

மனித உடலின் பெருவனத்தில் நூற்றுக் கணக்கான உணர்ச்சிகள் வசிக்கின்றன. சில வெளிப்படையாக வாழ்பவை; சில மறைந்தும், பதுங்கியும் வாழ்பவை. இன்னும் சில, வனத்தின் அடர் பகுதிக்குள் தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கும். உணர்ச்சிகளில் பகல்வாழிகளும் உண்டு, இரவுவாழிகளும் உண்டு.
அத்தனை உணர்ச்சிகளுக்கும் மூலகம், நவரசங்கள். ஒன்றுக்கொன்று மாறுபட்ட அவை தனித் தனியே வாழ்ந்துகொண்டிருந்தன. இவற்றுக்கிடையே நட்பு உணர்ச்சிகளும், பகைமை உணர்ச்சிகளும் உள்ளன. சிலது அவ்வப்போது மட்டும் தேவையானவற்றுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைக்கும்.
கருணையும் சாந்தமும் நெருங்கிய தோழிகள். காதல், இவர்களின் அண்டை வீட்டுக்காரி.
கோபமும் வீரமும் உடன் பிறந்த சகோதரர்கள். பயம் இவர்களின் தூரத்து உறவினன்.
வியப்பு, நகைச்சுவை, அருவருப்பு ஆகியவை மிகுந்த தனித்துவம் கொண்டவை. எனினும், வியப்பு எல்லோருடனும் நல்லிணக்கமாகப் பழகக் கூடியது. நகைச்சுவையை எல்லோரும் விரும்பினார்கள். அருவருப்பு மட்டும் ஒதுக்கப்பட்ட அனாதையாக வாழ்ந்துவந்தது. ஆனால், காதலுக்கும் அதற்கும் ரகசியக் கள்ளத்தொடர்பு இருந்தது. வனமடங்கிய நிசிகளில், காதல் பதுங்கிப் பதுங்கி அருவருப்பின் வீட்டுக்குச் செல்வதை, அண்டை வீட்டுக்காரிகள் இருவரும் ஜன்னல் இடைவெளிகளூடே பார்த்திருக்கின்றனர்.