ராஜபாட்டை ரகசியம்
ராஜபாட்டை ரகசியம்ஓவியம் பிள்ளை

அரசியல் அலசல்:தயார் ஆகுது ஒரு சேலை படை!

Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyam

‘‘இதுவே கடைசி வாய்ப்பு! இந்த முறையும் கோட்டை விட்டால், நமக்கு எதிர்காலமே கிடையாது - ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரும் தில்லியில் கூறும் வசனம் இது” என்றபடியே கல்கி அலுவலகத்தில் நுழைந்தார் ராஜதானி ராஜப்பா. ''பேசறதெல்லாம் சரியாத்தான் பேசறாங்கள். ஆனா, தேர்தல் நேரத்துல கோட்டை விட்டுடறாங்களே” என்று நான் சொன்னதும் அதற்கும் தலையசைத்தார் ரா.ரா.

''மத்திய பிரதேசத்துல இமாலய வெற்றி பெற்றது ஒரு பக்கம் இருக்க, ராஜஸ்தான்ல அதிர்ஷ்டத்துக்கு மேலே அதிருஷ்டம். பாஜக டிக்கெட் கிடைக்காம, சுயேச்சையா போட்டியிட்ட ஆறு பேர் தேர்தல்ல ஜெயிச்சிருக்காங்க. இப்ப அவங்க எல்லோரும் திரும்பவும் கட்சியில சேர்ந்துட்டாங்க. அதனால கட்சியோட பலம் கூடிடுச்சாம்'' என்று ரா.ரா. சொன்னார்.

இப்ப அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு, ரகசிய சர்வே எடுத்து பார்த்ததுல, பெரிய அளவுல வெற்றி இல்லையென்றாலும், ஆட்சி அமைக்கிற அளவு எம்பிக்கள் உறுதியாம். வடக்குல, மேற்குல பிரச்னை இல்லை. வங்காளத்துல கூட பெரிய மாற்றம் கண்டு இருக்காம். இனி, தெற்குலதான் கவனம் செலுத்த போறாங்களாம் பாஜக.

மூணு மாநிலத்துல நடந்த தேர்தல்ல படுதோல்வி அடைஞ்சதால எதிர்க்கட்சி இண்டியா கூட்டணியில பெரிய குழப்பம் நிலவுதாம். நாட்டுக்கு எதிராகவும், இந்து மதத்துக்கு எதிராகவும் திமுகவுல பேசிட்டு வர்றாங்க. இது நமக்கு தேர்தல்ல பாதகமா போயிடும்னு இண்டியா கூட்டணியில இருக்கிற நித்திஷ்குமார், சிவா சேனா கட்சியில் இருப்பவர்கள் எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்க.

''ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஐக்கிய ஜனதா தளத்துல பெரிய மன மாற்றம் உண்டாகி இருக்கு. நித்திஷ்குமாருக்கு ரொம்பவும் நெருக்கமான எம்பி பிரதமர் மோடிக்கு ஆதரவா பேசி இருக்கார். அதேபோல், பீகாரின் முன்னாள் முதல்வர் ஜித்தன் குமார் மஞ்சி, தன்னோட எக்ஸ் பதிவுல, பீகார்ல பெரிய மாற்றம் வரப்போகிறது.

நித்திஷ்குமார் தேர்தலுக்கு முன்னோட்டம், மீண்டும் பாஜக தலைமை வகிக்கும் என்டிஏ கூட்டணியில் இணைவார்னு கருத்து தெரிவிச்சிருக்கார்'' என்றார் ரா.ரா.

''அது சரி, நாடாளுமன்ற மக்களவை வளாகத்திற்குள் நுழைஞ்சி கோஷங்கள் எழுப்பியும், கலர் பொடி தூவியும் கலாட்டா செஞ்ச அந்த நாலு பேர் யாரு?”

''அதைத்தானே சொல்ல வரேன். மைசூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவிடம், தேர்தலுக்காக நாடாளுமன்ற நிகழ்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்றதுக்காக நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்க்கணும்னு சொல்லி நாலு பேர் பார்வையாளர்கள் கேலரி பாஸ் வாங்கி இருக்காங்க.

அவர்களில் அரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த நீலம் என்ற பெண், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லத்தூர் மாவட்டத்தில் இருந்து அமோல் ஷிண்டே, மைசூரிலிருந்து மனோரஞ்சன் கவுடா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சாகர் ஷர்மனுதான் அந்த நாலு பேர். இவங்க எல்லோருக்குமே 20 முதல் 45 வயசுதான் இருக்கும். இவர்களில் இரண்டு பேர் மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்பிக்கள் பகுதியில் குதிச்சு சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓட முயற்சி செய்தார்கள். அப்போ, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கோஷங்கள் எழுப்பியும், கலர் பொடிகள் தூவியும் இருக்காங்க.

Parliament Attack
Parliament Attack

எதிர்க்கட்சிய சேர்ந்தவங்க எல்லாம் அந்த நாலு பேருக்கு பாஸ் கொடுத்த பாஜக எம்பி மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி நாடாளுமன்ற சபாநாயகர்களிடம் வலியுறுத்தினாங்க. ஆனால், நாடாளுமன்ற தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பிய திமுக எம்பி கனிமொழி உட்பட, 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டாங்க. இந்த சம்பவம் தேசிய அளவுல பெரிதாக கவனம் பெற்றது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ‘நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்துத்தானே மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்காக மக்கள் பிரதிநிதிகளை ஏன் தண்டிக்க வேண்டும்? 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என கண்டன அறிக்கை வெளியிட்டார்.

இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நாலு பேரும், ''எங்கள் பிரச்னைகளை எழுப்பவே அப்படி செஞ்சோம்னு'' சொல்லி இருக்காங்க. ஆனால், தலைநகரத்துல இதுபற்றி நிறைய கருத்துகள் ஓடிக்கிட்டு இருக்கு.

''என்ன கருத்துகள்?”

''பாரத் மாதா கி ஜேனு வார்த்தைக்கு வார்த்தை தேச பக்தியை பற்றிப் பேசும் பாஜக, பாதுகாப்பு விஷயத்துல எவ்வளவு அலட்சியமா இருக்காங்கனு” விமர்சனம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கு. இன்னும் சிலர், “பாஜகவே இப்படி சில பிரச்னைகளை உருவாக்கி, தேர்தல் சமயத்துல தீவிரவாதம் தலைதூக்குவதா மக்களை நம்ப வச்சு, பாஜகவை விட்டா, வேறு நாதி இல்லைங்கிற மாதிரி சூழ்நிலையை உருவாக்கறாங்க”னு சொல்றாங்க.

''இப்ப ஒரு தடவை, மேல சொன்ன அந்த வரியை திருப்பிப் படிங்க. Now or Neverனு எதிர்க்கட்சிகளும், Hatrick அடிச்சே ஆகணும்னு பாஜகவும் தீவிரமா இருக்கறதால, நாடாளுமன்ற சம்பவங்கள் போல, இன்னும் பல நாடகங்கள் நடக்கலாம்னு, தில்லியில பேசிக்கிறாங்க'' என்று ரா.ரா. சொன்னார்.

அதுவரை ரா.ரா பேசிக்கொண்டிருந்ததை, அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சீவர சிந்தாமணி, ‘இப்ப நான் பேசலாமா?' என்பது போல பார்க்க, தலையசைத்ததும் பேசத் தொடங்கினார்.

''ராஜப்பா சொன்னது சரிதான். பாஜக தென்னாட்டுல தனி கவனம் செலுத்த தொடங்கிட்டாங்க. தேர்தலுக்காக, தமிழ் நாட்டுல ஒரு சேலை படையை தயார் செய்யறாங்க டெல்லி. அதுக்கு முதற்கட்டமா சசிகலாவை வெளியே கொண்டு வர திட்டம் போடறாங்க. மாநில அரசின் வெள்ள நிவாரண பணிகளை, எடப்பாடியை விட கடுமையா விமர்சனம் செஞ்சிருக்கார் சசிகலா.

தேவர் ஓட்டை சிந்தாம சிதறாம வாங்கிக் கொடுக்க, அமமுக தினகரன், சசிகலா, பன்னீர் எல்லாரும் உறுதியாக இருக்காங்க. சசிகலாவுக்கு இப்ப ஒரு சிறு துரும்பு கிடைச்சாலும்போதும், அதை வைச்சு கரையேறிடலாம்னு நினைக்கிறாங்க. எடப்பாடியை விட, சசிகலா, திமுக எதிர்ப்புல ஸ்ட்ராங்கா இருக்காங்கன்னு மக்களுக்குக் காட்டினாலே போதும், எடப்பாடியை பலவீனப்படுத்திடலாம்னு நினைக்கறாங்க.

ராஜபாட்டை ரகசியம்
ராஜபாட்டை ரகசியம்ஓவியம் பிள்ளை

அடுத்தபடியா, பிரேமலதாவை தேமுதிக பொதுச்செயலாளரா பொறுப்பேற்க யோசனை சொல்லி இருக்கிறது டெல்லி. இப்ப தமிழ்நாட்டுல விஜயகாந்துக்கு அனுதாபம் வீசறதால, எப்படியும் தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்கிற தீவிரத்துல இருக்காங்க பாஜக. மத்தியில தனி மெஜாரிட்டி கிடைச்சாலும், கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் உண்டு என்கிற அடிப்படையில, அன்புமணி, தினகரன், விஜயகாந்த் மகன்னு மத்திய மந்திரி பதவி தரப்படும்னு சொல்லப்படுது. அதனால நிச்சயம் பாஜக கூட்டணியில் தேமுதிகவும் சேரலாம்னு இருக்காங்க.

சசி, பிரேமலதா எல்லோரும் வரும் தேர்தல்ல, பாஜக பக்கம் வரிஞ்சுகட்டிக்கிட்டு நிற்பாங்கனு தெரியுது'' என்ற சிந்தாமணி, சற்று மெல்லிய குரலில், ''இன்னும் ஒரு பெரிய சேலையை கூட குறி வைக்குது பாஜக. ஆனா, அவங்க இதுவரை விலாங்கு மீனாக நழுவிக்கிட்டே இருக்காங்க! தேர்தலுக்கு முன்னாடி அவங்க மனசை எப்படியாவது மாத்திடணும்னு, அமித் ஷா முயற்சி செய்யறார். அதை தெரிஞ்சுதான் இளவரசர் அவசரமா டெல்லிக்கு அமித் ஷாவை சந்திக்க ஓடி போயிருக்கார்.''

''புரியுது! அப்பன் வீட்டு சொத்துக்கு பிரச்னை வரக்கூடாதுன்னு பயப்படறாரோ என்னவோ!'' என்று சொன்னதும், சிந்தாமணி எழுந்து ஜன்னல் வழியாகப் பார்த்தார். ''அப்பன் வீட்டு சொத்துன்னு சொன்னதும் நினைவுக்கு வருது! திரும்பவும் பலத்த மழை பெய்ய போகுதாம்'' என்றபடி ஹேண்ட்பேக்கில் இருந்து குடையை எடுத்துக் கொண்டபடி வெளியே கிளம்பினார். சற்று நேரம் கழித்து ரா.ராவும் அங்கிருந்து புறப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com