
கோவிலுக்குச் செல்லும்போதே வளாகத்தினுள் கோவிலின் இடது பக்கவாட்டுப் பின்பகுதியில் அம்புக்குறியுடன் அந்தப் பெயர்ப் பலகை இருப்பதை ஜெயபால் கவனித்திருந்தார். மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்த அதில், மெமரி லேன் எனும் ஆங்கிலச் சொற்கள் கவனத்தை ஈர்த்தன. ஆனால் அப்போது கோவிலில் பூஜை நடந்துகொண்டிருந்தது. அது முடிவதற்குள் சென்று வழிபட வேண்டும் என்கிற அவசரத்தில் அவரும் மற்றவர்களும் இருந்ததால் இதை விசாரிக்க அவகாசம் இருக்கவில்லை.
கேரளத்தில் புனிதச் சுற்றுலா சென்றிருந்த அந்தத் தமிழகக் குழுவினர், தெற்கே திருவனந்தபுரம் முதல் வடக்கே மலப்புறம் வரை முக்கியமான சில ஆலயங்களைத் தரிசித்து வழிபட்டு வந்துகொண்டிருந்தனர். இதுதான் கடைசி. இது முடிந்ததும் ஊர் திரும்புதல்.