

பாலக்காடு தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அந்த இரவு நேரத்திலும் ஒரு தேனீக்கூடு போலவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பகல் நேரத்துப் புகார்களைக் காட்டிலும், இரவு நேரத்து அவசர அழைப்புகள் எப்போதுமே ஒருவித படபடப்பை உண்டாக்கும். வயர்லெஸ் செட்களின் இரைச்சல், லாக்-அப்பில் இருக்கும் ஒருவரின் புலம்பல், ஒரு மூலையில் அமர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் இரு தரப்பினர் என அந்த இடமே பரபரப்பில் இருந்தது. இன்ஸ்பெக்டர் கதிர் தன் மேசையிலிருந்த கோப்புகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, லேண்ட்லைன் போன் அலறியது.
"எஸ்! இன்ஸ்பெக்டர் கதிர் ஸ்பீக்கிங்."
மறுமுனையில் ஒரு நடுக்கமான குரல் கேட்டது. "சார்... குன்னத்தூர் மேடு 24-வது வார்டு சாய்ராம் பிளாட் செக்யூரிட்டி பேசறேன். இங்கே நாலாவது மாடியில கார்னர் பிளாட்ல ஒரு பெண் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்துல கிடக்கிறாங்க சார். சீக்கிரம் வாங்க சார்!"
செய்தியைக் கேட்ட அடுத்த பத்தாவது நிமிடத்தில், கதிர் இரண்டு கான்ஸ்டபிள்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
அது ஒரு பழைய பாணி அடுக்குமாடி குடியிருப்பு. நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் அந்த வளாகத்தின் நாலாவது மாடியில், கதவு உடைக்கப்பட்ட நிலையில் ஒரு பிளாட் இருந்தது. உள்ளே நுழைந்த கதிர், ஹாலில் அமர்ந்து தலையில் கை வைத்து அழுது கொண்டிருந்த ஒரு இளைஞனைப் பார்த்தார்.
இன்ஸ்பெக்டரை பார்த்தும் "என் பேரு மோகன் சார். என் மனைவி ராஜி... அவங்களை யாரோ கொன்னுட்டாங்க சார். ஒரு லட்சம் பணத்தையும், பத்து பவுன் நகையையும் கொள்ளையடிச்சுட்டுப் போயிட்டான் அந்தப் பாவி!" என்று கதறினான்.
"நீங்க வீட்டில் இல்லையா? எங்கே வேலை செய்றீங்க?"
"நான் இங்க கல்பாத்தியில ஒரு சாப்ட்வேர் கடையில வேலை பார்க்கிறேன் சார். காலையில ஒன்பது மணிக்கு ஆபீஸ் போனா, வேலை முடிஞ்சு வர எட்டு மணி ஆகும். இன்னைக்கு வந்து பார்த்தப்போ... எல்லாம் முடிஞ்சு போச்சு சார்," என்றான் மோகன்.
அவனது கண்களில் தெரிந்த பயமும் சோகமும் கதிரைச் சிந்திக்க வைத்தன.