

-ஆர். வெங்கடேஷ்
பேருந்தின் கண்ணாடி ஜன்னல் மீண்டும் கைமுட்டியை இடித்தபோது, ஆனந்திக்குக் கோபம் எழுந்தது. சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். அங்கிருந்தவன் அரைக்கண்ணை மூடிக்கொண்டு வாய் திறந்தபடி இருந்தான். ஆனந்திக்கு மின்னலென ஆத்திரம் கொப்பளித்தது.
விடிகாலையில் மனதைக் கெடுத்துக்கொள்ள வேண்டாமென தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதி போற்றினாள் ஆனந்தி. இன்னும் கழுத்தோர வியர்வை துன்புறுத்தியது. அம்மா தொல்லை தாங்காமல் வென்னீரில் குளித்தது, முதுகில் வெப்பம். பாண்டிச்சேரி என்றால் தன்னிஷ்டம். தண்ணீர்தான்.
ஒவ்வொரு திங்கள் காலையும் நடக்கும் கூத்துதான் இன்றும். ராத்திரி என்ன சீக்கிரம் படுத்துக்கொண்டாலும், விடிகாலை விழிப்பு வரமாட்டேன் என்கிறது. இன்றும் அப்பா எழுப்பிவிட்டார். மணி நாலேகால். ஐந்தரை பஸ் பிடிக்கவேண்டும். பை பாஸ் ரைடர். எட்டே காலுக்குப் பாண்டிச்சேரி போய்விடலாம். தவறவிட்டால் எல்லாம் சர்வ நாசம். அப்புறம் அலுவலகம் லேட், முறைப்பு, குத்தல் இத்யாதிகள்.
இப்போது மனதை அலைக்கழித்தது, பெருகிய வியர்வை. துணியோடு நடுமுதுகு ஒட்டிக்கொண்டது. நல்ல காற்று வந்தால் தேவலை. அதற்குத்தான் பேருந்தின் ஓர இருக்கைக்கு அல்லாடுவது. இன்று அதிர்ஷ்டம். சைதாப்பேட்டையில் வண்டி ஏறியபோது, ஒரு ஓர சீட் தனக்கெனவே காத்திருந்ததுபோல், வாவென்றழைத்தது. கைப்பையை மேலே போட்டுவிட்டு, காற்றை இருகரம் நீட்டி வரவேற்றாள்.