

கார்த்திக் அலுவலகத்திற்குப் போன திவாகர் அங்கிருந்த பெயர் பலகையைப் பார்த்து திகைத்தான். அங்கு பல வண்ணக் கரை வேஷ்டிகளுடன் நிறைய நபர்கள் வந்திருந்தனர்.
கார்த்திக்கை தனியே அழைத்து “என்ன கார்த்திக். இப்ப புது கம்பெனி ஆரம்பிச்சிருக்கியா. என்ன? அது என்ன, பயிற்சிக் கல்லூரி?” என்று கேட்டான்.
"ஆமாம் திவாகர் தேர்தல் வருதில்ல. நாமளும் நாலு காசு பார்க்க வேண்டாமா?” அதுதான் இந்த முயற்சி என்றான்.
"நீ போன தேர்தலுக்கு ஆரம்பித்த 'வேட்பாளர் உதவி மையம்' என்ன ஆச்சு" என்று கேட்டான் திவாகர்.
“அது பெரிய கதை திவாகர். வேட்பாளர்களுக்கு பேசறதுக்கு எழுதிக் கொடுக்கிறது, வீடு வீடாகப் போய் வோட்டுக் கேட்க உதவிக்கு ஆட்களை கொடுக்கிறது அப்படின்னு ஆரம்பிச்சேன். பொதுக் கூட்டங்களுக்கு ஆட்களை ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்டாங்க. அவர்கள் தேவை 100, 200, 300 என்று ஆண்களும், பெண்களும். படிப்பறிவு முக்கியமில்லை. இப்படி போறவங்க கூட்டத்திலே மேடைக்கு முதல்ல சில இடத்தில உக்காந்து இருப்பாங்க. மீட்டிங்கில பங்கேற்க பெரிய தலைங்க வரும் பொழுது வாழ்க, ஒழிக கோஷம் போடறது இவங்க வேலை. இந்தக் கூட்டம் இல்லைன்னா மீட்டிங் நல்லா இருக்காது.
இதில நல்ல பணம். அப்படின்னு ஒத்துக்கிட்டேன். கட்சி பாகுபாடு இல்லாம கேட்டவங்களுக்கு ஆட்களை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தேன். பணமும் ஒழுங்காக வந்துக்கிட்டிருந்தது. அப்போ எங்க ஆளு பண்ணின சொதப்பல்ல மையத்திற்கு மூடு விழா பண்ண வேண்டி வந்தது.”
“என்னப்பா நடந்தது?” என்று கேட்டான் திவாகர்.