

“ஏங்க கதவ திறங்க, திறங்க" என்று உள்புறமாகப் பூட்டியிருந்த படுக்கையறையின் கதவை, உள்ளங்கைகள் சிவந்து போக, விரல் முட்டிகள் வலிக்கத் தட்டினாள் கதிஜா.
உள்புறமாகப் பூட்டியிருந்த படுக்கையறையின் கதவு திறக்கப்படவில்லை. உச்சக்கட்டப் பதற்றத்தில் கதிஜா குரலுடைத்துக் கத்தினாள்! அவளது அலறல், காயம்பட்ட பறவையின் கதறலாய் ஒலித்தது.
“ஏங்க இப்படிச் செய்றீங்க? எல்லாத்தையும் பேசிக்கலாம். நீங்க செய்யறது பாவம், நாங்க என்ன குற்றம் செஞ்சோம்! எப்படி மனசு வந்தது உங்களுக்கு? கொஞ்சம் நம்ம பசங்களை நினைச்சுப் பாருங்க. இந்த முடிவு தவறுன்னு புரியும். இப்ப கதவ திறக்கப் போறீங்களா இல்ல, நான் அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரையும் கூப்பிடட்டுமா?”
ஐந்து நிமிடங்கள் யுகங்களாய் நகர, படுக்கையறையின் கதவு திறக்கப்பட்டது. சோர்ந்து, களைத்து, உயிரை யாரோ உறிஞ்சி எறிந்தது போன்றதொரு முகத்துடன், சாவின் பயத்துடன் ஹக்கீம் அறையிலிருந்து வெளியே வர, மனைவி கதிஜா ஓடிப்போய் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள்.