புகைப்பிடித்தல்
புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்! புகைப்பிடித்தல் - அச்சுறுத்தும் புள்ளிவிவரங்கள்!

Published on

- முனைவர் என்.பத்ரி

‘புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்’ என்னும் விழிப்புணர்வு வாக்கியத்தை பல இடங்களிலும், சிகரெட் பாக்கெட்களிலும் படித்துக்கொண்டேதான் பலரும் இப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். புகைப்பிடிப்பதால் ஏற்படக்கூடிய பாதகங்கள் குறித்த புள்ளிவிவரங்களையும், புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அலசுகிறது இப்பதிவு.

* இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், கனடா உட்பட உலகம் முழுவதும் இளைஞர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனைக்குரியது.

* புகைபிடிக்கும் ஒருவர், ஒவ்வொருமுறை புகைபிடிக்கும்போதும் தன்னுடைய வாழ்நாளின் ஐந்து நிமிடங்களை இழக்கிறார்.

* ’வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக்கொண்டே இருப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகள் வரை இழந்து விடுகிறார்' என்கிறது உலக சுகாதார அமைப்பு. உலகம் முழுவதும் புகையிலையால் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் உயிரிழக்கிறார்’ என்கிறது அந்த அமைப்பின் அறிக்கை.

* உலகம் முழுவதும் புகைப்பிடிக்கும் 110 கோடி பேர்களில் 50 சதவிகிதம் பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கிறார்கள். 

* ஒவ்வொரு வருடமும், உலகம் முழுவதும் 71 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துவதால் மட்டுமே உயிரிழக்கின்றனர். இதில் ஏறத்தாழ 9 லட்சம் பேர், புகைப்பவரின் அருகிலிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

* சாதாரணமாக 51 லட்சம் ஆண்களும், 20 லட்சம் பெண்களும் புகைக்கு அடிமையாகி உயிரிழக்கிறார்கள்.

* இந்திய மக்கள் தொகையில் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 17.8 சதவிகிதம் பேர்களில், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 6 லட்சத்து 25 ஆயிரம் பேரும், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 கோடியே 36 லட்சத்து 14 ஆயிரம் பேரும் அடங்குவர்.  

* பீடி, சிகரெட், சுருட்டு தவிர்த்து, இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2.1 சதவிகிதமாக உள்ளது. இதில், பெண்கள் 0.8 சதவிகிதம் பேர்.

* ஒருவர் புகைப்பிடிக்கும்போது, உள்ளே இழுக்கும் புகையைவிட வெளியே விடும் புகையே அதிகம். இரண்டிலுமே புற்றுநோய்க்கு வழிவகுக்கும் நச்சுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன.

* வீட்டில் ஒருவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அது மற்றவர்களின் உடல் நலத்தையும் கண்டிப்பாக பாதிக்கும்.

* புகைப்பிடிப்பதால், கண், மூளை, முடி, மூக்கு, பல், வாய், தொண்டை, காது, நுரையீரல், இதயம், மார்பு, வயிறு, கல்லீரல், சிறுநீர்ப்பை, கைகள், சருமம், எலும்புகள், முழங்கால், தசை, ரத்த நாளங்கள் போன்ற அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

* ஒரே நேரத்தில் 30 மி.கி. முதல் 60 மி.கி. அளவிலான நிகோடின் ஒருவருடைய உடலுக்குள் சென்றால், அவருக்கு மரணம்கூட நேரலாம். ஒரு சிகரெட்டில் 12 மி.கி. நிகோடின் உள்ளது. 

* தொடர்ந்து புகைப்பிடிக்கும் ஐந்து ஆண்களில், ஒருவர் மனதளவில் பாதிக்கப்படுகிறார்.

* சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும்
10 பெண்களில் ஏழு பேர் பல்வேறு விதமான நோய்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வடிகஞ்சியின் ஆரோக்கிய பலன்கள்!
புகைப்பிடித்தல்

* புகைக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, அதிலுள்ள ரசாயனங்கள் மூளைக்குச் செல்வதால், சாந்தமாகவும் புத்திக் கூர்மையுடனும் இருப்பதுபோல அவர்களுக்குத் தோன்றும். நாளாக, நாளாக இயல்பாக இருப்பதற்கே புகைக்க வேண்டிய அபாயம் உருவாகும்.

* புகைப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதால், விரைவாக அவர்கள் இறக்க நேரிடலாம்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிப்பது மிக மிக அவசியம். ‘முடியும்’ என்று நினைத்தால், மனதிடத்துடன் முற்பட்டால், முடியாததே கிடையாது. இதற்கும் பல வழிகள் உண்டு. நன்மைகள் காத்திருக்கின்றன.

* ஒரு நிமிடத்தில் ஆரம்பித்த புகைப்பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட மன உறுதி தேவை. 

* புகைப்பழக்கத்தினால் சீரழிந்திருக்கும் உடலை யோகா, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றின் மூலம் மீட்டு எடுக்கமுடியும். பொருளாதாரரீதியான பிரச்னைகளை ஓரளவுக்குச் சமாளிக்கப் புகைப்பதை கைவிடுவதே சிறந்த வழி.

* புகைக்கும் பழக்கத்தை நிறுத்திய இருபதாவது நிமிடத்திலிருந்து நம் உடல் சுத்தமாவதால், ரத்த ஓட்டமும் இதயமும் சீராக இயங்கத் தொடங்கும்.

* ஒன்பது மாதங்களில் இருமல், மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் குணமாகும்.

* ஐந்து வருடத்தில் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் நீங்கும்.

* 30 வயதில் புகைப்பழக்கத்தை கைவிடும் ஒருவருக்கு 10 ஆண்டுகளும், 50 வயதில் புகைப்பழக்கத்தைக் கைவிடும் ஒருவருக்கு 6 ஆண்டுகளும் ஆயுட்காலம் கூடும் வாய்ப்பு உண்டு.

* புகையிலையை நிறுத்த ஆரம்பித்த சில நாள்களில் ஏற்படும் கோபம், எரிச்சல் போன்றவற்றைத் தவிர்க்க, தண்ணீர் அருந்துவது, உடற்பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பயன் படுத்துவதன் மூலம், புகைபிடிக்கும் எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

* கேரட், வெள்ளரிக்காய் மற்றும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

* புகைபிடிப்பதிலிருந்து விடுபட அதற்குரிய மருத்துவர் களை கலந்தாலோசித்து, தேவைக்கேற்ற மருந்துகளை எடுத்துக்கொண்டால் புகைப் பழக்கத்திலிருந்து எளிதில் வெளியே வரமுடியும்.

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள்...
புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள்...

கூட்டு முயற்சியின் அவசியம்:

புகையிலையின் பயன்பாட்டைக் குறைக்க, புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டும் என உலக சுகாதார மையம் இந்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசும், பொதுநலத்தொண்டு நிறுவனங்களும் பல வடிவங்களில் விழிப்பு உணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டாலும், கஞ்சா போன்ற விதவிதமான போதைப்பொருள்கள் சந்தையில் அறிமுகமாகி, இளையோரின் வாழ்வைச் சீரழிக்கவே செய்கின்றன.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இது சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும். திரைப்படங்களிலும். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிகர்கள் புகைக்கும் காட்சிகளை தவிர்க்க வேண்டும்.

சமூகப் பிரச்னையாக மாறிவிட்ட புகைப்பழக்கத்தை வேரறுக்க நமது கூட்டு முயற்சி ஒன்றே வழி. முயன்று பார்த்தால் நமக்கேத் தெரியும், இது கடினமல்ல, முடியும் என்பது.

logo
Kalki Online
kalkionline.com