

வீடெங்கும் ஆனந்தம். கொண்டாட்டம். பெரும் கோலாகலமாக இருந்தது.
சமையல் சமைத்து முடித்து, இறைவனுக்கு நிவேதனம் செய்து, பிறகு வாழை இலையை கீழே போட, பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக சமையில் கட்டின் மேடையில் பெரியவர் மனைவி வைத்திருக்க, அந்த அம்மா, நான்தான் பரிமாறுவேன் என்று அடம் பிடிக்க, ‘அப்படியே ஆகட்டும்’ என்று வேம்புவும் சம்மதிக்க, முதல் இலையில் தன் அன்பு கணவருக்கு பால் பாயசத்தை சிறிது வைத்து ஆரம்பிக்க, அடுத்து அடுத்து இலையில் வைக்க வேண்டியதை சரியாக பைந்தமிழ் அந்த அம்மாவிடம் கொடுக்க, இப்போது அன்னம் போட்டு நெய் விடப்பட்டதும், பெருமூச்சு விட்டபடி நிமிர்ந்தாள், வேம்பு செல்லமாக அழைக்கும் அவர் அன்பு மனைவி, ‘செல்லா’.
“செல்லா, நீ சித்த ஓய்வு எடுத்துக்கோ. பைந்தமிழ் மீதியை பரிமாறுவாள்” என்று வேம்பு சொன்னதுதான் தாமதம் உடன் ஒரு உத்வேகம்; மற்றும் தெம்பு வரப்பெற்றவளாக, ‘முடியாது,’ என்ற ரீதியில், வேம்புக்கு அதான் தன் அன்புக்கணவருக்கு பிடித்த வெங்காயச் சாம்பாரை ஊற்ற, அவரும் தொட்டி கட்டி குடிக்க, அங்கே பெரும் மகாபாரதப்போரே நடந்தது.