அஞ்சலி: டெல்லி கணேஷ் - தனியான நடிகன்நீ! தரமான மனிதன்நீ!

Delhi Ganesh
Delhi Ganesh
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

அஞ்சலி:

கணேசரை வணங்கித்தான்

காரியங்கள் தொடங்கிடுவோம்!

கணபதியின் பெயரோடு… 

கனமான நம்நாட்டின் 

தலைநகரின் நாமத்தையும் 

தாங்கி நின்ற

தனியான நடிகன்நீ!

தரமான மனிதன்நீ!

நானூறு படங்களையும் 

தாண்டி நடித்தவன்நீ!

பல்வேறு மொழிகளையும் 

பாங்காய் அறிந்தவன்நீ!

ஆரவாரம் அதிகமில்லா 

அமைதியான உன்நடிப்பில் 

ஊரே ஒன்றிவிடும்!

உலகே அமைதியுறும்!

நெல்லைச் சீமையிலே 

நிலவாய்ப் பிறந்தநீ

விமானப்படை தனிலே

விருப்பமுடன் சேர்ந்திட்டாய்!

நாடகத்தில் உன்வாசம் 

நாட்டினிலே பரவிடவே

வெள்ளித்திரை உன்னை

விரும்பியே ஏற்றது!

நாயகனின் பெருமைக்கும்

மைக்கேல்மதன காமராஜன்

சிறப்படைந்து புகழ்பெறவும்

சிந்துபைரவி சினிமா

சிகரத்தை எட்டிடவும் 

அவ்வைசண்முகி படம்

அகிலத்தைக் கவர்ந்திடவும் 

அபூர்வச் சகோதரர்கள் 

அதிசயத்தைப் பரப்பிடவும் 

கிரியா ஊக்கியாய் 

கிளர்ந்தெழுந்து நின்றவன்நீ!

சப்தம் அதிகமின்றிச் 

சாதித்துக் காட்டியவன்நீ!

இன்னும் பலசொல்ல

இடமில்லை நாயகனே!

இதையும் படியுங்கள்:
சினிமா ரசிகர்களின் மனங்களில் என்றும் வாழும் நடிகர் டெல்லி கணேஷ்!
Delhi Ganesh

இவையனைத்தும் இருந்தாலும் 

எங்கள் இதயத்தில் 

என்றும்நீ வாழ்வதற்கு 

வேறொன்று விதையாய்… 

வேராய் நிற்கிறது!

அது என்னவென்று 

அகிலம் நன்கறியும்!

திகட்டாத் திருவிழாவாம்

தீபாவளி வருமுன்னே

ஆசிரமக் குழந்தைகளும்

ஆனந்தமாய்க் கொண்டாட 

அன்பு வேண்டுகோளை 

அமரனே நீவைப்பாய்!

அடுத்தஆண்டும் தீபாவளி 

ஆர்ப்பரித்து வந்துவிடும்!

உன்குரலைக் கேட்காது

உள்ளங்கள் வாடிநிற்கும்!

logo
Kalki Online
kalkionline.com