

விஜயனும் செழியனும் கிருஷ்ணகிரியிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். மதுரை தியாகராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்து, கல்லூரி வளாக நேர் காணலில் மென்பொருள் பொறியாளராக வேலை கிடைக்க... சென்னைக்கு புலம் பெயர்ந்தார்கள். குடும்பத்தாரிடமிருந்து விடைபெற்று ரயிலில் ஏறியதுமே ஒரு விடுதலை உணர்வை அடைந்தான்; விஜயன்.
இனி மாதாமாதம் வீட்டிலிருந்து வரும் பணத்தை எதிர்பார்க்க வேண்டாம். போன் பில் இத்தனையா? என்ற கேள்விக்கு விடையளிக்கத் தேவையில்லை. ஒரு புது உடுப்புக்காக அப்பாவிடம் தயங்கி நிற்கவேண்டாம். அப்பாவின் குரல் அடங்கி ஒலிக்கும். அம்மா "இங்கே வந்து குடிக்கமாட்டாயா?" என்று கேட்காமல், காபி அவன் இருக்குமிடம் தேடிவரும். சம்பாதிக்கும் மகனுக்குக் கிடைக்கும் தனிப்பட்ட மரியாதையே அலாதி இல்லையா!
பலத்த எதிர்பார்ப்புகளுடன் சென்ட்ரல் ஸ்டேஷன் வந்து இறங்கினார்கள்; நண்பர்கள். சென்ட்ரல் ஸ்டேஷனின் பிரம்மாண்டம் அவர்களைத் திகைக்க வைத்தது. சுற்றிலும் பரபரவென இயங்கும் மக்கள் கூட்டம் அவர்களைத் திகைப்படையச் செய்தது.