

நான் ஒருமுறை கூட சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தை இதுவரை தவறவிட்டதில்லை. வருகின்ற திங்கட்கிழமை கூட காலை 10 மணிக்கு பட்டிமன்றம் என்பதால் விநாயகர் சதுர்த்திக்கு அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து கொழுக்கட்டைகள், சமையல் ஆகியவற்றை முடித்துவிட்டு சரியாக பத்து மணிக்கு உட்கார்ந்து விடுவதாகத்தான் ப்ளான்.
எப்போதுமே எந்த ராஜா எந்த பட்டினம் போனாலும் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தை மட்டும் தவறவிட்டதில்லை. அவருடைய மதுரை பேச்சும், நகைச்சுவையும் மிகவும் பிடிக்கும். எனவே நான் மிகவும் விரும்பி பார்க்கும் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தும் சாலமன் பாப்பையாவுக்கு என்னால் முடிந்த இதய அஞ்சலி இது.
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை வெள்ளந்தி சிரிப்போடு மேடை ஏறும் 'வாங்கம்மா' 'சொல்லுங்கம்மா' எனப் பாசமழை பொழியும் பேராசான்!
கனத்த இலக்கியத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடைமுறைக்கு கொண்டு வந்து
சிந்தனையைத் தூண்டும் விவாத களத்தை
சிரிப்பலையால் நிரப்பிய மேடை சக்கரவர்த்தி இவர்!
கனத்த தமிழ் அறிவை எளிய நடைமுறையில் அனைவரும் ரசிக்கும் வகையில்
பட்டித்தொட்டி எங்கும் பண்போடு
வளர்த்தெடுத்த தமிழ் பாட்டனார் இவர்!
'ஏலேய்' என்று அழைக்கும்பொழுது கிராமத்து வாசம் வீசிடுமே! நீ கொடுக்கும் திருக்குறள் விளக்கங்கள் நெஞ்சில் தத்துவமாய் நிலைத்திடுமே!
தமிழ் மேடையின் கம்பீரம் உன் பேச்சு நகைச்சுவை கலந்து சிந்திக்க வைக்கும் உன் தீர்ப்பு
சமூகத்தின் முகத்திரையை கிழித்திடுமே
இருதரப்பு வாதங்களையும் சீர்தூக்கிப் பார்த்து
இருதரப்பும் மகிழும்படி தீர்ப்பினை வழங்கி பட்டிமன்றக் கலையை வியப்புடன் பார்க்க வைத்த தமிழ் பேரறிஞர்!
சங்கத் தமிழின் கம்பீரத்தை சாமானியன் வீட்டு வசம் சேர்த்து பட்டிமன்றக் கலைக்கு இங்கு புதியதொரு முகவரி தந்தவரே
வாதங்கள் அனலாய் பறந்தாலும் புன்னகையால் நடுநிலை காத்து
இலக்கியப் பூக்களின் வாசம் பரப்பி இயல்பாய் வாழ்ந்த என் தமிழ் மகனே!
மதுரைத் தமிழின் மகுடமாய்
மக்கள் மனங்களின் விருப்பமாய்
நீதிமன்றத் தீர்ப்பைப் போல நிறைவான தீர்ப்பளித்த சான்றோரே!
அகிலமெங்கும் தமிழை அரியாசனத்தில் ஏற்றி
நகைச்சுவை நயத்துடன் நற்பண்பை விதைக்கும் சாலமன் பாப்பையா வாழ்க நீ பல்லாண்டு!
பட்டிமன்றம் என்றாலே பாப்பையா தான்
பாமரனுக்கும் புரியும் வகையில் தமிழ் தந்தாய்
நிறைவான தீர்ப்பளித்த சான்றோனே
வாழ்க உன் தமிழ் பணி என்றும்!
மேடைகள் இருக்கும் வரை
தமிழ் பேசும் நாக்குகள் இருக்கும் வரை உன் கம்பீரக் குரலும் சிரிப்பும் மறையாது வாழும் பாப்பையா அவர்களே! வாழ்க நீ பல்லாண்டு
ஆண்டின் தொடக்கமும் பண்டிகை நாட்களும் உன் பட்டிமன்றத் தீர்ப்பின்றி தொடங்கியதில்லை
சிரிப்போடு சிந்தனையை விதைத்தவரே
நகைச்சுவையின் எல்லையற்ற சிகரம் நீ
சொல்லின் செல்வரே சுவைமிகு பேச்சாளரே
மதுரைக் குரலால் மாநிலத்தைக் கவர்ந்தவரே மறைந்தாலும் வாழும் மாபெரும் தமிழறிஞரே
உமது நினைவுகள் தமிழோடு என்றும் நிலைத்திருக்கும்!
பட்டிமன்ற தீர்ப்பை கனிவாய் தந்த பெருஞ்சுடரே
இனி யார் தருவார் அந்த சுகம்
பட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் நடுவரே உமது சிரிப்பும் சிந்தனையும் என்றென்றும் எங்கள் நெஞ்சில் வாழும்!
தமிழை உலகெங்கும் கம்பீரமாய் ஒலிக்க வைத்தாய்
இனி எங்கு கேட்போம் உன் கணீர்க் குரலை?
தமிழுக்கு வாய்த்ததொரு தவப்புதல்வன் நீயே
உன் மறைவால் தவிக்குதே தமிழகம்!
தமிழின் பெருமை பேச தனித்துவமாய் நீ இருந்தாய் மறைந்தாலும் உன் நினைவுகள் மண்ணில் என்றும் வாழும்
பட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் நடுவரே
போய் வாருங்கள் இனிதே!
வார்த்தைகளில் நையாண்டி கலந்து
வாழும் நெறி ஊட்டிய வள்ளலே
காலம் உள்ளவரை உன் குரல் வாழும்
கண்ணீரால் உனக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலி!
சொல்வேந்தே! உமது தமிழ்த் தொண்டிற்கு
காலம் உள்ளவரை அழிவில்லை
விழிநீரால் அஞ்சலி செலுத்துகிறோம்
போய் வாருங்கள் தலைமகனே
உலகில் தமிழ் வாழும் வரை நீர் வாழ்வீர்
தமிழுக்கும் நகைச்சுவைக்கும் தலைமை தாங்கிய பெருமகனே
'சிவாஜி' தந்த 'சொக்கலிங்கமாய்' திரையிலும் முத்திரை பதித்தவரே
அறிவும் எளிமையும் இணைந்த அதிசய மனிதரே
போய் வாருங்கள் தமிழின் பெருமகனே!
அமைதியாய் துயில் கொள்வாய் தமிழ்த்தாயின் மடியினிலே!