
-எஸ்.ஐ.ஆர்.
மூகாம்பிகை கம்பைன்ஸ் பெருமையுடன் வழங்கும் முத்தமழை. இன்று பாடல் பதிவுடன் இனிதே தொடங்குகிறது. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் - அமுதன்.
தினத்தந்தியில் முழுப் பக்க கலர் விளம்பரம் பார்த்தபோது எனக்குள் ஜிவ்வென்று சந்தோஷப் பறவை ஒன்று சிறகடித்துப் பறப்பது போலிருந்தது.
அமுதன்? அமுதன்?
கடைசியில் அவன் கனவு நனவாகிவிட்டதா? அப்பா! எத்தனை சந்தோஷமாக இருக்கிறது! என்னால் முடியாமல்போனது! என்னால் மட்டுமல்ல... எங்கள் செட்டில் மிச்சம் ஏழு பேராலும் முடியாமல்போனது!
சினிமாக் கனவுடன் கம்பெனிகளுக்குப் படையெடுக்கும் எத்தனையோ நூற்றுக்கணக்கான இளைஞர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். அது 1988ஆம் வருஷம். மாபெரும் டைரக்டராகி, தமிழகத்தையே கலக்கும் கனவுடன் தினசரி மைலாப்பூரிலுள்ள அந்தப் பெரிய 'பா' டைரக்டரின் அலுவலகத்துக்குப் படையெடுப்பேன், அஸிஸ்டெண்டாகச் சேர.
அவரது அலுவலகத்துக்கு எதிரே உள்ள குட்டிச்சுவரில் எனக்கு முன்னதாக ஏழெட்டுப் பேர் தவமிருப்பார்கள், என் போன்ற கனவுடனே! தினசரிப் பழக்கத்தில் நாங்கள் நண்பர்களானோம். அவர்களில் ஒருத்தன் அமுதன்.
ஒல்லியாக, குண்டு கண்ணாடியுடன் குச்சி முடியும் அழுக்கு டிரெஸ்ஸுமாக சூளைமேட்டிலிருந்து சைக்கிளில் வருவான் தினசரி.
குட்டிச்சுவர் மேடையில் நாங்கள், டைரக்டர் வரும்வரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். மெல்லிய குரலில் எங்கள் கனவுகள் அரங்கேறும் பீடம் அது!