சிறுகதை: அரங்கி!
பழைய குப்பைகளை மட்டுமில்லை பழைய நினைவுகளைத் கிளறினாலும் சுகமாகத்தான் இருக்கிறது. இரண்டும் ஒட்டிப் பிறந்தவை. ஒன்றால் மற்றது என்கிற சங்கிலித் தொடர்.
அரங்கி கதையும் அப்படித்தான். பாமர வழக்கில் ரெங்கன், அரங்கன் உண்டு. அப்படி ரெங்கி, அரங்கி எல்லாம் உண்டா என்பது தெரியவில்லை.
இத்தனை நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கேட்டு பழகி மனசில் பதிவான பெயர் இந்த அரங்கி.
என் அம்மாவுக்கு மூன்றாவதாக என் தம்பி பிறந்தபோது வீட்டோடு தங்கி இருந்து அவரை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டவர்தான் அரங்கி. அவருடைய இடுப்பு சிம்மாசனத்தில் நான் சில நேரங்களில் அமர்ந்திருந்ததும் இலேசான புகை மூட்டமாக நினைவுக்கு வருகிறது.
ஒரு மூன்று மாத காலம் போல் அரங்கியின் சேவையும் தேவையும் அம்மாவுக்கு அவசியமாக இருந்தன. ஏறக்குறைய எண்பது வயது வாழ்ந்த என் அம்மாவுக்கு வீட்டுப் பணியாள் என்று அமைந்தது இந்த அரங்கிதான். அதுவும் அந்த மூன்று மாதங்கள் மட்டுமே.
மற்றபடி பாத்திரம் துலக்க, வீடு வாசல் பெருக்க என்று எல்லா வேலைகளையும் அம்மா ஒருத்தியே செய்வார். செய்தாக வேண்டிய பொருளாதார நிலை.

