

வீட்டிற்குள் வந்து புத்தகப்பையை பொத்தென்று போட்டு கட்டிலில் உட்கார்ந்தான், சதிஷ்.
இதைப்பார்த்த ஜெயந்தி, “சதீஷ்சு குட்டி என்னாச்சு..? பேக்க எதுக்கு டொம்முனு போடுற.. கால் மொகத்த கழுவிட்டு வா அம்மா ஒனக்கு புடிச்ச பணியாரம் சுட்டுருக்கேன்..!”
உம்மென்றே இருந்தான்…
மகனின் பக்கத்தில் சென்று தலைமுடியை கோதியவாறு, “என்னப்பா ஆச்சு..?”
“ம்மா.. காது குத்தி குத்தி வலிக்குதும்மா..!”
காதில் டார்ச் லைட் அடித்து எதுவும் இருக்கிறதா என்பதை பார்த்த பின் காதில் மூன்று சொட்டு தேங்காய் எண்ணெயை ஊற்றினார். ஒரு பக்கமாக சதீஷ் கட்டிலில் படுத்துக்கொண்டான்.
“ஒன்னுல்லப்பா.. அப்பா வந்ததும் ஆஸ்பத்திரி கூட்டிப்போக சொல்றேன்.”
06:30 மணியளவில், சுந்தரேசன் வேலை முடிந்து சைக்கிளில் வீட்டின் முன் வந்து இறங்கினார். சத்தம் கேட்டு வெளியே வந்த ஜெயந்தி, “ஏங்க.. பையனுக்கு காது ரொம்ப வலிக்குதா ஆஸ்பத்திரி கூட்டிப்போங்க..!”
சுந்தரேசன் கலக்கத்தோடு, சட்டைப் பையிலிருந்த இருபது ரூபாய் நோட்டை எடுத்து என்னிடம் காசு இல்லை என்பதை சொல்லாமல் சொன்னார்.
இதைப் புரிந்துக் கொண்ட ஜெயந்தி சமைக்கும் இடத்திலுள்ள ஒவ்வொரு டப்பாவையும் பார்வையிட்டார், 80 ரூபாய் வந்தது. உடனே சித்தி வீட்டிற்கு சென்று சித்தியிடம் 300 ரூபாய் பணத்தை கேட்டார்.
“இப்பதான் வெளக்கு பொருத்துனேன்..! இன்னைக்கு வேற ஆடி வெள்ளிக்கிழமயா இருக்கு. திடீர்னு பணம் கேட்டு வந்திருக்க.. இப்ப நா என்ன பண்ண..?” என்று சித்தி மலுப்பினார்.
உடனே தன் கூட வேலை பார்க்கும் நல்லம்மா வீட்டிற்குச் சென்று பணத்தைக் கேட்டார்.
உடனே நல்லம்மா 500 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டார். பணத்தை வாங்கிக் கொண்டு, வீட்டில் கணவனிடம் கொடுத்து மகனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இருட்ட ஆரம்பித்தது. சுந்தரேசன் ஒரு கையில் டார்ச் லைட்டைப் பிடித்தவாறு சைக்கிளை ஓட்டிச் சென்றார்.
போகும்போது, “சதீஷ் யாராவது காதுல கீதுல குத்திட்டாங்களா?”