

ஆரூயிர் நண்பர் அழகேசனுக்கு,
உன் அன்பு நண்பன் ரவிகுமார் மிக்க நலத்துடன் எழுதும் கடிதம்.
நீ நலமே இருக்க நம்புகிறேன். உன்னோடு கைபேசியில் பேசுவதைவிட அஞ்சல்வழி கடிதம் மூலமாக என்னுடைய இன்பதுன்பங்களைப் பகிர்ந்துகொள்வதையே அதிகம் விரும்புகிறேன்.
நான் இன்பமாக நினைப்பதெல்லாம் நூலகத்திற்குச் சென்று செய்தித்தாள்களை வாசிப்பது, பால்ய சிநேகிதர்களை அடிக்கடி சந்தித்துப் பேசுவது, நீர்நிலைகளின் கரைகளில் நின்றுகொண்டு பல மணிநேரம் தண்ணீரை ரசிப்பது, வானில் ஓடும் மேகங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது, எந்த வகையிலாவது தினசரி யாரெனும் ஒருவருக்கு உதவுவது. இப்படித்தான் எனது ஒய்வுகாலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறேன்.
துன்பம் என்று சொல்வதற்கு என்னிடம் ஏதுமில்லை. ஆனால், வீட்டைவிட்டு வெளியே சென்று பார்க்கும்போதுதான் எனக்கு என்னவோ என் கண்ணில் படும் காட்சியெல்லாம் துன்பமாகவே தெரிகிறது.
சில நாட்களுக்கு முன் டவுனுக்குச் செல்வதற்கு எனது பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று பேருந்துக்காகக் காத்திருந்தேன். அங்கிருந்த பயணிகள் நிழலகத்தில் இருக்கும் சிமெண்டுப்பலகைகள் உடைக்கப்பட்டுக் கிடந்தன. அந்தக் கட்டடமே குப்பையும் கூளமுமாகக் காட்சி அளித்தது. அந்தக் கட்டடச் சுவர் முழுவதும் பிறந்தவர், இறந்தவர் போஸ்டர்கள், திருமணவாழ்த்து போஸ்டர்கள் என பேருந்து நிறுத்துமிடம் என்ற தடயமே இல்லாமல் மறைத்து ஒட்டப்பட்டிருந்தது.
இதனை பார்த்து வேதனைப் பட்டுக்கொண்டிருக்கும்போதே நகரப் பேருந்து ஒன்று வந்தது. அதில் ஏறி அமர்ந்தேன். பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் கைபேசியில் கதையளந்துக் கொண்டிருந்தனர். இடையிடையே நடத்துநரும் கைபேசியில் உறவாடிக்கொண்டிருந்தார்.
பேருந்தில் சில இருக்கைகள் கிழிக்கப்பட்டிருந்தன. அதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட்டது.
பேருந்தைவிட்டு இறங்கி கடைத்தெருவில் நுழையும்போதே என் கண்ணில் பட்டது தெருவெங்கும் காட்சி தந்த குப்பைக்குவியல் தான். தூய்மைப் பணியாளர்கள் கடைவீதியைக் கடைகள் திறப்பதற்கு முன்பே சுத்தம் செய்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
காலை 9 மணியிலிருந்து கடையைத் திறக்கும் வணிகர்கள், முதல் நாள் கடையில் சேர்ந்த குப்பைகளைக் கடைத்தெருவில் கொட்டுவதால் கடைவீதியே குப்பையாகக் காட்சி தருகிறது.