-கிருஷ்ணா
"பிரகாஷ், ஒரு சின்ன உதவி" என்றபடியே அருகில் வந்தாள் ராகவி. காலையில் அலுவலகத்தினுள் நுழைந்தபோது, முகத்திலிருந்த மலர்ச்சி சற்றும் குறையாமல் இருந்தாள்.
''துடைச்சு வைச்ச கண்ணாடி போலப் பளிச்சுனு இருக்கே ராகவி!"
"அதாவது, ஆபீஸ்ல நான் வேலையே செய்யாம உட்கார்ந்திருக்கேன்னு சொல்றியா?"
"தாயே ஆளை விடு. எல்லோரும் வீட்டுக்குப் போற நேரமாச்சு. இப்போ எதுக்காக வம்பு? 'அபிராமியி'லே கமல் படம் 'புக்' பண்ணியிருக்கேன். போகணும்!" என்றேன்.
"அப்படியா...?" என்று யோசித்தாள்.
"என்ன ராகவி?"
''காஸ் தீர்ந்து போய் மூணு நாளாச்சு பிரகாஷ். ரெண்டு பேரும் வேலைக்குப் போற வீட்டுலே 'காஸ்' இல்லேன்னா ரொம்பவும் கஷ்டம்."
"ஓ, இதுதான் பிரச்னையா? கவலையை விடு. என் அத்தை வீட்டுல எப்பவுமே மூணு சிலிண்டர் இருக்கும். நாளைக்குக் காலையிலே ஏழு மணிக்கு சிலிண்டரோடு வருகிறேன். இப்போது விடை பெற்றுக்கொள்ளவா?"
''உன் அவசரத்தைப் பார்த்தால் கமல் படம் போற மாதிரி தெரியலியே. வேற படம் மாதிரி தெரியுதே...''
“ஏய், கிண்டல்தானே வேணாங்கிறது? பேச்சுலர் பையன்னா இளப்பமா உங்களுக்கெல்லாம். நான் சுத்த சைவமாக்கும், இந்த விஷயத்துல."
''சரி, சரி, ஜமாய்" என்று நகர்ந்தாள்.
ராகவி! இனிமையான தோழி. அலுவலகத்தில் ஏற்பட்ட பழக்கம் இறுகி, வீடு வரை தொடர்கிறது. அவள் கணவன் இவளுக்கும் மேலே! இரண்டு நாள் வீட்டுப்பக்கம் போகாவிட்டால் தொலைபேசியில் அழைத்து விடுவான்.
"என்னப்பா ஆளையே காணோம். ரொம்ப சுத்தரியா? அப்படி என்ன பிசி?" என்று துளைத்து எடுத்து விடுவான்.
''பிரகாஷ், போகலாமா?” என்று செல்வம் தோளைத் தொட்டு உலுப்பவே நினைவிலிருந்து மீண்டேன்.
இருவருமாய்த்தான் படத்திற்குப் போவதாய்த் திட்டம். செல்வத்தின் வற்புறுத்தல் தாங்காமல்தான் படம் போக சம்மதித்திருந்தேன்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தோம்.
"என்னடா, ராகவி வந்து பேசினாங்க போலிருக்கு?" என்றான் செல்வம்.
தலையசைத்தபடி சொன்னேன்.
கேலியாய்ச் சிரித்தான்.
"என்னடா?"
"எல்லாப் பெண்களுமே காரியவாதிகள்!"
"டேய்!"
"உண்மையைத்தான் சொல்றேன். தங்களுக்குக் காரியம் ஆகணும்னா அவங்க காட்டும் கரிசனமும், குழைவும்... மாயப் பிசாசுகள்!" என்றான்.
செல்வம் எப்போதுமே இப்படித்தான்! எதிலும் குதர்க்க வாதம் செய்பவன்.
"உன் எண்ணம் தப்புடா" என்றேன்.
"போடா, ஏமாளி! நீ விழுந்து விழுந்து உதவி செய்யற! அதனாலே ராகவியும், அவங்க கணவரும் உன் மேலே அன்பு காட்டுறாங்க. அவங்களுக்கு இப்படி ஒரு சம்பளமில்லாத உதவியாள் யாரு கிடைப்பா?" என்றான் கிண்டல் தொனி மாறாமல்.
''சேச்சே! எல்லோரையும் ஒரே தட்டுலே வைச்சுப் பார்க்கக்கூடாது
செல்வம்"
''மனிதர்கள் சுயநலவாதிகள். அதிலும் பெண்கள் காரியக்காரர்கள்.''
எங்கள் வாதம் இந்த ரீதியிலேயே ஹோட்டல் டிபன், டவுன் பஸ், தியேட்டர் வாசல் வரை தொடர்ந்தது.
"சரிடா, ஒரு பந்தயம்" என்றான்.
"சொல்லு."
"நாளை முதல் நீ அவங்களுக்கு உதவி செய்வதை நிறுத்து. அப்புறம் அவங்களோட பழக்கம் உன்னளவில் எப்படி மாறுதுன்னு பார்ப்போம்."
'எத்தனை நாள்?" என்றேன்.
"நீயே சொல்லு."
"அடுத்த மாதம் ஆறாம்தேதி ராகவியோட பையன் பிறந்தநாள். வருஷா வருஷம் நன்றாய், சிறப்பாய்க் கொண்டாடுவாங்க. கடந்த மூன்று வருடமாய் நான்தான் வி.ஐ.பி.கெஸ்ட் அதுல. இன்னும் இருபத்தைஞ்சு நாள் இருக்கு. உன் பந்தயத்தை ஒத்துக்கறேன். அதன் மூலம் ஏதாவது மாற்றம் உண்டான்னு பார்த்துடுவோம்” என்றேன்.
தியேட்டர் மணி ஒலிக்க, உள்ளே சென்று படத்தில் ஆழ்ந்தோம்.
அடுத்த நாள் காலையில் காஸ் சிலிண்டருடன் ராகவி வீட்டுக்கு நான் போகவில்லை.
மனசுக்குள் ஒரு குற்ற உணர்வு. தேவையற்ற விவாதத்தால் ஒரு நல்ல நட்பை இழந்துவிடுவோமோ? காரியக்காரர்களாய் இருந்துவிட்டுப் போகட்டுமே! என்னளவில் நான் ஏன் மாறவேண்டும்?
சலனங்கள் மனதில் சித்திரம் தீட்ட முயன்றது. இருந்தாலும், ஓர் எண்ணம். செல்வத்திடம் பந்தயத்திற்கு ஒத்துக்கொண்டாயிற்று. இதுவும் நல்லதற்குத்தான். மனிதர்களை எடை போட ஒரு சந்தர்ப்பம்!
"மன்னிச்சுடு ராகவி! என் அத்தை வீட்டுலே சிலிண்டர் இல்லை. எப்பவும் கிடைக்கும். ஆனால், இந்த முறை..." என்று கதைத்தேன் ஆபீசில் ராகவியிடம்.
''பரவாயில்லேப்பா, நீ என்ன செய்வே அதுக்கு" என்று அவள் சொன்னதும் குற்ற உணர்ச்சியில் அவசரமாய் நகர்ந்துவிட்டேன்.
அடுத்து வந்த நாலைந்து முறையும் அவள் கேட்ட உதவிகளுக்கு ஏதேதோ காரணங்கள் சொல்லி தட்டிக் கழித்தேன்.
அட, எனக்குள் இத்தனை கற்பனை ஊற்றா?
குறுகுறுப்பான மனத்துடன் அவள் வீட்டுக்குச் செல்லவும் பிடிக்கவில்லை.
டெலிபோனில் கூப்பிட்டு அதட்டிய அவள் கணவனிடம் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டேன்.
அலுவலக நேரம் முடிந்த பின்னும், மேலும் சில வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு என் பொய்யை உண்மையாக்க முயன்றேன். வருடக் கடைசி என்பதால் வேலையும் தலைக்கு மேல் இருந்தது.
"என்னப்பா, இந்த வருஷம் ப்ரமோஷன் டைமா? இப்படி வேலை செய்யற?" என்று நண்பர்கள்கூட கிண்டலடித்தார்கள்.
"பிரகாஷ், இன்னிக்கு என்ன தேதி தெரியுமா?" என்று என் இருக்கை முன் வந்து நின்றான் செல்வம்.
காலண்டரைப் பார்த்தேன்.
"அட, ஆமாம்! ஆறாம் தேதி என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது.
செல்வத்தின் பார்வையைச் சந்திக்க முடியாமல் திணறினேன்.
ராகவி இன்று அலுவலகம் வராததும் ஞாபகம் வந்தது.
நான் எப்படி மறந்தேன் ஆறாம் தேதியை? மனசின் குற்ற உணர்வுக் குறுகுறுப்பில் மறந்து போனதோ?
"என்னப்பா வி.ஐ.பி.கெஸ்ட்? பிறந்த நாள் கொண்டாடப் போகலியா?" என்றான் செல்வம் கிண்டலாய்.
அவன் கிண்டல் என்னை உசுப்பிவிட்டது.
இரண்டு நாள் லீவில் ஊருக்குச் சென்றுவிட்டு இன்றுதான் அலுவலகம் திரும்பியிருந்தேன். அதனால் சொல்ல விட்டுப் போயிற்றோ? அப்படியிருந்தாலும், காலையில் போன் செய்து என்னை அழைத்திருக்கலாமே!
இவ்வளவுதானா என்மேல் பரிவும், மரியாதையும் ராகவிக்கு?
எனக்குள் துக்கம் முட்டிக்கொண்டு அடைத்தது. எனக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியில் கண்களில் நீர்கூட வந்துவிட்டது.
சட்டென முடிவு செய்தேன். அலுவலகம் முடிந்ததும் நேராய் ராகவி வீட்டை நோக்கிச் சென்றேன்.
வழியில் ஒரு பொம்மையைப் பரிசாக வாங்கிக்கொண்டேன்.
'உங்களுக்கு நட்பை மதிக்கத் தெரியாது போயிருக்கலாம். ஆனால் நான் அப்படியல்ல' என்று செயலில் காட்டி, அவர்களை வெட்கப்பட வைக்கவேண்டும் என்ற வேகத்தோடு ராகவியின் வீட்டினுள் நுழைந்தேன்.
"மாமா!" என்று வாசல் வெராந்தாவில் விளையாடிக் கொண்டிருந்த ப்ரவீன் வந்து காலைக் கட்டிக்கொண்டான்.
"ஹாப்பி பர்த் டே ப்ரவீன்" என்று பொம்மையை நீட்டினேன்.
"ஹையா!" என்று குதித்தபடி உள்ளே ஓடினான். கூடவே நானும் தொடர்ந்தேன்.
"அடேடே, பிரகாஷ்! வா, வா" என்று ஹாலில் அமர்ந்திருந்த ராகவியும், அவள் கணவரும் ஏக காலத்தில் வரவேற்றனர்.
"நான் சொல்லலே, பிரகாஷ் மறந்திருக்க மாட்டான்னு. நிச்சயம் வருவான்னு” என்றான் கோபால், ராகவியின் கணவன்.
"எப்ப ஊரிலிருந்து வந்தே? அம்மா உடம்பு எப்படியிருக்கு? உன் தங்கச்சி போயிட்ட சோகம் கொஞ்சமாவது அவங்க மனசுல குறைஞ்சிருக்கா?" என்று ராகவி கேட்டாள்.
''ஆமாம், அதெல்லாம் இருக்கட்டும், ப்ரவீன் பிறந்த நாளைக் கொண்டாடலியா?" என்று ஹாலைச் சுற்றிப் பார்த்தேன்.
போன முறை கலர் காகிதம் ஒட்டி, அக்கம் பக்கமுள்ள வீட்டுக் குழந்தைகளைக் கூட்டி, கேக் வெட்டி, ஒரே சந்தோஷக் கூச்சலாய்... ஏன் இன்று இல்லை அதெல்லாம்?
''நாலு மாசத்துக்கு முன்னாடி உன் தங்கை ஒரு விபத்தில் செத்துப் போய் நீ புலம்பினப்ப நான் என்ன சொன்னேன்? அந்தச் சகோதரி போனால் என்ன, இந்த சகோதரி இல்லையான்னு கேட்டேனா இல்லையா?"
"ஆமாம்!"
''உன் சோகம், எங்க சோகமும்தானே. எப்படி உங்க வீட்டுல ஒரு வருஷம் எந்தப் பண்டிகையும் இல்லாம, துக்கம் அனுஷ்டிப்பீங்களோ, அதே மாதிரி இருக்க நாங்களும் முடிவு பண்ணிட்டோம்."
"ராகவி!"
"ஆனால் ப்ரவீன் குழந்தைதானே? அவன் மனசு நோகக் கூடாதுன்னு புது ட்ரெஸ் எடுத்து, கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்தோம்" என்றவர்களை பிரமிப்புடன் பார்த்தேன்.
எத்தனை அருமையான மனிதர்கள் இருவரும்! என் மேல் எனக்கு வெறுப்பும், வெட்கமும் ஏற்பட்டது. பந்தயப் பொருளாய் திரௌபதியை, தர்மர் வைத்ததைவிட கேவலமாய் உணர்ந்தேன். இந்த நட்பையும், அன்பையும் போய் சோதனை செய்து பார்த்துவிட்டேனே!
"அது சரி ராகவி, என்னிடம் நீ நாலஞ்சு முறை கேட்ட உதவிகளைச் செய்யாததினால் கோபமோன்னு நினைச்சுட்டேன்" என்றேன் குற்ற உணர்வு தாளாமல்.
என்னைப் பார்த்துச் சிரித்தாள் அவள்.
"எங்களுக்கு என்ன மனசு அவ்வளவு சின்னதா? இதோபாரு பிரகாஷ், உன்னாலே முடியும்னா நிச்சயம் நீ செய்வேங்கற நம்பிக்கையிலே எள்ளளவம் சந்தேகம் கிடையாது எனக்கு. அதோட உனக்குன்னு தனி வாழ்க்கை இருக்கு. அதுல நாங்களும் ஓர் அங்கம்தானே தவிர, முழுதுமே நாங்களாய்த்தான் இருக்கணுங்கிறது பைத்தியக்காரத்தனம், என்ன சொல்ற?"
"ஆமாம், பைத்தியக்காரத்தனம்தான்!" என்றேன் தெளிந்த மனத்துடன்.
பின்குறிப்பு:-
கல்கி 10 ஏப்ரல் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்