

வெள்ளை நிலக்கரித் துண்டுகள் மாதிரி தாம்பாளம் நிறையக் கொட்டிக் குவித்திருக்கிறார்கள். சீனாக் கல்கண்டு.! அது கல்யாணவீடா அல்லது வேறு ஏதாவது மங்கல நிகழ்வா இப்போது நினைவில்லை.
கைவிரல்கள் துறுதுறுக்கின்றன.. ஒரே ஒரு சிறு கட்டியை எடுக்கவேண்டும் போல்.. யாரேனும் "இந்தா கொழந்தே" என்று அன்போடு ஒன்றை எடுத்துத் தரமாட்டார்களா என்றும் எதிர்பார்ப்பு.
அம்மா என் அவஸ்தையை கவனித்திருக்க வேண்டும். கூர்மையான சுடுகிற பார்வை. நான் என் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொள்ள முயல்கிறேன்.நிழல்மாதிரி மௌனமாக அருகே வந்து காதைப்பற்றி அந்தண்டை இழுத்துப் போகிறார்.
அம்மாவின் பார்வை படு பிரகாசமானது. ஆகிருதியான உடம்பெல்லாம் இல்லை. சராசரிக்கும் சற்றே குறைவான உயரம் தான். அந்தக் கண்களில் கனிவு கோபம் ஆனந்தம் கருணை...நவரசங்களும் அழகாக வெளிப்படும்.
'சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா. சூரிய சந்திரரோ.." என்று பாடிய பாரதி மறைந்த ஆண்டில்தான் அம்மா பிறந்திருந்தார்....1921 ! அத்தனை பிரகாசமான சூரியச் சுடர்கள் அம்மாவின் பார்வைக்கு!