

-அருண் சரண்யா
பத்தடி நீளமும், முக்கால் அடி பருமனுமாக இருந்த அந்த மலைப்பாம்புக்கு, தான் வழி தவறி எங்கோ வந்துவிட்டோம் என்பது புரிந்தது. சற்று தூரத்தில் நிறைய இரைச்சல். மலைப்பாம்புகளுக்கே கண் கொஞ்சம் மந்தம் என்பதால் அந்த விளையாட்டு மைதானத்தில் ஆடிக்கொண்டிருந்த உருவங்கள் பார்வையில் பதியவில்லை. அசைவு மட்டும் விளங்கியது. 'எதிரியா? இரையா?' எப்படியிருந்தாலும் பார்த்துவிடுவது என்று அந்தப் பக்கமாக மெள்ள நகரத் தொடங்கியது.
பாதி ஆட்டத்தில் விடப்பட்ட பத்து நிமிட இடைவேளை. கூனிக்குறுகி உட்கார்ந்திருந்தான் முத்துகிருஷ்ணன். 'ஏன் அப்படிச் செய்தோம்?!
யாரோ ஒருவர் கெட்டிலில் தண்ணீர் கொண்டுவந்து விளையாட்டு வீரர்களுக்கு தம்ளரில் சப்ளை செய்துகொண்டிருந்தார். "அதோ உட்கார்ந்துக் கிட்டிருக்காரே முத்துகிருஷ்ணன், அவருக்குக் கொடுங்க. பாவம் கோல் போட்ட களைப்பு இருக்கும் அவருக்கு" என்றான் ஒருவன். நக்கல்!