

பெருநகரின் அந்தப் புறநகர் பகுதி விழாக்கோலம் பூண்டு கிடந்தது.
மலையடிவாரத்திலுள்ள அந்த முருகக் கடவுள் கோயிலின் கும்பாபிஷேகத்தை மும்பையைச் சேர்ந்த அந்தத் தம்பதியினர் நடத்தி வைக்க வருகிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்து விட்டது.
‘மும்பைக்காரர் எதற்கு இங்கு வந்து எல்லாம் செய்கிறார்? அவர் யாராக இருப்பார்?’ என்று ஒரு சாரார் சந்தேகப்பட்டார்கள்.
’அவர் இங்கிருந்து மும்பை சென்று அங்கு தன் சாம்ராஜ்யத்தை நிறுவியிருப்பாரோ!’ என்று இன்னொரு சாரார் கருத்து கொண்டிருந்தார்கள்.
எது எப்படியோ… இந்த ஆண்டு திருவிழா பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் அந்தப் பகுதியையே ஒளி வெள்ளத்தில் மூழ்கடித்து இருந்தது.
காலையில்தான் கும்பாபிஷேகம். மாலை பிளைட்டிலேயே அவர்கள் குடும்பத்துடன் வந்து விட்டார்கள். ஆணொன்றும் பெண் ஒன்றுமாய் இரண்டு குழந்தைகள். நால்வருமாய் வந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி விட்டார்கள். ரெப்ரஷ் ஆகி, குழந்தைகளை அறையில் விட்டு விட்டு அவர்கள் இரண்டு பேர் மட்டும் கோயிலுக்கு வந்தார்கள்.