

தோட்டத்தில் முளைத்திருக்கும் களைகளைக் களைக்கொத்தியால் வெட்டி அவைகளைப் பிடுங்கி ஒருபக்கமாய் போட்டுக்கொண்டே வந்தார், முத்தையா. அப்போது கையில் ஒரு டீ கப்புடன் அங்கே வந்து நின்ற அவரது மனைவி வள்ளியம்மை, அங்கே அங்குமிங்குமாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த ஜானியைப் பார்த்தவுடன், "இது எவ்ளோ ஜாலியா விளையாடுது பாருங்க..." என்றுவிட்டு திரும்பிப் போனாள்.
ஜானி அவர்களது வீட்டு புது நாய்க்குட்டி. செடிகளுக்குள் ஓடுவதும் அவரைச் சுற்றிச்சுற்றி வருவதுமாக விளையாடிக்கொண்டிருந்தது.
அது அவரது மகள் வீடு. ஆறு சென்ட் இடத்தில் வீடும் தோட்டமுமாக அமைத்திருந்தார்கள். நிறைய காய்கறிச் செடிகளும் கொஞ்சம் பூச்செடிக்களுமாக வளர்த்து வந்தார்கள்.
பேரக்குழந்தைகள்தான் அவர்களை இங்கே வரச் சொல்லி இருந்தார்கள்.
"ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் நாங்கதான் அங்கே வர்றோம்... இந்தத் தடவை நீங்கதான் இங்கே வாங்களேன், எங்களுக்கும் ஒரு சேஞ்சா இருக்குமில்லையா..." என்று குழந்தைகள் கெஞ்சினார்கள். மகளும் மருமகனும்கூட அப்படியே கேட்டுக்கொண்டார்கள். குழந்தைகள் கெஞ்சவும் மனது இளகி வீடு நிலபுலன்களை எல்லாம் தம்பிவீட்டினரைப் பார்த்துக் கொள்ளச்சொல்லிவிட்டு கோவைக்கு வந்துவிட்டார்கள் இவர்கள் இருவரும்.