

-சுப்ர.பாலன்
முன்பெல்லாம் அவனுக்குப் பத்துக் காசு, இருபது காசு நாணயங்கள் சோதனை பண்ணும். இப்போது நாலணா, எட்டணா நாணயங்கள் அந்தத் திருப்பணியில்!
பேருந்தில் ஏறி நோட்டைக் கொடுத்துப் பயணச் சீட்டு வாங்குகிற ஒவ்வொரு நேரமும் அவனுக்குச் சோதனை. என்னமோ எட்டணா, நாலணா சில்லறை இல்லாவிட்டால் ஈனப் பிறவி, இழி பிறவி என்று நினைத்து முகஞ்சுளித்து முணுமுணுக்கிற நடத்துனர்களின் ராஜ்ஜியம்!
இன்றைக்குச் சோதனை இரவு பத்து மணி வாக்கில். என்னமோ பேரணி, பெருமாள் அணி என்று நகரத்தில் தேங்கியாகிவிட்டது. மின்சார வண்டியும் ஓடாத கூடுதல் சங்கடம். தாம்பரம் சானடோரியம் போயாக வேண்டும். ஏதோ ஒரு கவனக்குறைவாகத் தொண்டை வறள்கிறதே என்று பால் வாங்கிச் சாப்பிட்டது தவறு என்று பேருந்துக்கு நிற்கும்போது உறைக்கிறது.
சில்லறைக்காகப் பையை நெருடுகிறபோது கையில் கிடைப்பது ஐம்பது காசு மட்டும். பரிதாபமாகப் பார்த்தால் ஐம்பது காசு, ஐந்து ரூபாய் ஆகிவிடுமா என்ன? சுற்றுமுற்றும் பார்த்தால் சோதனை மேல் சோதனை! தெரிந்த முகத்தை இருட்டில் தேடுவது அவ்வளவு சுலபமா? அதுவும் கிண்டி பஸ் நிறுத்தத்தில் காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி பேருந்துகள், போனால் போகிறதென்று நகரப் பேருந்துகள் என்று மொய்த்துக்கிடக்கும். நமக்குத் தேவைப்படுகிற பேருந்தில் தவறிக்கூட ஏறிவிடக் கூடாது என்கிற சிரத்தையோடு வழி மறிக்கும் ஆட்டோக்கள், லாரிகள்...