

தனியார் பண்பலையின் ஒலிபரப்பில் ஒரு வாரமாக ஓர் அறிவிப்பு அதகளப்படுத்துகிறது…
"தீபாவளித் திருநாளில் நமது ‘நாங்க வேறெ மாதிரி‘ பண்பலை ஒலிபரப்பவிருக்கும் சிறப்பு நிகழ்ச்சி - ‘இது வெற்றிடம் அல்ல…!‘
‘தங்கமங்கை நகைமாளிகை‘ வழங்கும் விளம்பரதாரர் நிகழ்ச்சி.
நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்... உண்ட மயக்கம் – சரவெடி முழக்கம் – ரஜனி புதுப்படம் என்ற காரணங்களை அடுக்காமல் நிகழ்ச்சியை கவனமாகக் கேளுங்கள்… நேயர்களுக்கு பரிசுமழை காத்திருக்கிறது…”
அப்படியென்ன சிறப்பு நிகழ்ச்சி என்பதை அறிந்துகொள்ள அந்த நிறுவன ஊழியர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள நேயர்கள் படையெடுக்கிறார்கள்.
“தலைமை நிர்வாகியைத் தவிர எங்களில் யாருக்குமே நிகழ்ச்சியின் வடிவமைப்பைப் பற்றித் தெரியாதே...” என்பதே பதில்!
“யாரெல்லாம் நடிக்கிறாங்க, நாடகமா அல்லது நேர்காணலா 'எந்த நட்சத்திரம்‘ னு பேரைக் குறிப்பிட்டு அறிவிக்கக்கூடாதா... வ்யூவர்ஷிப் எகிறுமே“ என்று முன்னாள் ஊழியர் யோசனை தெரிவிக்கிறார்.
நாளிதழ் ஒன்று அரைப்பக்கக் கட்டுரையை வெளியிடுகிறது…