தளங்கள் மூலம் சேர்க்கை நடைமுறைகள் இங்கே விளக்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்களை NRI அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்று அழைக்கிறோம். அவர்கள் வேலை வாய்ப்புக்காக அயல்நாடுகளுக்கு சென்று அங்கேயே தங்கி நீண்ட காலம் பணி செய்பவர்கள். அவர்களது குடும்பத்தினரும் வெளிநாடுகளில் இருப்பதால், பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் மேற்கல்விக்காக இந்தியா வரவேண்டிய சூழல் உள்ளது. இதில் மிக முக்கியமான ஒரு காரணம், இந்தியாவில் படிக்கும் காலத்தில் இந்திய கலாச்சாரத்தை கற்றுக் கொள்ள, தங்களது பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றனர். மேலும், வெளிநாடுகளில் உள்ள ஒதுக்கீட்டின்படி இந்தியர்களுக்கான வாய்ப்புகள் எளிதில் கிடைக்காது.
இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கல்வியில் குறிப்பிடத்தக்க அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் (PIOs), வெளிநாட்டு இந்தியக் குடிமக்களுக்கு (OCI) ஆகியோர்களுக்கு கல்வியில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
மருத்துவ கல்வியில் சேர:
இந்தியாவில் உள்ள குடிமக்கள் குறிப்பிட்ட கல்லூரி பாடங்களை தேர்வு செய்வதற்கு, மாநில அல்லது தேசிய அளவிலான பொது தேர்வுகளை எழுத வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு சில படிப்புகளுக்கு நுழைவு தேர்வு தேவையில்லை. ஆனால், மருத்துவம் படிப்பதாக இருந்தால் அவர்கள் நீட் தேர்வு எழுதுவது கட்டாயம். அதில் தகுதியான மதிப்பெண்களை பெற்றிருந்தால் மட்டுமே இடம் கிடைக்கும். மருத்துவக் கல்லூரிகளில் 5% –15% வரை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது.
இதற்கான வழிகாட்டி அரசு இணையதளம்: http://mcc.nic.in
பொறியியல் படிப்பு:
இந்தியாவில் உள்ள பல பொறியியல் கல்லூரிகள், 10 –15% சதவீதம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இட ஒதுக்கீடு (NRI Quota) செய்துள்ளது. பல மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர வெளிநாடு வாழ் இந்தியர்கள் நுழைவு தேர்வுகளில் பங்கேற்க அவசியம் இல்லை. ஆனால், இவர்களுக்கு கல்விக் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும்.
அதே சமயம், இவர்கள் மத்திய அரசு நடத்தும் மதிப்பு மிக்க NIT, IIT உள்ளிட்ட கல்லூரிகளில் பொறியியல் படிக்க ஆசைப்பட்டால் JEE Main தேர்வு எழுதுவது கட்டாயம். இதற்கு DASA (Direct Admission of Students Abroad) திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது. வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இதில் 5% இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டி அரசு இணையதளம்: https://csab.nic.in
கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள்:
வெளிநாடுகளில் இந்த துறைக்கு நல்ல மதிப்புள்ளது. சம்பளமும் அதிகம் என்பதால் இது சார்ந்த படிப்புகளுக்கு கிராக்கி உள்ளது. மத்திய அரசு நடத்தும் சிறந்த கல்லூரிகளில் படிக்க NCHM JEE தேர்வு எழுதுவது கட்டாயம். ஆனால், தனியார் கல்லூரிகளில் படிக்க இதற்கு நுழைவுத் தேர்வுகள் கிடையாது. இந்த படிப்புகளுக்கு NRI மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது.
இதற்கான வழிகாட்டி அரசு இணையதளம்: https://www.studyinindia.gov.in
திரைத்துறை படிப்புகளில் சேர:
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற புனே (FTII) திரைப்படக் கல்லூரி மற்றும் மற்ற திரைப்படக் கல்லூரிகளில் சேர NRI மாணவர்களுக்கு எந்த நுழைவுத் தேர்வும் இல்லை.
மற்ற வழக்கமான தகுதிகள் நிரம்பியிருந்தால் போதுமானது.
இதற்கான வழிகாட்டி அரசு இணையதளம்:https://studyinindia.gov.in
கலை மற்றும் இளங்கலை படிப்புகள்:
இந்த படிப்புகளில் சேர வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எந்த நுழைவுத் தேர்வும் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் இடம் வழங்கப்படுகிறது.
இதற்கான வழிகாட்டி அரசு இணையதளம்: https://studyinindia.gov.in
பொதுவாக விண்ணப்பிக்கும் தகுதிகள்:
1. NRI என்பதற்கான ஆதாரங்கள், மாணவர்களின் பாஸ்போர்ட், விசா, வேலைவாய்ப்பு சான்றிதழ் போன்றவை சமர்ப்பிக்க வேண்டும்.
2. மருத்துவப் படிப்பிற்கு 12 வது/அதற்கு இணையான படிப்பில் உயிரியல், தாவரவியல், வேதியியல் ஆகியவற்றை முக்கிய பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. மற்ற படிப்புகளுக்கு 12 வது/அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு சில படிப்புகளுக்கு உடல் தகுதி அவசியம்.
இந்த வழிகாட்டியின் மூலம், சிக்கலான சேர்க்கை நடைமுறைகளை எளிதாகப் புரிந்துகொண்டு, உங்கள் பிள்ளைகளின் கனவுப் படிப்பிற்கான சரியான பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்து, இந்திய கலாச்சாரப் பின்னணியுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்விக்கான கதவுகளை நீங்கள் உறுதியாகத் திறக்க முடியும்.